நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Friday, December 31, 2010

இது போதுமா???

வேண்டும் என்னும் போது மழை தூற மழை நிரம்பிய ஒரு மரம்...
வேண்டுவதெல்லாம் தர ஒரு குப்பியிலடைபட்ட ஒரு பூதத்தின் விடுதலை உங்களால்....
வாசிக்க வாசிக்க முடியவே முடியாத ஒரு பிடித்த நாவலாசிரியரின் ஒரு நாவல்....
எண்ணுகிற திசையில் வாழ்வைத் திருப்பிக் கொள்ளும் சவுகரியம்....
மனதைத் துள்ள வைக்கும் மனதுக்கினிய இசை எந்நேரமும் .....
திரும்புகிற பக்கமெல்லாம் ஆத்மார்த்தமான நட்புகள்.......
இது தவிர வேறென்ன வேண்டும் வாழ்த்துக்களாய்!!!
இவையத்தனையையும் பெற்றுக் கொள்ளுங்கள் இந்தப் புது வருஷத்திலும்...அடுத்தடுத்து வரும் வருடங்களிலும்!!!
படம்:Google:Thanks!

Monday, December 27, 2010

சும்மாயிருப்பதுவும் சுகம்தன்னே....முடிந்தால்!

சும்மாவாச்சுக்கும் சும்மாயிருப்பதைத் 
தேர்ந்தெடுத்திருக்கிறேன் இன்று...
மனதொன்றி எதிலும் 
மனம் லயிக்கவில்லை

எப்போதும் கைகொடுக்கும்
இசையும்,புத்தகமும்,
தேனீரும்,மழையும் கூடக்
கைவிட்டு விட்டது....

சும்மாயிருக்கும் போது
வீடு அப்படியே சுருட்டி 
உள்ளிழுத்துக் கொண்டது...
கொடிக் கயிறு துணிமணிகள்
கழுத்தை நெறித்தது...

ஒழுங்கற்ற அலமாரிகள் என்னையும் 
உள்ளிழுத்து அடைத்துக் கொண்டது....
குப்புறப் படுத்திருந்த புத்தகங்களும்
பத்திரிகைகளும், தரை விரிப்பும்
கைப்பிடித்துக் கொண்டன...


எத்தனை கவனமாயிருந்தாலும்
சும்மாயிருக்க முடியாமல் 
சிறகசைத்துக் கொண்டேயிருக்கும்
வண்ணத்துப் பூச்சியைப் 
பார்த்துக் கொண்டே

கொஞ்சம் எழுத்துக்களைச் 
சேர்த்தும் பிரித்தும்...
கொஞ்சம் வார்த்தைகளைச் 
சேர்த்தும் பிரித்தும்...
சும்மாயிருக்கவும் முடியாமல் 
தன்னையே உருவாக்கிக் 
கொண்டது இந்தக் கவிதை ...

Friday, December 17, 2010

நானும்......!

ஆற்றோரம் ஒதுங்கிக் கிடக்கும் இறந்த மீனைப்
பார்த்தும் பாராதது போல் .....
கைகோர்த்து நடக்கும் போதும்.....

செடியிலிருந்து உதிர்ந்து கிடக்கும்
கவிழ் பூக்களின் மேல் பாதம்
பதிக்க நேரும் போதும்....

மரத்தினடியில் கசக்கிப் போட்ட காகிதம்
ஒரு மரம் தன் வரலாறைக்
கூறும் போதும்

கிறீச்சிடும் கதவு போடும்
கூப்பாட்டைக் கேட்டும் கேட்காமலும்
எட்டி உதைத்து மூடும் போதும்....

கண்ணாடிக் குடுவைக்குள்
முட்டி மோதும் மீனின்
குட்டி வாய்க்குத் தேவை
உணவெனத் தூவும் போதும்....

இருட்டுக்கு ஒளியேற்றும்
மெழுகுவர்த்தியின் சோகம் அறியாமல்
விரல் நீட்டி விளையாடும் போதும்....

நீங்களும் என்றேனும் எங்கேனும்
ஒரு சோகப் பாடலை மனதுள்

ஒரு நாள் பாடியிருக்கலாம்....
நானும்......

Sunday, December 12, 2010

தமிழில் சிறுகதை எழுத ஆர்வமுள்ளவர்களா????

ன்றைக்கு நம்மில் மாற்றுத்திறனாளிகள் பலர் பல்வேறு சாதனைகளை செய்து புகழ்படைத்துள்ளார்கள். அவர்களை மேலும் ஊக்குவிக்கும் விதமாக மதுரையை சேர்ந்த 'அதிதி'( அன்னை திறனேற்ற பயிற்சி திண்ணை) என்ற அமைப்பு தமிழ்சிறுகதை ஆர்வமுள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு போட்டியை அறிவித்துள்ளது.
மாற்று திறனாளிகள் மறுவாழ்வு பற்றிய விழிப்புணர்வு வளரும் நோக்கத்துடன் இந்த போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு   -'இறைவன் கொடுப்பது ஒரு வாழ்வு, மனிதன் கொடுப்பது மறுவாழ்வு'தேர்வு செய்யப்படும் சிறந்த 3 சிறுகதைகளுக்கு பரிசும், பாராட்டும் வழங்கவுள்ளது இந்த அமைப்பு.
மேலும் இது பற்றிய விபரங்களுக்கு
வி.ஆர்.கணேஷ்.
நிர்வாக இயக்குநர்,
அன்னை திறனேற்ற பயிற்சி திண்ணை.
93441 25161 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இயற்கையாகவே மனிதருக்கு இரங்கும் சிந்தனை கொண்டவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டு உஙகள் திறனை வெளிக்கொண்டு வரலாம். எடுங்கள் பேனாவை, எழுதுங்கள் உங்கள் மனவோட்டத்தை.......நன்றி!
நன்றி....விபரங்களுக்கு....

Thursday, December 9, 2010

மழையும் மழை சார்ந்த நிகழ்வுகளும்--2

முகம் நனைக்காமல் சில்லெனத் தூவும் புள்ளி மழை...
புள்ளி வைத்து ஒரு சின்ன வட்டம் போடும் சின்ன மழை.
சுள்ளென்ற தெறிப்போடு ஒரு துளியை உயர வைத்து அதிர்ந்து அடங்கும் ஒரு மழை...வரும் போதே சீறிச் சட்டென ஒரு துளியால் அறைந்து விடும் ஒரு பெருமழை.
மழையினூடே நனைவது ஒருவகை சுகம் என்றால் நனையாமல் மழை சார்ந்த நிகழ்வுகளை ரசிப்பது ஒரு சுகம். அதில் சில...
முதல் துளியைத் தவிர்க்க அவசர அவசரமாய் அத்தனை ஊறுகாய் வாளிகளையும் ப்ளாஸ்டிக் ஷீட்டினால் மூடும் தள்ளுவண்டி வியாபாரிக்கு உதவும் பூக்காரப் பாட்டியைப் பிடித்தது....


தண்ணீரில் சீறி பைக்கில் வந்த தாடிக்காரன் தேங்கிக் கிடக்கும் மழைநீரை ஒட்டி குட்டி ரெயின் கோட் போட்ட பூக்கள் பார்த்து வேகம் குறைத்து மெதுவாகப் போனது பிடித்தது.....

நின்று போன ஸ்கூட்டியைத் தண்ணீருக்குள் தள்ள முடியாமல் அந்தப் பெண் தள்ள ஓடி வந்து உதவிய வாழைப்பழ வண்டிக்காரனைப் பிடித்தது.

ஒரே குடைக்குள் மூன்று பேர் நின்றிருந்தும் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த இன்னொரு தோழியை...."நீயும் வாடி" என்று சேர்த்துக் கொண்ட தோழியர் கூட்டம் பிடித்தது....


அக்காவும் தங்கையுமாயிருக்கலாம்....கைகோர்த்தபடி ஒவ்வொரு தண்ணீர்த் தேக்கத்திலும் குதித்து...ஒவ்வொரு மரமாய் உலுக்கி மரமழை அனுபவித்த குட்டீஸை ரொம்பப் பிடித்தது.

"சூப்பரா ஒரு டீ குடிக்கலாம் வாடா" எனத் தோள் மேல் கையைப் போட்டபடி போகும் இளைஞர்களையும் பிடித்தது.....

ஸ்கூட்டரியில் விரைந்த ஒரு ஜோடியின் துப்பட்டா சக்கரத்துக்கு அருகாக பறப்பதைக் கண்ட பைக்கில் போன ஒரு இளைஞன் "ஏங்க உங்க துப்பட்டா....கவனம் என்று போகிற போக்கில் எச்சரித்தது பிடித்தது...


அதைவிடவும் சரியான இடத்தில் நின்று மக்களை ஏற்றி இறக்கிச் சென்ற பேருந்து ஓட்டுநரைக் கூட அன்று ரொம்பப் பிடித்தது...


மழையில் மனிதர்கள் அழகானவர்களாயும் மனிதர்களாகவும் இருந்தது நிரம்பப் பிடித்தது.

Thursday, November 18, 2010

வழக்கத்திற்கு மாறாக.....

வழக்கத்திற்கு மாறாக அன்று
கடல் வேறு வேலையில்லாமல்
என் காலடியில் சிப்பிகளை இழுத்து
வந்து கொட்டிக் கொண்டிருந்தது......

கடலுக்குள் இது உனது
இது எனது என்று பாகம்
பிரித்துக் கொண்ட கதை போல
சிப்பிகளைக் கடலும் நானும்
பங்கிட்டுக் கொண்டோம்.....

என் பங்குச் சிப்பிகளை
யாரும் பார்க்காத போது
வானத்தில் எறிந்துவிட்டேன்.....
வானம் அமைதியாக எடுத்துத்
திருப்பிக் கொடுத்தது விண்மீனாக


வழக்கத்திற்கு மாறாக அன்று
மௌனமாக கடல் என்னைப்
பார்த்துக் கொண்டிருந்தது.......

Tuesday, November 9, 2010

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்......7

பவுடர் பூசிக் கொண்டன சுவர்கள்
மாலையிட்டுக் கொண்டன வாசல்கள்...
பொட்டு வைத்துக் கொண்டன கதவுகள்...
புதுச் சட்டை மாட்டிக் கொண்டன இருக்கைகள்...
அலமாரிகள் பழைய சேலை உடுத்திக் கொண்டன.....

பரணிலிருந்து குத்து விளக்குகளும்
பித்தளை அண்டாக்களும் தரை இறங்கின....
கோல நோட்டுக்கள் தேடப்பட்டன!
கலர்ப் பொடிகள் கிண்ணங்களுக்குள்
குடி புகுந்தன......

ஒட்டடைக் கம்புகள் சுறு சுறுப்பாகின....
கொஞ்சம் தூசியையும் நிறைய
சிலந்திகளையும் வீட்டை விட்டுத் துரத்தின...
கரப்பான் பூச்சிகள் வீடில்லாமல் அங்குமிங்கும் ஓடின....

தீபாவளிக் கலாட்டாவுக்காகக்
கலைத்துத் தூக்கியெறியப் பட்டவைகளுள்
ஒரு குருவிக்கூடும் சில முட்டைகளும் அடக்கம்......
கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்......

Wednesday, November 3, 2010

இதுலெ இருநூறு அதுலெ முன்னூறு!!!

இதுலெ இருநூறு அதுலெ முன்னூறு....
150 வரைக்கும் இதுலெ நூறுன்னா அதுலேயும் நூறுன்னும் ,இதுலே நூற்றியம்பதுன்னா அதுலேயும் நூற்றியம்பதுன்னும் இருந்தது.திடீர்னு இந்த ரேஷியோ மாறிப் போச்சு!.
                       பதிவு எண்ணிக்கையையும்,பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையையும் சொல்றேன்.இப்போ 200 பதிவுக்கு முன்நூறு பின் தொடர்பவர்கள்!சரி நம்ம எழுதறதைக் கொறைச்சுட்டோம்!!! நம்மளைப் படிக்கிறவங்க கூடிட்டாங்க போல!!!!
முன்னூறு பேருக்கும் நன்றி!!!!
இன்னும் கொஞ்சம் எழுதறதைக் குறைச்சா இன்னும் நிறையப் பேர் பின் தொடர்வாங்களா???

Tuesday, November 2, 2010

என் நேரக் கணக்கு.....

என் நாட்குறிப்பில்
பத்திரப் படுத்தும் நொடிகளுக்கும்
களவு போகும் நொடிகளுக்கும்
கணக்கு சரியாகவில்லை.....

எப்போதும் போல
இருபத்தி நாலு மணி
நேரத்திற்குப் பதிலாக
இருபத்தியொரு மணியாகக்
குறைந்திருந்தது....

கணக்கில் வராத
மணித்தியாலங்களைத்
தேடித் தேடிக் கிடைக்காமல்.....

கடிகார முள்ளை
மூன்று மணி நேரம்
திருப்பி வைத்து விட்டுத்
தூங்கியெழுந்தால்

அன்றைய கணக்குக்கு
இருபத்தியேழு மணி
நேரம் கிடைத்தது!!!!

ம்ம்ம்...இன்றும்
பத்திரப் படுத்தும் நொடிகளுக்கும்
களவு போகும் நொடிகளுக்கும்
கணக்கு சரி வரப் போவதில்லை!!!

Monday, October 25, 2010

நான் என் ஹீரோவைத் தேர்ந்தெடுத்தாச்சு!!!நீங்க?

 விசு மக்களரங்கம் பார்த்தவுடன் பதிந்தது.....
CNN அமெரிக்கத் தொலைக்காட்சி உலகம் முழுவதுமான 'நிஜ கதாநாயகர்களை' அடையாளம் கண்டு வருடந்தோறும் விருது வழங்கிவருகிறது. அந்த விருதை தனது தன்னலமற்ற சமூக சேவைகளுக்காக உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் மதுரை N.கிருஷ்ணன்..முதல் இடத்தை அடைவதற்கு இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது.முதல் இடத்தில் தேர்ந்தெடுக்கப் பட்டால் இந்திய ரூபாய் மதிப்பில் 45 லட்சம் அக்ஷயா ட்ரஸ்ட்டுக்குக் கிடைக்கும் அது மேலும் மேலும் கிருஷ்ணனின் சேவைகளுக்கு உதவ முடியும். திரு.கிருஷ்ணன்.யார் இந்த கிருஷ்ணன்?
              இவர் மதுரை மாநகர தெருக்களில், மனநிலை குன்றிய 400 பேருக்கு வருடம் 365 நாட்களும், நாளுக்கு மூணு வேளையுமாக உணவு வழங்கிக் கொண்டு இருக்கும் இவருக்கு அப்படி ஒன்றும் வயதாகி விடவில்லை. வெறும் 28 தான். கடந்த ஏழு வருடங்களாக, அக்‌ஷ்யா டிரஸ்ட் என்னும் தொண்டு நிறுவனம் மூலமாக இதை செய்து வருகிறார்.
கிருஷ்ணனின் எல்லை உணவு கொடுப்பதோடு முடிந்து விடவில்லை.இன்னும் பரந்து இருக்கிறது. கேட்பாரற்று இருக்கும் அனாதை பிணங்களுக்கு இறுதி சடங்கு செய்யும் பணியையும் செய்து வருகிறார் கிருஷ்ணன்.பிணத்தை claim செய்து, குளிப்பாட்டி, உரிய முறையில் நல்லடக்கம் தருவதுமாக இருக்கும் இவரை, மதுரை முனிசிபாலிடியில் இருந்தும், பொது மருத்துவமனையில் இருந்தும், இறுதி சடங்கு செய்ய சொல்லி அழைக்கிறார்கள்.

நான் ஹீரோவைத் தேர்ந்தெடுத்து விட்டேன்! நீங்க???
இங்கே போய்த் தேர்ந்தெடுங்கள்!!!
நவம்பர் 18 வரை ஓட்டுப் போடலாம். !
http://heroes.cnn.com/vote.aspx 
எவ்வ்ளவோ ஓட்டுப் போட்டிருக்கோம்!இதுக்குப் போடமாட்டீங்களா?

நன்றி!

http://www.akshayatrust.org/
http://idlyvadai.blogspot.com/2009/08/blog-post_15.html
http://edition.cnn.com/2010/LIVING/04/01/cnnheroes.krishnan.hunger/index.html
http://ithumadurai.blogspot.com/2010/05/blog-post_08.html
http://agalvilakku.blogspot.com/2010/10/blog-post.html
http://itsmeena.wordpress.com/

Tuesday, October 19, 2010

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்!-7

நிலம் வாங்கியவுடன் சிலமுறை....
வீடு கட்ட ஆரம்பிக்கும் போது பலமுறை....
அப்புறம் தோன்றும் போதெல்லாம் அடிக்கடி...
ஓடி ஓடிப் போய்ப் பார்த்தாச்சு

இது உன் ரூம்....இது எங்க ரூம்
இது பாப்பாவுக்கு....
இங்கே டி.வி....
இங்கே பூந்தோட்டம்...
இங்கே பூனைக்கு மெத்தை.....
ரெண்டே தென்னைமரமாவது....
ஒரே ஒரு கருவேப்பிலை மரமும்....
கொஞ்சம் ரோஜாச் செடிகளும்...

இப்படிக் கனவுகளுக்கும்...நிஜங்களுக்கும்
பாலம் கட்டிக் கொண்டே
காலம் ஓட்டியாச்சு....

கடைசியில் கிடைத்தது...
ஐந்தாறு வீடுகளுக்கு மேல்
ஒரு கூடு.....
ஜன்னலில் தெரியும் கொஞ்சூண்டு வானமும்....
ஜன்னல் விளிம்புகளில் ரோஜத் தொட்டிகளும்...

மரக் கிளையில் கூட்டிற்கும்
பரணில் கட்டியிருக்கும் கூட்டிற்கும்
வேறுபாடு குருவிக்கென்ன தெரியவா போகிறது???
மழைக்கும் வெயிலுக்கும் ஒதுங்க ஒரு இடம்தானே?

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்!
இது தமிழ்க்குறிஞ்சியில்!!

Thursday, October 14, 2010

சாலை சொல்லும் கதைகள்!

கொஞ்சம் ரத்தச் சிதறல் ....
அச்சோ என்ன விபத்தோ்....

குப்புற விழுந்திருக்கும் செருப்பு ...
அடடா.....யாருக்கு என்னவோ....

உடைந்த ஹெல்மெட் சிதறல்....
உயிரிருக்குமா ?போயிடுச்சோ?

கூடியிருக்கும் கூட்டம்....
காரும் சைக்கிளுமா?லாரியும் பைக்குமா?

108இன் திடீர் அலறல்....
எங்கே???என்னாச்சோ?

கொஞ்சம் உதிர்ந்த பூவிதழ் ......
அய்யோ யார் மரணமோ ...

முதல் முதலாகப் பைக்கில் பிள்ளையைப்
பள்ளிக்கு அனுப்பிவிட்டு......ம்ம்ம்
நல்லதையே எங்கிருந்து நினைக்க????

Saturday, October 2, 2010

Taken for granted!

இதை எப்படித் தமிழ்ப் படுத்துதல் என்று தெரியவில்லை. இது எல்லோருடைய வாழ்விலும் இப்படி ஒருமுறையாவது நிகழ்ந்தே இருக்கலாம்.அலுவலகத்தில் ஒரு சின்ன பொருளை எடுத்துக் கொடுப்பவரிடம் கூட நன்றி சொல்ல மறப்பதில்லை.அனாவசியமாகக் கூட நிறைய நேரங்களில் Excuse Me கேட்டிருப்போம்.தும்மினால் கூட!
ஆனால் நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் நம்மை விரும்புபவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்கிறோம்
அது மனைவியாயிருந்தாலும்,கணவனாயிருந்தாலும்,பிள்ளைகளாயிருந்தாலும்,அக்கா தம்பியாக இருந்தாலும்,அண்ணன்,நண்பர்கள், அம்மா அப்பாவாயிருந்தாலும் ஒரு நன்றி என்ன?நமக்குச் செய்வதை,செய்ததை  உணர்ந்து கொண்டதாகக் கூடக் காட்டிக் கொண்டதில்லை.அல்லது இப்போ என்ன அவசரம் என்று நினைத்திருக்கலாம்.அல்லது மெல்லச் சொல்லிக் கொள்ளலாம் என நினைத்திருக்கலாம்.அல்லது நன்றி சொல்லி அந்நியப்படுத்த விரும்பவில்லை என்று சப்பைக் கட்டு கட்டியிருக்கலாம்.
ஆனால் உலகில் எல்லோரும் விரும்புவது பாராட்டையும்,அங்கீகாரமும் தான்.அது கிடைக்காத நிராசையினால்தான் கோபமும் வெறுப்பும்,பழிவாங்கும் எண்ணமும்.கூடவே வாழும் அம்மாவிடம் பேச நேரமேயில்லை.வெளிநாட்டிலிருந்து வந்த நண்பனுடன் ஒருவாரம் விடுப்பெடுத்துச் சுற்றமுடிகிறது.இதெல்லாம் என்ன?Taken for granted தானே???

எல்லா நாட்களையும் நாம் கொண்டாடுவதில்லை.பிறந்த நாளோ,தீபாவளியோ,காதலர் தினமோ ஒரு சிறப்பைப் பெறுவதைப் போல ஏன் எல்லா நாட்களும் கொண்டாடப்படுவதில்லை?தினம் குடிக்கும் தண்ணீர் பெறாத சிறப்பை எப்படிப் பழச்சாறும்,இளநீரும் பெற்றுக் கொள்கிறது?இதன் அடிப்படையைப் பார்த்தால் வெகு அருகாமையில்,அல்லது நினைத்த பொழுது கிடைக்கும் அல்லது எப்போதும் தொடர்புடைய ஒன்றைப் பற்றி நமக்கு அக்கறையில்லை.நம்முடைய நினைப்பெல்லாம் கிடைக்காத ஒன்றைப் பற்றியதாகவே இருக்கிறது.இது ஒரு மாயையோ?

நதி இழுத்துச் செல்லும் மணல்துகள்,சருகு,இலை,மீன்கள் போல இழுபட்டுக் கொண்டே இருக்கிறோம்.வாழ்க்கையில் ஓட்டம் நன்றுதான்.ஆனால் பந்தயத்தின் எல்லை நூலையும் அறுத்துக் கொண்டு என் கடமை ஓடுவதே என்னும் ஓட்டத்தை நிறுத்தி மூச்சு வாங்கலாம்.
கொஞ்சம் அக்கம் பக்கம் சுற்றிப் பார்க்கலாம்.நமக்கானவர்கள்,நம்மைச் சார்ந்தவர்கள் பற்றிக கவலைப்படலாம்.அவர்கள் செய்யும் சின்னஞ்சிறு வேலைகளைப் பாராட்டலாம்.நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமல் இன்றே அன்பு காட்டலாம்.ஒரு சிறு புன்னகை,ஒரு கைப்பற்றுதல,ஒரு தோளில் கை போடுதல்,முதுகைத் தட்டிக் கொடுத்தல் இவை செய்யும் மந்திரங்களை உணரலாம்.
Let us not take anything for granted!

Monday, September 27, 2010

உடனடித் தேவை....

என்னை இழுத்துச் செல்லும் ஒரு நதியும்
பறவையிறகு போல் மிதக்கச் செய்யும் காற்றும்
நிமிர்ந்து பார்க்க ஒரு வானமும்
உடனடித் தேவை....

நினைத்ததைக் கொடுக்கும் ஜீ பூம்பா பூதங்கள் சிலவும்
சொர்க்கத்துக்கு வழி தெரிந்த தேவதைகளும்
உண்மை பேசிக் கொள்ளும் மனிதர்களும்
உடனடித் தேவை....

கொஞ்சம் என்னைத் தொலைக்கும் வெயிலும்
கொஞ்சம் என்னை மீட்டுத் தரும் மழையும்
நான் தூவும் அரிசி கொத்தக் கொஞ்சம் குருவிகளும்....
பிடித்த கையில் ஒட்டிக் கொள்ளும் வண்ணங்களுக்காக
சில வண்ணத்துப் பூச்சிகளும்.......
உடனடித் தேவை....

Wednesday, September 15, 2010

இராஜஸ்தானத்து ராணிகளின் கதை--1





பான்கட் (Bhangarh)... சூரியன் உதிக்கும் முன்னும், சூரியன் மறைந்த பின்னும் அரசால் அனுமதி மறுக்கப்பட்ட ஒரு சிதிலமடைந்த சிறு நகரம்.

ஜெய்ப்பூரிலிருந்து அல்வர் செல்லும் வழியிலிருக்கும் இந்த சிறு நகரத்தை, உலகத்திலேயே பேய் ஆட்கொண்ட இடங்களில் முதன்மையானது என்கிறார்கள். இந்த இடம் பற்றி நிறைய கதைகளும் வதந்திகளும் உலவுகின்றன.
17-வது நூற்றாண்டின் முதல் பாதியில், 'பான்கட்'டில் அரண்மனை கட்ட முனைந்தார், ஆம்பர் கோட்டை மஹாராஜா மாதோ சிங். அதற்காக, அந்த இடத்தில் தியானம் செய்துகொண்டிருந்த பாபா பாலாநாத் என்ற துறவியிடம் அனுமதி கேட்டார், ராஜா.
அரண்மனை கட்ட அனுமதி தந்த அந்தத் துறவி, மன்னருக்கு ஒரு கண்டிஷனும் போட்டார். அதாவது, எந்தக் காரணத்தைக் கொண்டும் கட்டப் போகும் அரண்மனைகளின் நிழல், தான் தியானம் செய்யும் பூமியின் மேல் விழக் கூடாது என்றும், அப்படி விழுந்தால் அன்றோடு அனைத்தும் தரை மட்டமாகிவிடும் என்றும் சொன்னாராம். அதற்கு மன்னரும் கட்டுப்பட்டார்.
பின்னர், மன்னர் மாதோ சிங்கின் வழி வந்த பிந்தைய தலைமுறையினர், அந்த ஒப்பந்த விவகாரம் தெரியாமல், அரண்மணையின் நிழல் குறிப்பிட்ட இடத்தின் தரையில் படும்படியாக உயர்த்திக் கட்ட, அந்த சம்ராஜ்யம் ஒரே இரவில் தரைமட்டமாகியதாகியது என்கிறது ஒரு கதை.
*
மற்றொரு வரலாறு சொல்லும் கதை...
பாங்கட் கோட்டையின் மகாராணி ரத்னாவதி ராஜஸ்தானத்துப் பேரழகி. அவள் மீது மையல் கொண்ட சிங்கா சேவ்ரா எனும் ஒரு கொடிய தந்திரவாதி, அவளைத் தன்வசமாக்க முயற்சித்துக் கொண்டேயிருந்தான்.
ராணிக்கும் தந்திரவாதிக்கும் இடையில் நடந்த தாந்த்ரீக சண்டையில், அவன் அந்தப் பேரழகியைத் தன் மந்திர வலையில் வீழ்த்துவதற்கு முயற்சித்துக் கொண்டேயிருந்தான். ஆனால், ஒவ்வொரு முறையும் தோற்றுக் கொண்டேயிருந்தான். ஏனென்றால், ராணியும் தாந்த்ரீகக் கலைகளில் தேர்ச்சியடைந்தவள்.
ஒருநாள்.. ராணியின் வேலைக்காரி ராணிக்காக வாசனைத் தைலங்கள் வாங்குவதைக் கண்ட தந்திரவாதி, அந்த தைலத்தைத் தொட்டாலே ராணி மந்திரவாதியின் வசமாகும் ஒரு வித்தையை ஏவி விடுகிறான். இதைத் தெரிந்துகொண்ட ராணி, அந்த வாசனைத் தைலம் வைத்திருந்த கண்ணாடிக் குப்பியை பாறையாக மாற்றி அந்த மந்திரவாதி இருந்த குன்றின் மீது எறிகிறாள்.
அதைத் தடுக்க நினைப்பதற்குள் மந்திரவாதி மேல் உருண்டு விழுந்து தாக்கப்படுகிறான். உயிர் துறக்கும் நேரத்தில் தன் சக்தி அனைத்தையும் ஒருமுகப்படுத்தி, "நான் இறந்து விடுவேன்... ஆனாலும் ரத்னாவதி ராணியும் உயிரோடிருக்க மாட்டாள். அவள் மட்டுமல்ல... அவளைச் சார்ந்த யாரும் உயிரோடிருக்க மாட்டார்கள். அதுமட்டுமல்ல... இந்த சாம்ராஜ்யம், இந்தக் கோட்டை, அரண்மனை, வீதிகள், மக்கள்... அனைத்தும் ஒன்றுமில்லாமல் தரை மட்டமாகிவிடும். யாரும் நாளைச் சூரியனைப் பார்க்க மாட்டீர்கள்" எனச் சாபமிட்டுச் செத்துப் போனான்.
அதைப் போலவே மறுநாள் சூரியனை யாரும் பார்க்கவில்லை. அனைத்தும் ஓர் இரவுக்குள் தரமட்டமாகியதாகக் கதை.
*
இவை எல்லாவற்றையும் விட இப்போது, அந்தப் பகுதியைச் சுற்றி உலவுகின்றன பல கதைகள். சூரியன் மறைந்ததற்கு பிறகு அங்கே பழைய காலம் போலவே கடை வீதிகள் சுறுசுறுப்பாக வியாபாரம் நடைபெறுவதாகவும், அரண்மனை ராஜாங்க வேலைகள் நடைபெறுவதாகவும் சொல்கிறார்கள்.
பகலில் சுற்றிப் பார்க்க வருபவர்களாக இருந்தாலும், ஐந்து மணிக்கு மேல் அங்கே ஒருவர் கூடத் தங்குவதில்லை. ஐந்து கிலோ மீட்டர் சுற்றுவெளிக்குக் கடைகள் எதுவுமே இல்லை. இளைஞர்கள் வீம்புக்கு இரவுக்குத் தங்கி வந்து சொல்லும் கதைகள் ஆயிரம்.
நாங்கள் 'பான்கட்'டை பகலில் பார்த்து விட்டு வந்தோம்.
அங்கே... சிதிலங்களைப் பார்க்கும் போது கொஞ்சம் திகிலில் நடுக்கம் வந்ததும் நிஜம் தான்!
இத் யூத்ஃபுல் விகடனில்....

Sunday, September 5, 2010

தேவை எதையும் தாங்கும் இதயம் கொண்ட ஆசிரியர்கள்!

"நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி
ஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி"
"மஹாகவி பாரதியார்"
நேர்மையாக இருப்பது கடினம்தான் ஆனால் முடியாததல்ல.
அறிவியல்,ஆங்கிலம்...அது இது என்று ஆயிரம் பாடங்களை எளிதாகக் கற்றுக் கொடுத்து விடலாம்.ஆனால் இந்த நேர்மை இருக்கே இதை எப்பைடிச் சொல்லிக் கொடுப்பதென்பது ஒரு பெரிய கலை.அதை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துக் கற்றுக் கொள்ள வைப்பதே தவறான வழி...அதை நடைமுறைப்படுத்தி அதிலிருந்து கற்றுக் கொள்ளச் செய்வதே சரி.ஆசிரியர்கள் பெற்றோர்கள் ரோல் மாடல் அல்லது வழிகாட்டியாக இருப்பது அவசியம்.சமயங்களில் இது முடியாமல் போய் விடுகிறது ஆசிரியர்களுக்கு.
உதாரணம் ஒன்று:

எங்கள் பள்ளியில் 12-ம் வ்குப்பு மாணவர்களுக்கு ஐ.ஐ.டி பற்றிய செமினார் ஒன்றுக்கு வந்த ஒரு பெரிய அதிகாரி சொன்ன விஷயமிது.....
"எல்லோரும் காப்பியடிக்கும் ஒரு அறையில் நீங்கள் காப்பியடிக்க மாட்டேன் என்று அடம்பிடிப்பது உங்களின் நேர்மையை அல்ல உங்களின் முட்டாள்தனத்தைக் காட்டுகிறது.அங்கே நீங்கள் சிறப்பாகக் காப்பியடித்து உங்களை முன்னிறுத்திக் கொள்ள வேண்டிய தருணமது.அங்கே நேர்மை அது இது என்று நினைத்து நேரத்தை வீணாக்கினால் நீங்கள் பிழைக்கத் தெரியாதவர் என்றுதான் முத்திரை குத்துவோம்"
முகத்திலறைந்தது உ ண்மை.
உதாரணம் இரண்டு:
ஒரு ஆசிரியர் தான் தயாரித்த கேள்வித்தாளில் வரும் அத்தனை கேள்விகளையும் டியூஷனுக்கு வரும் மாணவர்களுக்குச் சொல்லிப் படிக்க வைத்து விட்டார்.இது தெரிந்த நன்றாகப் படிக்கும் மாணவன் என்னிடம் முறையிட..உட்னடியாகக் கேள்வித்தாள் மாற்றியமைத்து அந்த ஆசிரியரின் பேரில் நடவடிக்கையும் எடுக்கப் பட்டது.
அடுத்த நாள் அந்த மாணவனை நிறைய மாணவர்கள் அடித்துத் துவைத்து விட்டார்கள்.ஆஸ்பத்திரியில் பார்க்கச் சென்ற போது...
"எல்லோரும் சும்மாயிருக்கும் போது இவனுக்கு மட்டும் என்ன வந்ததும்மா..?இவன் ஏம்மா கம்ப்ளெயின்ட் பண்ணணும்????இப்படிப் போட்டு அடிச்சுருக்காங்களே" என்றலறும் அம்மாவிடம் நேர்மை பற்றிப் பேசிக் கொண்டிருக்க முடியவில்லை.
உதாரணம் மூன்று:

ஒரு பள்ளியின் 12ம் வகுப்புத் தேர்வுக்கு அடுத்த பள்ளியில் போய்தான் பரீட்சை எழுதவேண்டும்.சென்டர் எங்கு போட்டிருக்கிற்தோ அங்கு.அங்கு சென்று எழுதிய பள்ளி மாணவர்கள் திரும்பி வந்து அங்கு நடந்த முறைகேடுகளை ஒவ்வொன்றாகச் சொன்னார்கள் பள்ளி முதல்வரிடம்.பள்ளி முதல்வர் உடனடியாக இதை போர்ட் அதிகார்களுக்குத் தகவல் அளிக்க எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சிட் கொண்டு வந்து கொடுப்பதுவும்,விடைகளை சொல்வதுவுமாகவே பரீட்சைகளும் முடிந்தன.அந்தப் பள்ளி முதல்வரும் விடாது மேலிடத்துக்கு மேலிடம் என அனைத்து இடங்களிலும் முட்டி மோதிப் பார்த்துவிட்டார்.ஒன்றும் நடக்கவில்லை.எதுவும் முடியாமல் நேரில் சென்றும் முறையிட்டார்.அன்றிலிருந்து இன்றுவரை இப்போது அந்தப் பள்ளியின் மீதும் பள்ளி முதல்வர் மீதும் தேவையில்லாமல் தினமும் ஒரு கம்ப்ளெயின்ட் மேலிடத்திலிருந்து வந்து கொண்டிருக்கிறது.பரீட்சை முறைப்படி நடக்க வேண்டும் எனப் பள்ளி முதல்வர் நினைத்தது தவறா?நேர்மையான எண்ணமுள்ளவர்கள் இவ்வளவு கஷ்டங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டுமா?
நேர்மையை இவ்வ்ளோ கஷ்டப்பட்டுக் கற்றும் அது நிறைய எதிரிகளை உருவாக்கும் என்பதுவும்,நண்பர்களைத் தூரம் விரட்டிவிடும் என்பதுவும் தெரிந்தால் எவ்வ்ளோ மாணவர்கள் நேர்மையை நிலைநாட்ட முயல்வார்கள் எனபதுவும் பெரிய கேள்விக்குறி.
பொதுவிடத்தில் நேர்மையைப் பற்றிச் சொல்வதற்கும் பதிவதற்கும் வேறு வேறு வார்த்தைகளும்,நாம் தனித்திருக்கும் போது பதிவு செய்யும் நேர்மைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும் என்பதை வேறு வேறு நிகழ்வுகளில் உணர்ந்தேயிருக்கிறேன்.கோடாரி தந்த தேவதையின் முன்னால் தங்க,வெள்ளிக் கோடரிகளை எனதில்லை எனச் சொல்லும் நேர்மை எனக்கிருக்கிறதா என்றும் யோசித்துக் கொண்டேயிருக்கிறேன்...........
தேவை எதையும் தாங்கும் இதயம் கொண்ட ஆசிரியர்கள்!
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

Monday, August 23, 2010

மன்னிக்க வேண்டுகிறேன்--1

இரவு ஏழு மணிக்காகக் காத்திருப்போம்.அப்போதானே பெட்டிக் கடை மொட்டைத் தாத்தா விளக்கேத்துவார்.சின்னதா ப்ரௌண் கலர் க்ளைகோடின் பாட்டிலில் துணித்திரி போட்டு ஒரு அலுமினியப் பெட்டி மேல வச்சு அவ்வ்ளோ புகையாக்கிக் கொண்டிருப்பார் கடையை ...அப்புறமா பூதங்களாகிய நாங்க வெளியே கிளம்புவோம்.வேறொண்ணுமில்லை.வீட்டில் மாம்மை கொடுத்த பழங்காலத்து செப்பு நாணயங்கள்.....ராஜா, ராணி படம் போட்ட செல்லாத காசு...ஆனால் அதைச் செல்ல வைக்கணுமே.அதுக்கு தேர்ந்தெடுத்த நேரம்தான் இரவு ஏழு மணி.அவர்கிட்டே சூப்பரான கல்கோணா மிட்டாய் கிடைக்கும்.ஒரு மணி நேரம் ஆனாக் கூட கரையவே கரையாது......அந்தச் செல்லாத செப்புக் காசை 25 பைசாவாக நினைத்து 5 கல்கோணா கொடுப்பார்.ஆனாலும் அவ்வ்ளோ சீக்கிரம் கொடுத்து விடமாட்டார்.......விளக்குப் பக்கத்தில் காசை வைத்துக் கொண்டு புரட்டிப் புரட்டி ஐந்து தடவையாவது பார்ப்பார்.

ஆனாலும் கண்டு புடிச்சதேயில்லே.....சந்தோஷத்தில் வீடு அதிரும்.ஏமாத்துறொம்னு கொஞ்சம் கூட உணர்வேயில்லாத வயசு.தினம் தினம் இப்படிச் செல்லாத செப்புக் காசுகள் தீரும் வரைக்கும் தினம் தினம் கல்கோணாதான்.யோசிச்சுப் பார்த்தா பாவமாயிருக்கு இப்போ....

அப்புறமா பதின்ம வயதில் பெரிய மேதாவித் தனத்தைக் காட்ட அப்போதுதான் கற்றுக் கொண்ட ரூபா நோட்டை வெயிலில் உயர்த்திப் பிடித்து ஒற்றைக் கோடு பார்த்துக் கள்ள நோட்டு நல்ல நோட்டுக் கண்டு பிடிக்கும் உத்தியைப் பரிசீலிக்கும் ஆர்வத்துடன் அப்பா முன்னிலையில் வீட்டுக்கு வந்த டோபியின் முன்னால் செய்ய...."நல்ல நோட்டுத்தான் பாப்பா" அப்படீன்னு அவர் சொல்லச் சொல்லத் திரும்பவும் வெயிலுக்கு நேரே உயர்த்திப் பிடிக்க அப்பா சொன்னது

"நோட்டை உயர்த்திப் பிடித்து மனுஷனைக் கீழே தள்ளாதீங்கப்பா...."

தெரிந்தோ தெரியாமலோ ஏமாற்றியதற்காகவும், மனதை நோகடித்ததற்காகவும் இருவரிடமும் மன்னிக்க வேண்டுகிறேன்.

Tuesday, August 17, 2010

மழையும் மழைசார்ந்த நிகழ்வுகளும்--2.

தேங்கிக் கிடக்கும் மழை நீரில்.........

முகம் பார்த்துக் கொண்டது மரம்...
பூ உதிர்த்து அழகு பார்த்தது செடி...
விழுந்து கிடந்தது வானம்....
குனிந்து அலகால் நீர் குடித்தது குருவி....
கத்திக் கப்பல் விட்டான் பையன்...
கல்லெறிந்து ஆனந்தித்தான் இன்னொருவன்..
குதித்துத் தண்ணீர்ச் சிதறியடித்தாள் சிறுமி.....
அத்தனையும் நிமிடத்தில் கலைத்து
விர்ரெனச் சீறிப் பறந்தான் பைக் இளைஞன்....

மழையின் நினைவாக வீட்டுக்கு எடுத்துச் செல்ல
உடையின் ஈரம் மட்டுமே மிஞ்சியிருந்தது...
பாதம் பதித்த ஈரம் சொல்லியது
வீதியில் பெய்த மழையின் மீதி கதையை!!

Monday, August 2, 2010

எனக்கெனவும் ஒருநாள்!

புதுக் காலண்டர் வாங்கி
அம்மாவுக்கு ஒன்று
அப்பாவுக்கு ஒன்று
காதலுக்கு ஒன்று
அக்கா,தங்கை,
தம்பி,அண்ணன்
இன்னும் பொங்கல்,தீபாவளி,
தண்ணீர்,மகளிர், சுதந்திரம்
அது இதுவெனவும்
நண்பர்களுக்கும் ஒன்றெனப்
பிரித்துக் கொடுத்த பின்
மிஞ்சிய அட்டையை
முன்பின் திருப்பிப் பாவமாய்
எனக்கெனவும் ஒருநாள்
கொடுங்கப்பா!
என்று சிரித்துக் கொண்டேன்!

Thursday, July 29, 2010

இவை தேவதைகளின் காலம்!

முன்னால் கடந்து போகும் பேருந்தின் ஜன்னலின் வழி
கைவிரல்களை கூட சரியாக விரிக்காத குழந்தை ஒன்றின் கை தெரிந்து மறையும் நேரம் ......

தூண் மறைவிலிருந்து மெல்ல குண்டுக் கண்களும் பிஞ்சு விரல்களும்
வெளிப்படும் தருணம்....

பயணம் முழுக்க கவனம் சிதறிவிடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளும்
யாரென அறியாமலேயே முகம் பார்த்துச் சிரித்தும் முகம் மறைத்தும் அம்மாவின் தோளிலிருந்து எட்டிப் பார்த்துச் சிரிக்கும் நிமிடம்.....

தேம்பி அழுது கண்ணீருடன் இருக்கும் போது "பிடிச்சோ" என்றால் அணில் பல் காட்டிச் சிரிக்கும் நேரம்....

தயிர்க் கிண்ணத்துடன் முகம் முழுவதும் தயிர் அப்பிக் கொண்டு திரு திருவென முழிக்கும் நொடி........

குடித்த பால் வரைந்த மீசையுடன் சிரிக்கும் தருணம்.....
பொம்மையைக் கட்டிப் பிடித்துத் தூங்கும் நிமிடம்......
தனக்குத் தானே பேசிக் கொண்டு தர்பார் நடத்தும் காலம்......

இப்படி அது வேறோர் தனி உலகம்.இந்த தேவதைகளுக்கான உலகமும் தருணமும் தவறிப் போனால் திரும்பக் கிட்டாது.கொஞ்ச‌கால‌ம் தேவ‌தையாய் வாழ‌ வ‌ர‌ம் பெற்ற‌வ‌ர்கள்.....நமக்கான தேவதைக் காலங்களை வரமாகத் தந்தவர்கள்...சிறகு உதிர்ந்து மனிதர்களாகும் முன் பத்திரப் படுத்த வேண்டும் இந்த தேவதைத் தருணங்களை!!

Saturday, July 24, 2010

மழையும் மழைசார்ந்த நிகழ்வுகளும்--1

முதல் தடவையா அந்தத் தப்பு பண்ணப் போகிறாள்..டேட்டிங்க்!
அம்மாவுக்குத் தெரியாமல் செய்யும் முதல் தப்பு.நேற்று அம்மா அப்பாவோடு வந்து பெண் பார்த்துவிட்டுப் பிடித்திருக்கிறது என்று சொல்லி விட்டுப் போனவரிடமிருந்து ஒரு போன் வந்ததும் நேரில் தனியாகச் சந்திக்கலாமா? எனக் கேட்டதும் கனவு போலிருந்தது.அவளையறியாமலே வருகிறேன் என்றாயிற்று.என்னவெல்லாம் பேச வேண்டும்,அவர்க்குப் பிடித்தவையெல்லாம் எனக்குப் பிடிக்குமா?எனக்குப் பிடித்ததெல்லாம் அவருக்குப் பிடிக்குமா?முக்கியமா மழையை.என் வாழ்வில் மழைக்குத் தனியிடம் உண்டென்பதையும் சொல்லவேண்டும்....இன்னும்...இன்னும்
"அம்மா மீனா வீட்டுக்குப் போயிட்டு வரேன்."
வெளியே வந்து பார்த்தாள். மழைமேகம் இருண்டிருந்தது.
"இருட்டுவதற்குள் வந்து விடு.மழை பெய்யும் போலிருக்கு.குடை எடுத்துட்டுப் போ"
அவசரமாய் குடையைத் துணிகளுக்கிடையில் ஒளித்து வைத்து விட்டு அம்மா பார்ப்பதற்குள் வெளியேறினாள்.
முதல் துளி கண்ணின் இமை முடிகளின் மேல் விழுந்தது.கண்களைச் சுருக்கி வானம் பார்தது மழையை அப்படியே குடித்து விடுபவள் போல மயக்கத்துடன் பார்த்தாள்.அப்படியே சட சடவென்று அடித்துப் பெய்ய ஆரம்பித்தது.மனம் முழுவதும் சொல்ல முடியாத ஆனந்தம் பரவியது.தன் வாழ்வை இணைத்து ஆரம்பிக்கப் போகும் இனியவரைப் பார்க்கப் போகும் போது மழையும் துணைக்கு வந்தது ரொம்பப் பிடித்திருந்தது.
மழை ராஜ்யத்தின் மஹாராணியைப் போலக் கை வீசி நடந்தாள்.தலையில் மழைக் கிரீடமும்,காதோரம் மழைப் பூவையும் சூடி அழகு படுத்திக் கொண்டாள். நனைவதைப் பற்றிக் கவலைப் படாமல்,கூந்தல் கலைவதில் கவனம் இல்லாமல் மழைத் தோழியுடன் ஒன்றியவாறு, நனைந்த மரங்களின் இலைகள்"மழை பெய்ததே" என்று கை தட்டிக் கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்தபடி "இங்கேதானே வரச் சொன்னார்".....அந்த பார்க் வாசலில் நின்றவாறு அவரை எங்கே காணோமென்று தேடினாள்.
ஊஹும்...காணோம்.
அங்கேயும் இங்கேயுமாய் பர பரவென்று கண்களை ஓடவிட்டதில் அகப்பட்டார்.....
ஹ்ம்ம்ம்...முழுவதுமாய் உடல் மறைத்த ஒரு ரெயின் கோட் அணிந்து தலையில் ஒரு துளி விழுந்து விடாமல் தொப்பி வைத்து ஒரு கடையின் கூட்டத்தில் கொள்ளைக் கூட்டத் தலைவன் போல நின்றிருந்தான்.
"என்னம்மா...மழைலே இப்பிடி நனைஞ்சுட்டு வந்துருக்கே...மழைக்கு ஒரு குடை கூடவா கிடைக்கலை.என்னைப் பார்த்தியா ஒரு சொட்டு மழை விழலை என்மேல....எப்புடி?" எனப் பெருமையா பார்த்தார்.
முதல் அத்தியாயத்திலேயே அவள் கதாநாயகன் மரித்துப் போனான்.

Monday, July 19, 2010

1 for sorrow, 2 for joy!!!

1 for sorrow, 2 for joy, 3 for a girl, 4 for a boy, 5 for silver, 6 for gold,7 for secret never to be told,8 is a wish and 9 for a letter 10 is a bird you must not miss.....
                                                             குட்டி மைனா பார்த்திருப்பீங்களே. மஞ்சள் கண்களோடு..........அதை வைத்துத்தான் இந்தப் பாட்டு. பள்ளிப் பருவத்தில் பள்ளிக்குப் போகும் போது பார்க்கும் மைனாக்களின் எண்ணிக்கையை வைத்து ஆருடம் சொல்லும் பாடல்.அநேகமாக இரண்டு மைனாக்கள் சேர்ந்து பார்த்து விடமுடியும்....எப்போ பார்த்தாலும் ஹையா 2 for joy! அப்படீன்னு குதித்துக் கொண்டு போவதுண்டு!அது எப்படி இப்போ வரைக்கும் தொடருதுன்னு தெரியாது.இப்போ மைனா பார்க்க முடிவதில்லையென்பதுதான் வருத்தம்.
                        எங்கே போச்சுதுங்க இந்த குருவி மைனாக்களெல்லாம்?கூடு விட்டு விட்டுப் போகும் போதும்,நாடு விட்டுப் போகும் போதும் நினைவில் வைத்துக் கொள்வதற்காய் எதை எடுத்துச் சென்றிருக்கும்?இது என் கூடு என்பதற்காய் கூட்டில் எதை விட்டுச் சென்றிருக்கும்???அவைகளுக்கும் தாய் நாடு என்ற உணர்வெல்லாம் இருக்குமோ??வேற்றிடம் போய்க் கூடுகட்ட அவைகளும் கஷ்டப் பட்டிருக்குமோ?அல்லது கூடுகளில் இல்லாமல் கூட்டமாக எங்கேனும் அடைந்து கிடக்கின்றனவோ??அவைகளைக் கூடு கட்டி வாழ விடாமல் ஓட ஓடப் பறக்கத் துரத்தி அடித்து நம் வீட்டைக் கட்டிக் கொள்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி இல்லையே???ஏன்?
              தானியம் போட்ட ஜன்னல் வெளி இப்போதெல்லாம் தானியங்களும் தண்ணீர்க் கிண்ணங்களும் தொடப் படாமல்இருப்பதன் காரணம் புரிந்தாலும் கண்டு கொள்ளாமல் தானே இருக்கிறோம்.இந்தப் பூமியின் பறவை தேசம் இதுவென்று கொஞ்சத்தையாவது வரையறுத்துக் கொடுத்து வாழ விடுவோம்.மின்சாரக்கம்பிகளும்,ட்ரன்ஸ்ஃபார்ம்களும்,மின்விசிறிகளும்,கைத் தொலைபேசிகளும் இல்லாத உலகம் ஒன்றைச் சிருஷ்டித்துக் கொடுத்து விடலாமே!பிரபஞ்சத்தின் எங்கோ ஒரு மூலையில் அவைகள் சிறகடித்து ஆனந்தமாகப் பறக்க விட்டு  விடுவோமே.                            

                           காலையில் என் அறைக்குள் மின்சாரவிசிறியில்  அடிபட்டு விழுந்து கிடந்த ஒற்றைக்குருவி நொண்டி நொண்டி நடந்து கேட்டது.one for sorrow தானே ....???

Thursday, July 15, 2010

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்....6

 எதிர்பாரா மழைக்கு
அடுப்படியில் ஒன்றும
முன்னறையில் ஒன்றுமாய்
பாத்திரம் வைத்துப்
பத்திரப் படுத்தியாயிற்று மழையை....

அதிசயிக்கும் மழையைச்
சபித்துக் கொண்டே
பின்கட்டுக்கு ஒரு சாக்கும்
முன் வாசலில் ஒரு சாக்கும்
போட்டு  மழைத் தண்ணியைத்
தடுத்தாயிற்று

இன்னும் மழையிலிருந்து தப்பிக்க
புத்தகப் பைகளும்
துணிமூட்டைகளும்
சோற்றுப் பாத்திரமும்
இடம் மாறிக் கொண்டேயிருந்தன.....

மழை கொஞ்சம் அடித்துப் பெய்ய...
கையில் கிடைத்த அண்டா குண்டா
எடுத்து ஓடி ஓடி இடம் மாற்றி
பூனைக் குட்டிக்கொரு
ஈரமில்லாஇடம் தேடி.....

 ரசிக்க முடியாத
மண்வாசனையுடன்....
கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்....

Monday, July 12, 2010

தொலைதலும் கிடைத்தலும்....

எப்போதிருந்து தொலைந்து போக ஆரம்பித்தேன் என நினைத்துப் பார்த்தால் அது முதல் முதலா மூன்றாம் வகுப்பு படிக்கும் போது சென்னைக்கு ஏதோ ஒரு விசேஷமா அல்லது சுற்றிப் பார்க்கவோ போயிருந்த போது எல்லோரும் இறங்கியபின் தூங்கிக் கொண்டிருந்த நான் டாக்ஸியோடு போய்த் தொலைந்திருக்க வேண்டியது. ....ம்ம்ம் தப்பிச்சுட்டேன்.

தொலைதலும் கிடைத்தலும் தொடர் விளையாட்டுப் போல...ஒன்றையொன்று துரத்திக் கொண்டேயிருக்கும்.சீப்பைத் தேடினால் எப்போவோ தேடிய பேனா கிடைக்கும்.பேனாவைத் தேடினால் தொலைந்த மோதிரம் கிடைக்கும்.தேடியதே கிடைத்து விட்டால் கொண்டாட்டம்தான்.தொலையாமல் பத்திரப் படுத்தும் வித்தை தெரியும்தான்...ம்ம் எடுத்த இடத்திலேயே வைக்கவேண்டும்தான்...ஆனால் எப்போதும் முடிவதில்லையே......


அப்புறமாய் உறவினர் கூடும் கூட்டங்களிலிருந்து தொலைந்து போயிருக்கிறேன் "இன்னும் பார்க்க ஆரம்பிக்கலியா" என்னும் அநியாயமான கேள்விகளுக்குப் பயந்து போய்..... உங்க சம்பளம் எவ்வளவு எனக் கேட்கும் கூட்டத்திலிருந்தும் அடிக்கடி..சமரசம் செய்ய முடியாத மனிதர்களிடமிருந்தும்,வலிகளைப் பிரதியெடுக்க விருப்பமில்லாத
நிகழ்விலிருந்தும் பயணிக்கும் போது தொலையும் மைல்கல்லைப் போல ஓடி ஓடித் தொலைந்து கொண்டேதானிருக்கிறேன்.

மொட்டை மாடியில் இருட்டுக்குள் தொலைந்து போவதில் இருக்கும் சவுகரியம் ரொம்பவும் பிடித்தது.தொலைபேசியைக் கீழேயே வைத்து விட்டுத் தொலைந்து விடலாம்.மடிக் கணினியையும் மறந்து வைத்து விட்டுத் தொலைந்து விடலாம்.அழும் போது மழைக்குள் தொலைதலும் இருட்டுக்குள் தொலைதலும் ரொம்ப சவுகரியம்.

எழுதுவதிலிருந்தும் கூட அவ்வப்போது தொலைந்து கொண்டுதானிருக்கிறேன்.தொலைவதனால் ஏற்படும் இழப்பின் அடர்த்தியை உணர்ந்தேயிருக்கிறேன்.இந்த அவசர உலகத்தில் ஓடும் ஓட்டத்தினை நிறுத்தி மூச்சு வாங்கக் கூட நேரமில்லாமல் இருக்கும் போது அவ்வப்போது இந்த தொலைந்து போதல் தேவையாய்த்தானிருக்கிறது.இணையம் வா என்னில் தொலைந்து போ என்னும் போதும் தொலைபேசி இசையால் தொலைந்து போ என அழைக்கும் போதும் ஓடிப் போய் ஒளிந்து கொள்ளத் தொலைதல் தேவையாயிருக்கிறது.

ஒவ்வொரு தடவையும் தொலைந்த என்னை மீட்டெடுப்பது இசையும் இதே மூச்சு விடமுடியாதவேலையும்தான்....தொலைந்து போகிறேன் விரும்பியேதான்....... ஒவ்வொரு தடவையும் மீண்டும் கிடைத்து விடுவேன் என்னும் உத்தரவாதம் இருக்கும் வரை அடிக்கடி தொலைந்து போகலாம்.....

Monday, June 28, 2010

கை விரித்துச் சிரித்தது மரம்!!

கீழே விழுந்த பந்து
எம்பி எழுந்து வந்ததைப்
பார்த்து இறகை உதிர்த்து
விட்டுக் காத்திருக்கிறது
ஏமாறப் போகும் பறவை!

தானே கீழே விழுந்த மழை
இனி எப்போ மேலே
போவோமெனச் சூரியனைப்
பார்த்துச் சிரித்துக் கிடந்தது
குளத்தில்....

அடித்து வீசும் காற்றில்
கொஞ்சம் இலைகளையும்
நிறைய மலர்களையும்
உதிர்த்து பதிலுக்கு
எதுவும் வேண்டாமல்
கை விரித்துச் சிரித்தது மரம்!!

ஒன்றைப் போட்டுத்
திருப்பி எடுக்கும்
வித்தையல்ல வாழ்வு !
எனச் சொல்லாமல்
சொல்லிப் போயிற்று
கன்னம் தொட்டு
வண்ணம் விட்டுப் பறந்த
வண்ணத்துப் பூச்சி!!

Tuesday, June 22, 2010

"எங்கே இருக்கிறாரோ அங்கே"

காந்தியின் சாபர்மதி ஆசிரமம் போயிருந்தோம்.காந்திஜிக்கு வந்திருந்த கடிதங்களின் தொகுப்பும் அவரை அடையாளப் படுத்தும்
அவருக்கான முகவரிகளும்
உங்களுக்காக.......
The King of India
The great ahimsa noble of India
The supreme President of the National Congress
A La Excellence Monseiui le President Gandhi
Mohandas K.Gandhi, Leader in Indian National Congress
The Dictator of the Government of India
The head of Congress Committee
Mahatma Gandhi Where ever he is
Mahatma Gandhiji "Farmer and Weaver"
Devotee of the world Shri Mahatma Gandhi
His highness Mahatma Gandhi

மிகவும் ஆச்சரியப் பட வைத்த முகவரி......
" Mahatma Gandhi Where ever he is"
"மகாத்மா காந்தி எங்கே இருக்கிறாரோ அங்கே"

நாம் இருக்கும் இடமெல்லாம் நம் முகவரியல்ல......
நாம் வாழும் முறையே நம் முகவரி...........................









Saturday, June 19, 2010

விட்டுக்கொடுத்தலும், ஏமாளித்தனமும்..!

வாழ்வு எல்லோருக்குள்ளும் எப்படி எப்படியெல்லாமோ புகுந்து வெளி வருகிறது.காலை அவசரமும் ஓட்டமும் வாழ்வின் புன்னகைக் காலங்களை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் எனத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்து விடுகிறது.பின்னாளில் புன்னகைக்க நினைக்கும் போது அதை வெளிக்காட்டும் பல் போய் பொக்கைவாயாகி விடுகிறது.

காலையிலேயே "எம்மாம்மா நேற்றிலிருந்து சாப்பிடல்லைம்மா ஏதாவது கொடும்மா" எனத் தொடரும் பிச்சைக்காரர்களின் கத்தல் எரிச்சலைக் கொடுத்தது.எப்போதோ போகும் வழியென்றால் காசு போட்டு விட்டுப் போகலாம்.இது தினமும் போய் வரும் வழி ..தினமும் ஒரு ரூபாய் போட்டாலும் முப்பது ரூபாய் தண்டம் ....வீட்டு பட்ஜெட் நினைவு வந்து தொலைத்தது. ஒரு குட்டிப் பையன் அவசர அவசரமாக "எம்மா ஏதாவது கொடும்மா"என்று கையைப் பிடித்தும் உதறியவுடன் திடீரென காலில் விழுந்து "எம்மா ஏதாவது கொடும்மா"என்றும் பின்னாலேயே வந்தான்.இது என்னால் தாங்க முடியாத ஒன்று...குழந்தைகள் இப்படிக் கேட்டால் சட்டென ஏதாவது கொடுத்து அனுப்பிவிடுவேன்..கைப்பையைப் பார்த்தால் சில்லறையாக இல்லை..ஐந்து ரூபாய்தான் இருந்தது.ஐந்து ரூபாயைப் போடவும் மனசில்லை."
சின்ன மாமியார் வீட்டு விசேஷத்துக்குப் போவதால் பூ வாங்கலாம் என்று நின்றேன்.
"பூ முழம் எவ்வ்ளோம்மா? "
"பத்து ரூபா
"
"அட எட்டு ரூபாய்தான் தருவேன்"

"கட்டுபடியாகாதும்மா..
"
"அதெல்லாம் ஆகும் ஆகும்..."

ரெண்டு ரூபாய் குறைத்து வாங்கிய சந்தோஷத்தில் மல்லிப்பூ அதிகமாக மணந்தது போலிருந்தது.

பஸ்ஸில் ஏறி டிக்கெட் வாங்க நடத்துனரிடம் 74 ரூபாய் டிக்கெட்டிற்கு 80 ரூபாய் பயந்து கொண்டே கொடுத்தேன்.சில்லறைக்காகக் கத்துவாரோ என்று...ஒன்றும் சொல்லாமல் டிக்கெட்டின் பின்னால் 6 ரூபாய் எனக் கிறுக்கிக் கொடுத்தார்.

ஓஹோ இவர் அந்த வகையோ என்று நினைத்துக் கொண்டேன்.நடத்துனர்கள் ரெண்டு வகை...ஒன்று சில்லறை இல்லைன்னா இறங்குன்னு கத்துகிற ரகம்.இன்னொன்று இப்படி டிக்கெட்டின் பின்னால் அமைதியாகக் கிறுக்கி விட்டு இறங்கும் வரை நம் கவனம் அவர் மேலேயே இருக்கும் படிப் பார்த்துக் கொண்டு கடைசியில் தராமலேயே ஏப்பம் விட்டு விடும் ரகம்.

எப்படியும் கேட்டு வாங்கி விட வேண்டியதுதான் என நினைத்துக் கொண்டு அவர் அங்குமிங்கும் நகரும் போது அவர் மீது "ஏய் நீ எனக்குக் காசு கொடுக்கணும் " அப்படீங்கிற பார்வையை வைத்துக் கொண்டிருந்தேன்.


அவரையே கொடுக்க வைத்துவிட வேண்டும் .அப்படியில்லையெனில் கேட்டாவது வாங்கிவிடவேண்டியதுதான்.நகரத்தின் நாகரீகங்களுள் இதுவும் ஒன்று. நம் பணத்தையே கூடக் கேட்டு வாங்க கூச்சமாய் இருக்கும்.அவருக்கு அடுத்தவங்க பணத்தை எடுத்துக் கொள்ள இல்லாத கூச்சம் நமக்கெதற்கு????.ஆனால் நானும் இப்படி அநேக நாட்கள் இப்படி காசு விட்டதுண்டு.


இன்னும் ரெண்டு ஸ்டாப்தான் .அடுத்த ஸ்டாப்பில் இறங்க வேண்டும்.ஆறு ரூபாயைக் கொடுப்பாரா...கேட்கத்தான் செய்யணுமா??என்று இரண்டு மணிநேரமாகக் குழம்பிக் கொண்டிருக்கிறேன் வேலையற்றுப் போய்...


ஷாலு ஏறினாள் அந்த ஸ்டாப்பில்.
"ஹாய் என்ன சுதா? எங்கே இன்னிக்கு ஆஃபீஸ் போகலையா? இந்தப் பக்கம் எங்கே ?"
அட....ஷாலு...இன்னிக்கு லீவு போட்டுட்டேன்.எங்க சின்ன மாமியார் வீட்டுலே ஒரு விசேஷம் அதுக்குத்தான் போயிட்டிருக்கேன்.நீ என்ன இப்பிடி.?

"எனக்குத்தான் ஓடுறெ வேலைதானே....அங்கேயும் இங்கேயும் ஷன்டிங் அடிச்சுட்டிருக்கேன்..."


ஷாலு எங்க ஆஃபீசுக்குத் தொடர்புடைய பெண். அடிக்கடி வந்து போவாள்.ஆனால் ரொம்ப லொட லொட....எல்லாரைப் பற்றியும் வம்பு பேசுவதில் ரொம்ப ஆர்வம்.
மனசுக்குள் இவள் ஏன் இப்போ வந்தாள் என்று நினைத்துக் கொண்டேன். இப்போ இவள் முன்னால் எப்படி மீதிக் காசைக் கேட்பதுன்னு யோசிக்க ஆரம்பித்திருந்தேன்.

ஆறு ரூபாய்தானே விட்டு விடவேண்டியதுதான்.இவள் முன்னால் கேட்டு அசிங்கப்பட்டால் அவ்வ்ளோதான் அறுநூறு பேர் வேலைபார்க்கும் ஆஃபீஸில் அசிங்கப் படுத்தி விடுவாள்.
இருந்தாலும் அவ்ரே தந்துவிட மாட்டாரா என்ற நப்பாசையுடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
"என்னாம்மா....பார்த்துக்கிட்டே நிக்கிறே...இறங்கலியா?" என்று கத்தினார்.நான் மீதிக் காசைக் கேட்டு விடுவேனோ என்ற பயத்தில்.
இந்த வாழ்வில் இவ்வகையான விட்டுக் கொடுத்தலும் விரும்பாமலே வேண்டித்தானிருக்கின்றன. யாருக்கும் தெரியாமல் மனதுக்குள் கொஞ்சமாக இப்படியிருப்பதற்கு என்னை நானே திட்டிக் கொண்டேன்.ஒவ்வொருமுறை இப்படி அடிபடும் போதும் இனி அடிக்க விடக் கூடாது என்று நினைக்கிறதோடு சரி. அப்புறமாய்..."ம்ம்ம்ம்ம் ...சரி நடத்துனருக்கு என்ன பணக்கஷ்டமோ ...இப்படியெல்லாம் காசு சேர்க்கவேண்டியிருக்கு"என்று அலுத்துக் கொண்டு என் ஏமாளித்தனத்தைக் கொஞ்ச நேரம் மறக்க முயன்றேன்.

Thursday, June 17, 2010

வீழ்ந்து கிடக்கும் நிழல்கள்!

இரவில்
விளக்கின் காலடியிலும்

பகலில்
சூரியனின் காலடியிலும்

நிழல்கள் எப்போதும் போல
விழுந்து கிடந்தன....

உச்சி வெயிலில்
என் காலடியில்
நசுங்கிக் கிடந்ததுவும்
அதுவேதான்..

வெளிச்சத்தை எதிர்த்துப்
பழக்கமில்லா நிழல்கள்
எப்போதும் வீழ்ந்து
கிடந்தாலும்...

மெழுகுவர்த்தியின்
வெளிச்சத்துக்கு
மட்டும் சுவற்றில்
எழுந்தாடும்
என் நிழல்
என்னிடம் கேட்டது ....

முகமில்லா என்னைப்
பிடித்திருக்கிறதாவென்று?

விட்டுப் போய்விடுமோவென்று
சுவற்றோடு போய் ஒட்டிக் கொண்டேன்....
சட்டெனக் காணாமல் ஓடி மறைந்தது
எப்போதும் வீழ்ந்து கிடக்கும் அது!
நன்றி யூத்ஃபுல் விகடன்!

Saturday, June 12, 2010

கறிச் சோறாக்கின கதை!

கோழி இறகு முற்றத்தில் பறந்து கிடக்க
கோழியின் முடிவு குறித்தான
கவலையுடன் விசாரிக்க

தனக்கு உடல் நலமில்லையென்று
போனவாரமும்
கோழிக்கு உடல் நலமில்லையென்று
இந்த வாரமும்
கறிச் சோறாக்கின கதை கேட்டு...

கூண்டுக் கதவைத் திறந்து கிளியைப்
பூனைக்கு விருந்தாகப் போ என்று
வெளியேற்றிப் பூனைவரச்
சன்னலைத் திறந்து...


கட்டிலில் காத்திருக்கும் மருந்து
சீசாக்களைக் கவிழ்த்து
கடல் குடித்து முடிக்கும் தாகத்துடன்

வாழ்வின் குரூரங்களைக்

குடித்து முடித்தான்...

காய்ச்சக்காரப் பய....

காலிக் கூண்டைப் பார்த்து
எந்தக் கோட்டிக்காரன்
கூண்டைத் திறந்து போட்டதுன்னு
அலறிக் கொண்டிருந்தாள் கிழவி...

Tuesday, June 8, 2010

கடவுளாசை யாரை விட்டது?

மழைக் காலத்தில் குருவியையும்
குருவிக் கூட்டையும் காப்பாற்ற
முடியாவிட்டாலும் முனை திரும்பும
பேருந்துகளைக் காப்பாற்றி விடுகிறேனாம்...

தலை பின்னே ஒளிவட்டமுமில்லை
காலடியில் தாமரையுமில்லை
கையிலிருந்து பொற்காசுகள்
கொட்டவுமில்லை...
இருந்தாலும் விளக்கேற்றிக்
கடவுளாக்கி விட்டார்கள்...
புலம்பியது சாலையோரப
புளியமரம்...

கடந்து செல்லும் ஒவ்வொரு
பேருந்தும் சாலை முனை விபத்திலிருந்து
தப்பித்துக் கொள்ளத் தன் கடவுளிடம்
வேண்டிக் கொண்டது புளியமரம்...

கடவுளாசை யாரை விட்டது?

நன்றி யூத்ஃபுல் விகடன்!

Saturday, May 22, 2010

மீண்டும் அழகி....

உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கிய நூலான திருக்குறளை
கோகுல்நாத் முருகேசன் என்பவரின் முயற்சியாலும் அழகியின் மாற்று ஒலிபெயர்ப்பு உதவியாலும் திருக்குறள் தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கங்களுடனும் அது தவிர தமிழ் வாசிக்க முடியாதவர்களுக்காக தமிழை ஆங்கிலத்திலுமாகக் கொடுத்திருக்கிறார்.படிக்கும் போது அவரின் உழைப்பும் முனைப்பும் தெரிகிறது.

தமிழ் நாட்டில் இல்லாத தமிழர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.தமிழ்நாட்டுக் குழந்தைகள் பள்ளிகளில் திருக்குறள் படித்துக் கொள்வார்கள் .மற்றவர்கள் தங்களின் குழந்தைகளுக்கு திருக்குறளை அறிமுகப்படுத்த ஒரு நல்ல வழி!
பகிர்ந்து பயனடையுங்கள்!

Wednesday, May 19, 2010

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்-4

கிறுக்குதல் சந்தோஷம்! அதிலும்
வெள்ளை அடித்த சுவரில்
கிறுக்குதல் மகா சந்தோஷம்
பாப்பாவுக்கு....

குடுவையில் ஒரு பறவை பறந்து கொண்டும்
வானத்தில் ஒரு மீன் நீந்திக் கொண்டுமாய்
தரையில் சூரியனும் நட்சத்திரமும்
பக்கம் பக்கமாய்....

நீ உயிர் கொடுத்து உயிர்ப்பித்த
பூனையும் எலியும் உயிர்
பிழைக்க ஓடாமல்
பக்கம் பக்கமாய்.....

அம்மா அவசரமாய் அழித்துப் போன
ஓவியத்தில் மிச்சமிருக்கிறது
பாப்பாவின் கைரேகைகளும்
கொஞ்சம் பூமியின் கால் சுவடுகளும் ...

தரை ஈரம் காய்வதற்குள்
மீண்டும் பென்சிலும்
கலர் க்ரேயானுமாய்
குப்புறப் படுத்து வரைய
ஆரம்பித்த தருணத்தில்.........

மீண்டும் ஓடி வருகிறாள்
அம்மா ஈரத்துணியும்
கையுமாய்.......

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்!!!

Saturday, May 15, 2010

எனக்கு மட்டும் ஏனிப்படீ???

எனக்கு மட்டும் ஏனிப்படீன்னு மண்ணில் புரண்டு புரண்டு அழணும் போல இருக்கும் பரீட்சைக் காலங்களை நினைத்தாலே.சிலேட்டுலே எழுதணும்னா ஸ்லேட்டுக் குசி உடைஞ்சு உடைஞ்சு போகும்.பென்சிலாலே எழுதணும்னா பென்சில் முனை உடைஞ்சு உடைஞ்சு போகும்.பேனாவாலே எழுதணும்னா நிப் உடைஞ்சு உடைஞ்சு போகும்.கையெல்லாம் வேர்த்து வேர்த்து ஊத்தும். வார்னிங்க் பெல் அடிச்சப்புறமும் புத்தகத்தை விட்டுப் பிரிய முடியாமல் திருப்பித் திருப்பிப் படிக்கும் ரகம் நான். இத்தனைக்கும் கொஞ்சம் நல்லாவே படிப்பேன்.

ஆங்கிலப் பரீட்சையின் போது like வார்த்தையில் வாக்கியம் அமைக்க வேண்டும்.....பக்கத்திலிருந்த ப்ரிட்டானிக்கா பிஸ்கட் டப்பாவில் எழுதியிருந்த biscuits பார்த்து "I like biscuits" என்று எழுதியதுதான் நான் அடித்த முதல் காப்பி.நோட்டில் எழுதிப் போட்ட வாக்கியம் "I like cakes"....அதை எழுதாதாலோ என்னவோ மிஸ் அதை அடித்துத் திருத்தியதால் 100க்கு 99 மார்க்கில் நின்று போனேன்.அதிலிருந்து சொந்தமாக எழுதுவதை நிறுத்திவிட்டேன்.

அப்புறமாய் வந்த பரீட்சைகளில் நேரத்தையும் எனர்ஜியையும் தூக்கத்தையும் தொலைத்து மார்க் பின்னால் ஓடி ஓடிக் கொஞ்சம் அடைந்தும் நிறைய அடையாமலும்......இன்னமும் கண்ணில் ஏமாற்றத்துடன் நிமிர்ந்து பார்க்கும் இடம் மெடிகல் சீட்.பெர்சனல் இன்டர்வியு வரை அழைப்பு வந்த பின்னும் போய் பங்கு கொள்ள முடியாத பணக்கஷ்டம்....மனக் கஷ்டமும்தான் இப்போ வரைக்கும்.ம்ம்ம்ம்ம்ம் சரி விடுங்க....ஒரு நல்ல டாக்டரை இந்த மருத்துவ உலகம் இழந்து விட்டது!!!! !!!!!

பரீட்சையின் போது யாருக்கும் காட்டவும் கூடாது...யாரையும் பார்த்தும் எழுதக் கூடாதுன்னு ஒரு அதி பயங்கரக் கொள்கைவாதியாகவே இருந்திருக்கிறேன்.யுனிவெர்சிட்டிகளின் நிலை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த ஒரு பரீட்சை எம்.ஃபில்.இங்கே ஜெய்ப்பூரில்தான் எழுதினேன் .தமிழகத்தைச் சேர்ந்த ஒரு யுனிவெர்சிட்டிதான்.இங்கேயுள்ளவர்கள்தான் சென்டர் இன் சார்ஜ்.
பரிட்சை நேரம் மதியம் 2 மணி.திடீரென ஒரு ஃபோன் கால் பரீட்சை 12 மணிக்கு ஆரம்பித்து விடும்னும் சீக்கிரம் வாங்கன்னும்.நான் இருந்த இடத்திலிருந்து போய்ச் சேருவதற்கு மணி ஒன்றரையாகி விட்டது.பரீட்சை ஆரம்பித்து விட்டது.பரீட்சை ஹால் அமைதியாக இருந்தது.எல்லோரும் புத்தகத்தைக் கையில் வைத்துப் பார்த்து எழுதிக் கொண்டிருந்தார்கள்.Mass copying!.அமைதியாக என் இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டேன்.நடப்பதைப் பார்த்து வேர்த்து ஊத்தியது.கேள்வித்தாளைப் பார்த்தால் ஒண்ணுமே தெரியாதது போலிருந்தது.இந்த இடத்தில் பரீட்சை எழுதி என்னத்தைக் கிழிக்க என்னும் எண்ணத்துடன் எழுந்து கொண்டேன்.நமக்கு முந்தி நம்ம கண்ணீர்தான் நம்மளைக் காட்டிக் கொடுத்து விடுமே ...பக்கத்திலிருந்த மாணவன் கேட்டான்."என்னாச்சு மேம்?"
"பரீட்சை எழுதி என்ன ஆகப் போகுது?அதான் போறேன்".
"மேம்..நீங்க போறதினாலெ யாருக்கு நஷ்டம்...நல்லா யோசிச்சுப் பாருங்க.உங்களுக்குப் பிடிக்கலைன்னா நீங்க பார்த்து எழுதாதீங்க.உங்க படிப்பு எதுக்கு வீணாகணும்.?" என்று சொல்லி விட்டு அவன் பாட்டுக்கு எழுத ஆரம்பித்து விட்டான்.
சரின்னு அமைதியா எழுத ஆரம்பித்தேன்.எனக்குத் தெரிந்ததை எழுதி முடித்து வெளியில் வந்ததும் அதே பையனும் இன்னொருவனும் மேம் இப்படி ஒரு வாய்ப்பு அமைந்தும் காப்பியடிக்காமல் எழுதினீங்களே மேம்.உங்களுக்கு ஒரு சல்யூட்.....என்றார்கள்.
கொஞ்சமாய் மீண்டும் கண்ணில் நீர் எட்டிப் பார்த்தது.
அது எனக்காகவா?
அல்லது
வருங்கால சமுதாயத்துக்காகவா????
என்று இன்னமும் புரியாமல்......


தொடர அழைத்த முல்லைக்கு நன்றி !
தொடர அழைப்பது:
படித்தவுடன் அட!எனக்கும் எழுதணும் போலிருக்குன்னு நினைக்கும் எல்லோரையும்!

Wednesday, May 12, 2010

நானும் என் கடவுள்களும்!

சின்ன வயசுல கடவுள் நம்பிக்கை ஒருவித பயத்தோடவே இருந்தது.
அப்பிடி செய்யாதே... இப்பிடி செய்யக் கூடாது, சாமி தண்டிக்கும் சாமி கண்ணைக் குத்தும் .....இந்த வார்த்தைகளில் இருந்து நானும் தப்பிக்கவில்லை.

அப்புறம் என் ஷெல்ப் சுவரில் என் இஷ்ட தெய்வங்கள் அவ்வப்போது மாறுவதுண்டு.

மாற்றங்களுக்குப் பெரிய Strategy எதுவும் இருந்ததில்லை.

துணைவன் படம் பார்த்த மறுநாள் முருகன் படமும்,
திருமால் பெருமை பார்த்த பின் பெருமாள் படமும்,
சபரிமலை ஐயப்பன் பார்த்தபின் ஐயப்பன் படமும்,
ஜீஸஸ் பார்த்த பின் கர்த்தர் படமும்,
அன்னை வேளாங்கன்னி பார்த்த பின் வேளாங்கன்னியுமாக...
மாறிய படியே இருந்திருக்கிறது என் இஷ்ட தெய்வங்களின் வரிசை.

பின் சில காலங்களுக்கு சாமியிடம் வெறும் வியாபாரம் மட்டுமே நடத்தியிருக்கிறேன்.

80% மேல மார்க் தந்து விடு உனக்கு, ஒரு மாலை,
காணாமல் போன பேனாவைக் கண்டுபிடித்துக் கொடு, உனக்கு ஒரு ரூபாய்,
லேட்டா வீட்டுக்குப் போறதுக்கு அம்மா திட்டக் கூடாது, ஒரு விளக்கு.
இந்த ரேஞ்ச்லேதான் இருக்கும்.

இப்போ கொஞ்சம் மனது விரிந்து எண்ணங்கள் தெளிந்து கடவுள் உண்டு ...
அதற்கு கெட்டது செய்யவே தெரியாதுன்னும் நல்லது மட்டும்தான் செய்யும்னு தெளிவு வந்துருக்கு....

ரொம்ப எளிமையான வரிகளில் சொல்லணும்னா...
எனக்குக் கடவுள் உண்டு ஆனால் அதற்கு மதமும் பெயரும் கிடையாது! (இது என் நட்பின் பேட்டியிலிருந்து சுட்டது)

பின்னே நமக்கு நடக்கிற கெட்டதற்கெல்லாம் காரணம்...???

அட நாம் தாங்க!!!
அதுக்குப் போய் வீணாக் கடவுள் மேல பழியைப் போட்டுக்கிட்டு!!!!
இது ஒரு மீள் பதிவு...
படம் இணையத்திலிருந்து....

Monday, May 10, 2010

எப்போதாவாது யாரேனும் உணரலாம்....

எப்போதாவது முற்றத்தில்
வந்து விழும்
தூங்கணாங் குருவிக் கூடு
சொன்ன கதையும்.

தினம் உதிர்ந்து
குப்பைக்குப் போகும்
பூக்களும் இலைகளும்
சொன்ன கதையும்

வேறு வேறாயிருந்தாலும்

தார்ரோட்டில் தெரியாமல்
விழுந்து ஒட்டிக் கொண்ட
காலடித் தடங்கள்
சிக்கி கொண்டு சொன்ன கதையும்

வெட்டப் பட்ட மரம்
மண்ணுக்கடியில்
விட்டுச் சென்ற வேர்கள்
சொன்ன கதையும்

வேறு வேறாயிருந்தாலும்

மரித்துப் போன பட்டாம்பூச்சியை
இடம் பெயர்த்துத் தூக்கிப் போன
எறும்புக் கூட்டம் சொன்ன கதையில்

யாரேனும் உணரக் கூடும்
எல்லாக் கதைகளையும்.....

Saturday, May 8, 2010

எங்க ஊரு பசங்க-3

யூனிஃபார்ம் ஏண்டா சரியா போடலை ????இது கேள்வி...
பசங்க சும்மா பூந்து விளையாடுற ஏரியாவாச்சே????விடுவாங்களா????
பதில்கள்....
"மேம்....காலைலே கிளம்பும் போது பார்த்து சட்டை டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு கிழிஞ்சுருச்சு மேம்.........."

"காலைலே டேபிள் மேலதான் வச்சேன் கிளம்பும் போது பார்த்துக் காணோம் மேம்............."

"மேம் ஷூ காலை நறுக்க்னு கடிச்சுடுச்சு மேம்..."

"டையை அப்பா கேஸ் சிலிண்டர் கட்டி எடுத்துட்டுப் போனாங்க மேம்...அப்புறமா திரும்பிக் கொண்டாரவேயில்லை!:

"ஸ்கூல் பேட்ஜ்தானே மேம்...இப்போ காட்டுறேன்....ஊக்கு கிடைக்கலியா பேட்ஜைத் திருப்பிப் போட்டு சட்டைக்கு ஊக்காக்கிட்டேன்!"

"ஐடி கார்ட்தானே மேம்...எங்க அப்பா அவரோட ஐ.டி கார்டைத் தொலைச்சுட்டாங்க.... அதான் ரெண்டு நாளா என்னோடதைப் போட்டுட்டுப் போறாங்க!"

Why nails are long?இது கேள்வி!
இதென்ன மேம் பெரிசு...எங்கம்மா நெயில் பார்க்கணுமே இத மாதிரி மூணு மடங்கு
நீளமாக்கும்.

Why didn't you go for a haircut ?

மேம் திங்கள் அம்மா போகக் கூடாதுன்னுட்டாங்க....செவ்வாய் அப்பா போகக் கூடாதுன்னுட்டாங்க....புதன் வியாழன் தாத்தா பாட்டிக்காக போகலை....வெள்ளி எனக்கே போகப் பிடிக்கலை!சனிக்கிழமை கடைக்காரனுக்கு நான் வர்றது பிடிக்கலை...கடையை மூடிட்டுப் போயிட்டான் ...ஞாயிற்றுக் கிழமை நான் எந்த வேலையும் செய்யறதில்லே!

ஙே!!

Wednesday, May 5, 2010

வளையல்,கொலுசு,ஜிமிக்கி, மருதாணி!!

வாழ்வியல்(Life Skill) பாட வகுப்பின் போது ....
"What do you want the most?"
இது கேள்வி.
எல்லோரும் மார்க்,எஞ்சினியர்,டாக்டராகணும்,பணம்...அமெரிக்கா..இன்னும் பல பல எழுதியிருக்கும்போது என்னைக்கவர்ந்த பதில் இது.

வளையல்,கொலுசு,ஜிமிக்கி, மருதாணி என்று எழுதியிருந்த பெண்ணின் பதில்தான் அது.என்னை ஏன் கவர்ந்தது என்று நினைத்துப் பார்க்கையில் என்னையும் அந்த வயதில் ஈர்த்த விஷயங்கள் அதுவேதான்.

கலர் கலராய்க் கண்ணாடி வளையல்கள் போட்ட கைகளும்,அதன் உரசல்களும் மின்னல் வெட்டி வெட்டி சிணுங்கும் ஓசைகளுக்கும் அடிமை நான்...உடைந்த கண்ணாடி வளையல்களுக்காய் உயிர் போன மாதிரி அழுத அழுகைகள் தங்க மோதிரம் தொலைத்த போதும் கூட வராதது ஏன் என இன்றுவரை தெரியாத புதிரேதான்....

கொலுசு.....சொல்லும்போதே கிணி கிணியென மணியடிக்கும் மனதில்.பாதங்களில் கொலுசு போட ஆரம்பித்த நாளில் எத்தனை தடவை கால் அழகைப் பார்த்திருக்கிறேன் என்று எனக்குத்தான் தெரியும்.சன்னமாய்ச் சிணுங்கும் ஒலிக்காய் காலைத் தரையில் தோம் தோம் என அழுத்தி நடந்துப் பின் யாராவது கவனிக்கிறார்களா எனத் திரும்பி நாக்கைக் கடித்து வெட்கத்துடன் சிரித்த ஞாபகம் இப்போதும் மனதில் சாரலாய்.

பதின்ம வயதில் ஜிமிக்கி அணிந்த அத்தனை பெண்களையும் வயது வித்தியாசமின்றிப் பிடித்து விடும்.ஜிமிக்கி அணிந்த பெண்கள் பேசும்போது ஆடும் குடை ஜிமிக்கி கூந்தலிலும் காதோரத்திலும் ஏதோ ரகசியம் பேசுவது போலவேயிருக்கும்.ம.செ வரைந்த ஓவியங்களிலும் கூட இந்த ஜிமிக்கிக்காய்க் கொஞ்சம் கூடுதல் பிடிக்கும் இந்த ஓவியங்கள்.எல்லாப் பெண்களையும் அழகான தேவதையாக்கும் வித்தை தெரியும் இந்த ஜிமிக்கிகளுக்கு !

மருதாணிப் பேய் என்னும் பெயரே உண்டு எனக்கு.மிக்ஸியெல்லாம் கிடையாது அப்போ ...மாங்கு மாங்குன்னு அம்மியில் அரைக்கணும்.ஆனாலும் அம்மம்மா வீட்டுக்குப் போகும் போதெல்லாம் நாலு நாளைக்கு ஒரு தடவை இலை பறித்து அரைத்துக் கையெல்லாம் அப்பி விட்டு......அன்னிக்குன்னு பார்த்து மூக்குலெ அரிப்பு....கொஞ்சம் சொறிந்து விடுங்க அப்படீன்னு ஒருத்தர் மாற்றி ஒருத்தர்கிட்டே கெஞ்சி....காலையில் கழுவிப் பார்க்கும் ரத்தச் சிவப்பு விரல்களை அப்படியே திங்க வேண்டும் போலப் பிடிக்கும் எனக்கு.

அதனதன் வயதுக்குரிய இயல்பான ரசனைகளை மழுங்கடிக்கச் செய்யும்,மதிப்பெண்களின் பின்னாலும் ப்ரொஃபெஷன்களின் பின்னாலும் ஓடவைக்கும் கல்வி நிலை தேவைதானா? என்று கேள்வி எழுந்த போதும்

Goal Setting என்ற அடுத்த பாடத்தினை மனதின்றி நடத்தத் தொடங்கினேன்.

Tuesday, April 27, 2010

கேட்கும் வரம் ஒன்றே....

முன்பொரு நாள்
கூட்டம் கூட்டமாய்
வாழ்ந்திருந்தோம்

அப்புறமாய்

என் இலையுருவி
ஆடையாக்கி அணிந்து
கொண்டீர்கள்.........

மற்றொருநாள்

என் உடமைக்
காய் கனி கவர்ந்து
உணவென்றீர்கள்.....

சிலநாள் மலர்
பறித்து மாலையாக்கிக்
கடவுளைக் கொண்டாடினீர்கள்

பின்பொருநாள்
என் கைகாலுடைத்து
அடுப்பெரித்துக் கொண்டீர்கள்.........
வீடு கட்டிக் கொண்டீர்கள்

வன்மம் காட்டக் காரணங்கள்
இத்தனையிருந்தும் மௌனமாய்க்
கைகள் விரித்து வானம் பார்த்துத்
தவமிருந்தோம்......

கேட்கும் வரம் ஒன்றே
எங்களைப் புதைக்கும் போது
மரப் பெட்டியில் புதைக்காதீர்..
அதற்காகவும் மரம் ஒன்றை வெட்டாதீர்..

எங்களின்
புகைப்படம் ஒன்றெடுத்து
பத்திரப் படுத்துங்கள்....
வருங்காலத் தலைமுறைக்குச்
சொல்லுங்கள்
"இதுதான் மரமென்று!"....

Monday, April 19, 2010

சிலச் சில நேரங்களில்..

மாடிப்படியிலிருந்து
அறுந்து விழுந்த
கழுத்து மணி போல
சிதறித் துடிக்கின்றன
சிலநேரங்களில்...

பைட் பைப்பரின் இசை
பின்னால் போகும்
எலிகள் போல ஓடிப் போய்
நதியில் விழுந்து உயிர் விடுகின்றன
சில நேரங்களில்....

நடுக்கடலில் ஆடிக்
கொட்டமடிக்கும்
கப்பல் போல்
தனித்துத் திரியும் போது
ஆர்ப்பரித்து அடங்குகிறது
சில நேரங்களில்....

பிழைத்துக் கிடந்தால்
மீட்டெடுத்துக் கொள்வதற்கான
மனக் குறிப்புகளைப் பதிய முடியாத
இயலாமை உணர்வோடு
பூங்காவின் வட்டப்பாதையில்
சுற்றிச் சுற்றி வரும்
சில நேரங்களில்...

எல்லோருக்குமான
வானம் விரிந்து பரந்து கிடந்தது....
எனக்கான எண்ணங்களுக்காய்
நானும் வானம் பார்த்துக் கிடந்தேன்...

Thursday, April 15, 2010

நிமிடத்தில் கடவுளாகலாம்-3

இங்கே ஜெய்ப்பூரில் எனக்குத் தெரிந்த தமிழ்க் குடும்பம்.கணவன்,மனைவி,இரு குழந்தைகள்.அந்தப் பெண்ணின் தம்பிக்கு இருநாட்கள் முன்னால் ரத்தப் புற்று நோய் என்று தகவல் வந்தது.வாரம் ஐந்து லட்சம் செலவாகும், முடியாத பட்சம் சென்னைப் பொது மருத்துவமனையில் சேருங்கள் என்ற மருத்துவரின் மிரட்டல்.அவ்வளவு செலவளிக்க முடியாத நிலமை.நிலம் நகைகளை விற்று ஒரு லட்சம் புரட்டிக் கொண்டு உடனடியாக சென்னை வந்து பொது மருத்துவமனையை அடைந்தால்......இன்று அரைநாள் விடுமுறை..நாளை சித்திரைத் திருநாள் விடுமுறை...15ம் தேதி காலையில் வாருங்கள் என்ற பதில்.கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள்.என்ன செய்ய...என்று எதுவும் புரியாமல் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் நோயாளிக்கும் கஷ்டம் என இங்கே இவர்களிடம் தொடர்பு கொள்ளக் குடும்பம் இடிந்து போனது.

அந்தப் பெண் அழுது பதறிப் போய் அவர்களுக்குத் தெரிந்த ஒரே தமிழ்க் குடும்பமான எங்களுடன்
என்ன செய்ய ...என்று தொடர்பு கொள்ள.....எனக்கும் ஒன்றும் புரியவில்லை.சென்னையில் அக்கா இருந்தாலும் பொது மருத்துவமனையில் யாரும் தெரியாத நிலையில் என்ன செய்ய என்று திகைத்துப் போன போது .............
நினைவு வந்தது....பதிவுலகம்...என்னென்னமோ படிக்கிறோமே உதவி கிடைக்குமா என்று சிறிது யோசித்துக் கொண்டே கோவை சஞ்செய் காந்திக்கு ஒரே ஒரு ஃபோன்தான் செய்தேன்.......ஒரே முறை பேசியிருக்கிறேன்...மற்றபடி அப்பப்போ எப்பவாது
Hi !how r u?..chatting....அவ்வ்ளோதான் அறிமுகம். என்னென்னவோ செய்து உடன் மருத்துவரும் பதிவருமான ப்ரூனோவின் தொலைபேசி நம்பர்.....உடன் என்ன செய்யவேண்டும் என்று அடுத்தடுத்து தகவல் வர..இன்று அந்தப் பெண்ணின் தம்பி பொது மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்......
நிறைய நேரங்களில் இந்த இடத்திலா நாம் இருக்கிறோம் என வருத்தப்பட்டு எழுதுவதை நிறுத்தலாமா என்று கூட நினைத்திருக்கிறேன்.
இன்று இங்கே இருப்பதற்காகப் பெருமைப் படுகிறேன்...
ம்ம்ம்.....தொலைபேசி மூலம் கூட நிமிடத்தில் கடவுளாகலாம்...
மனம் நிறைந்திருக்கிறது.
சஞ்செய்க்கும் மருத்துவர் ப்ரூனோவுக்கும் வெறும் நன்றி என்ற வார்த்தை மட்டும் சொல்வது சரியாகுமா???தெரியாது....ஆனாலும் நன்றி!

Monday, April 12, 2010

நானும் பெண்தானே!!!

புடிச்ச பத்து பெண்கள் ரூல்ஸ் எல்லாம் எல்லாருக்கும் தெரியும்னு நினைக்கிறேன்....ஏன்னா எல்லாரும் எழுதி முடிச்சப்புறம் கடைசியா அசைன்மென்ட் முடிக்கிறவங்ககிட்டே எந்தக் கேள்வியும் இல்லாமே வாங்கிக்கிற ஆசிரியர் மாதிரி ஏத்துக்கோங்க! ப்ளீஸ்..லேட்டாயிடுச்சு!                       
 எல்லாரும் எழுதிட்டதுனாலே யாரையுமே எழுதக் கூப்பிடலை!
அப்புறம் ஒன்பது பெண்கள்தானே இருக்குன்னு கவலைப்படுறவங்களுக்குத் தனியா ஒரு டிஸ்கி:நானும் பெண்தானே!!!

Tuesday, April 6, 2010

வில்லங்கம் புடிச்ச பாட்டி...

                 எப்போதும் போல நிறுத்தத்தில் நிற்காமல்............தூஊஊஊஊஊஊஊஊஊஊஊரமாகப் போய் நிறுத்தினார் பஸ் ஓட்டுனர்.அந்தப் பாட்டி தூக்க முடியாத பெரிய கூடையுடன்
"கடங்காரன் எம்புட்டுத் தூரத்திலே போய் நிறுத்துறான்" என்றவாறே வாசலில் நின்றிருந்த கல்லூரி மாணவர்களை இடித்துக் கொண்டே கூட்டத்தில் நுழைந்து பொதுவில் பார்த்துச் சும்மா சிரித்து வைத்தாள். 

"பாட்டி டிரைவர் உங்களுக்கு எம்புட்டுக் கடன் த்ரணும்னு சொல்லுங்க பாட்டி ....தூக்கிரலாம்" என்றான் அருண். அவ்வ்ளோதான் இன்னிக்குப் பொழுது பாட்டியைக் கலாய்ப்பதில் போகப் போகிறதென்பது புரிந்தது எல்லோருக்கும். 

"எனக்கெதுக்குப்பா டிரைவர் கடன் தரணும்" என்றாள் பாட்டி அப்பாவியாக. நீங்கதானெ பாட்டி டிரைவரைக் கடங்காரன்னு சொன்னீங்க"என்றான் அருண் விடாமல். பொக்கை வாயை அகலமாய்த் திறந்து சிரித்தாள் பாட்டி. 

"எப்பா...கொஞ்சம் தள்ளி உக்காரேன்! நானும் செத்தோலெ உக்காந்துக்கிறேன்" என்றாள் பாட்டி 
"என்னா பாட்டி இவ்வ்ளோ பெரிய பாம்படம் போட்டிருக்கே....எத்தனை பவுனு ? " பவுனு வெலை தெரியுமா??? அத்துட்டுப் போயிருவானுங்க! பாத்துக் கவனமாயிரு பாட்டி" என்று முனைப்போடு  கலாய்த்துக் கொண்டிருந்தான் அருண்..
" என்னாப்பா...எனக்குக் காது கொஞ்சம் மந்தம்ப்பா...சரியாக் கேக்காது...கொஞ்சம் சத்தமாச் சொல்லுப்பா"
அருண் சும்மா ஏதோ சொல்வது போல வாயைசைத்தான்.."இப்போ கேக்குதா பாட்டி" என்றான்
பாட்டி அருணின் காதிலிருந்த ஹெட் போனைக் காட்டி
"அச்சோ உனக்கும் காது கேக்காதா தம்பி...செவிட்டு மெஷின் மாட்டிருக்கே..???

"ஹூம்....முன்னெல்லாம் எங்கியோ யாருக்கோ காது கேக்கலைன்னு ஒண்ணு ரெண்டு பாம்படக் கிழவிகள்தான் சொல்லுவாய்ங்க....இப்போ பாரு யாரைப் பார்த்தாலும் செவிட்டு மெஷினை மாட்டிருக்காங்க......செவிட்டு மெஷின் அவ்வ்ளோ சல்லிசாவா கிடைக்குது?????........என்று எங்களைச் செமையாய்க் கலாய்த்து விட்டுக் கலாய்த்தது தெரியாமல் இறங்கிப் போய்க் கொண்டிருந்தாள் வில்லங்கம் புடிச்ச பாட்டி...

Friday, April 2, 2010

நட்சத்திரங்கள் ஏன் மரணிக்கிறது?

ஒற்றைப் பனை மரத்தின்
உச்சியில் கூடு கட்ட
முயற்சித்துத் தோற்றது
அந்த ஒற்றைப் பறவை ..

தொங்கு கிளையில்
அழகானச் சிக்கல்களாய்
ஊஞ்சல் போல்
எளிதில் கூடு கட்டிக் கொண்டது
இன்னொரு பறவை..

ஜெயித்தலும் தோற்றலும்
அவரவர்
கண்டடைந்த வழிகளின்
தவறேயன்றிக் கூடு
கட்டுதலே தவறன்று..

தோற்றுப் போனவர்களுக்கான
புதிய உலகத்தின்
வானத்தில் நட்சத்திரங்கள்
தானே விழுந்து
மரணித்துக் கொண்டிருந்தன..

ஜெயித்தவர்களுக்கான
புதிய உலகத்தில்
வானமே நட்சத்திரமாய்
ஜொலித்துக் கொண்டிருந்தது!
ஜெயிப்போம்..!!ஜொலிப்போம்!!!

Tuesday, March 30, 2010

ரயில் பயணங்கள் எனக்குப் பிடிப்பதில்லை...

எப்போதும் ரயில் பயணம் எனக்கு மிகவும் பிடித்தமானது.அதிலும் ஜன்னலோரமாய் ஓரிடமும் பாட்டுக் கேட்க ஒரு கருவியும் கையில் பிடித்தமான எழுத்தாளரின் புத்தகமும்..இருந்தால் நான் தனி உலகத்துள் நுழைந்து விடுவேன்.அம்மம்மா வீட்டின் எந்த ஜன்னலிலிருந்து பார்த்தாலும் தெரியும் தட தடத்து ஓடும் ரயிலின் நீள் உடல் அப்போது, எப்போதுதான் அதில் பயணம் வசப்ப்படும் என ஒரு எதிர்பார்ப்போடு.....யாராயிருந்தால் என்ன சந்தோஷமாகப் போய் வரட்டும் என்று வேகமாக ஆண் பெண் பேதமின்றிக் கையாட்டி வழியனுப்பும் வயது அது.

ஜன்னல் ஓரம் அமர்ந்து ஜன்னலை மூடத் தேவையில்லாத அளவு சாரல் அடித்தால் ம்ம்ம்...சொர்க்கமே ரயிலில்.அதுவும் ரொம்பத் தொண தொணக்காத சக பயணிகளுமாய் இருந்து விட்டால்....அன்றும் அப்படித்தான் ....என் அருகில் ஒரு வயதான தம்பதியர்.. மற்றும்.... அவள் தன் இரு குழந்தைகளுடன் எதிர் இருக்கையில் வந்து அமர்ந்தாள்.யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை.ஒரு ஓவியம் போல் அழகாக இருந்தாள் .இரு குழந்தைகளும் பெர்த்தில் ஏறி ஆட்டம் போட்டன.இவள் எதையும் கண்டு கொள்ளவில்லை.தொண தொணப்புப் பிடிக்காத எனக்கே ஏதாவது பேச மாட்டாளா என்றிருந்தது.அவள் ஜன்னலில் கன்னம் வைத்தவாறு வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் மரம், செடி, மலைகளின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தாள்.அவளும் என்னைப் போல ரயில் பயணத்தில் மௌனம் விரும்புபவள் போல.

இப்படி நான் நினைத்துக் கொண்டிருந்ததில் மண் விழுந்தது.கொஞ்ச நேரம் கழித்து வயதான தம்பதியரைப் பார்த்துப் புன்னகைத்தாள். அப்புறமாய்ப் பேச ஆரம்பித்தவள்..................பேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏசிக் கொண்டேயிருந்தாள்.பேசமாட்டாளா என நினைத்த எனக்கே இவள் வாய் மூட மாட்டாளா என்றிருந்தது.என்னவோ இன்றுதான் பேசக் கிடைத்தக் கடைசி நாள் போலப் பேசிக் கொண்டேயிருந்தாள்.

எனக்கென்னவோ அவள் சந்தோஷமாயிருப்பதைப் போலக் காட்டிக் கொண்டேயிருந்தாள் என்று தோன்றிற்று.இரவு வெகு நேரம் லைட்டை எரியவிட்டு அடுத்தவர் தூக்கம் பற்றிக் கவலையில்லாமல் கையில் ஒரு புத்தகத்துடன் இரவு வெளியில் ஏதும் தெரியாத கருப்பு இருளைச் சன்னல் வழியாகக் கோபமாக வெறித்துக் கொண்டிருந்தாள்.அந்த வயதானவர்களும் தூங்க முடியாமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தார்கள்

ரொம்பவும் தயங்கித் தயங்கி லைட்டை ஆஃப் பண்ணிடுங்களேன் எனப் பணிவாகத்தான் சொன்னேன். "இல்லை எனக்கு வேண்டும்" என்று கடுமையாகச் சொன்னாள்.எதுக்காக இவ்வளவு பணிவு???பதினோரு மணிக்கு மேலாகி விட்ட நிலையில் உரிமையாகவே லைட்டை ஆஃப் செய்யச் சொல்லலாமே என நினைத்துக் கொண்டு......"என்னங்க....இவ்வ்
ளோ நேரத்துக்கு லைட்டைப் போடணும்னு சொல்றீங்க....பாருங்க அவங்க எவ்வ்ளோ கஷ்டப் படறாங்க...லைட்டை ஆஃப் செய்யுங்க,...." அப்படீன்னு கொஞ்சம் கடுமையாகவே சொன்னேன்.
மறுபடியும் "இல்லை எனக்கு வேண்டும்" எனக் குரலை உயர்த்திச் சொல்லவும் எனக்கு ஒருமாதிரியாகப் போய் விட்டது. நான் இப்படி வீம்பு பிடிப்பவளிடம் என்ன சொல்வது என்று அமைதியாகத் திரும்பிப் படுத்துக் கொண்டேன்.இருந்தாலும் என் ஈகோ என்னும் பேய் தலை விரித்தாடியது.அதெப்படி அப்படி விட்டு விடுவது?...நானென்ன தவறாகக் கேட்டு விட்டேன்?.....என்று மனம் அடங்காமல் ஆடியது...கோபத்தில் நானே எதுவும் கேட்காமலும் சொல்லாமலும் லைட்டை ஆஃப் செய்து விட்டேன். இப்போதுதான் மனம் அடங்கியது.அவள் இன்னும் அசையாமல் ஜன்னலைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள்.

காலையில் சுமுகமாகக் கேட்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டே எழுந்தேன்.எல்லோரும் இறங்குவதற்கான ஏற்பாடுகளில் இருந்தார்கள். குழந்தைகள் சீக்கிரம் தூக்கம் கலைந்த எரிச்சலில் நச்சரித்துக் கொண்டிருந்தார்கள்.அவள் எந்த ஒரு உணர்ச்சியுமில்லாமல் இருந்தாள்.

நான் வழக்கம் போல் ஜன்னலில் பாட்டு,ஓடும் மரம் என ஐக்கியமாகியிருந்தேன். நிமிட நேரத்தில் ஏதோ ஒடியது போன்ற சிறு சலசலப்புக்குப் பிறகு ஜன்னலின் வழியாக அவள் விழுந்து புரண்டு உருள்வதையும் மீறி ரயில் வெகு வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை......தவறி விழுந்தாளா?????????தானாகவே விழுந்தாளா??????????????எல்லோரும் அலறி.....சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி விசாரணை......அது இது எல்லாம் முடிந்து......ஆம் எல்லாம் முடிந்துதான் போயிருந்தது.குழந்தைகள் ஒன்றும் புரியாமல் அங்குமிங்கும் பார்த்து அழக் கூடத் தெரியாமல் இருந்தனர்.
இன்றுவரை என் ரயில் பயணங்களில் ஜன்னலோரத்தைப் பார்த்தால் நடுங்குகிறேன்.ஜன்னலில் ஓடும் மரம் மலைகளுடன் அவள் ஆரஞ்சு நிறப் புடவையுடன் மீண்டும் மீண்டும் உருள்வது போன்ற பிரம்மை என் கூடவே ஒட்டிக் கொண்டுவிட்டது.........முடிந்தவரை ரயில் பயணங்களைத் தவிர்க்கிறேன்.இரவில் அவளுக்கென்ன கவலையோ..........?ஏன் அப்படிக் கடுமையாக நடந்து கொண்டேன்...?என்று கேட்டுக் கொண்டேயிருக்கிறேன்.எது அவளை இப்படி ஒரு மரணத்துக்குத் தூண்டியது? என்னும் கேள்விக்கு குழந்தைகளிடம் நடத்திய விசாரணையின் போது கணவனின் கொடுமை எனப் பின்பு தெரிந்து கொண்டாலும் தேவையில்லாமல் மனதில் ............மனித மனங்களைப் புரிந்து கொண்டு நடந்து கொள்ளத் தெரியவில்லையே என்னும் குற்ற உணர்ச்சியிருந்து கொண்டேதானிருக்கிறது.........இப்போதெல்லாம் ரயில் பயணங்கள் எனக்குப் பிடிப்பதில்லை

Saturday, March 27, 2010

என் பெயரில் ஒரு ஊரும்...தெருவும்...

தலைவரின் ஆசைப் பட்டியலில்....
என் பெயரில் ஒரு ஊரும்
எனக்கான ஒரு தெருவும்
அங்கே என் பெயரில் ஒரு பள்ளியும்
கல்லூரியை எட்டிப் பார்த்திராத
நானாகிய என் பெயரில்
ஒரு பல்கலைக் கழகமும்
மட்டும் போதும்
எனக்குப் பின் என் பெயர் சொல்ல.....

இறந்தபின் எனக்கு
இந்த இடத்தில் புகைப்படம்
மாட்டுங்கள் என்றும்
இங்கே சிலை வையுங்கள்
என்றும் வேண்டுமானால்
சொல்லி விட்டுப் போகலாம்....
எனக்குப் பின் என் பெயர் சொல்ல......
என்று அடுக்கிக் கொண்டே போக....

மிச்சமிருக்கும் ஒன்றிரண்டு பொருள்களில்
பேரெழுதி அவை யாருக்கு
என்று வேண்டுமானால்
நீங்கள் தீர்மானியுங்கள்............

பொதுவில் யாருக்கு எங்கே
இடமென்பதை நீங்களல்ல
உங்கள் தலைமுறைகள்
தீர்மானிக்கட்டும் தலைவரே!

Wednesday, March 24, 2010

அடப் போங்க கடவுளே!

திடீரென எல்லோருமாய்ச் சேர்ந்து என்னைக் கடவுளாக ஆகிவிடுங்கள் என்று சொல்லி விட்டுப் போனார்கள்...கடவுளாக இருப்பது கஷ்டமா?உள்ளங்கையைக் கொஞ்சம் விரித்துப் புன்னகைக்கத்தானே வேண்டும்! இதென்ன பெரிய விஷயம்?செய்து விடலாம்.என்றுதான் நினைத்தேன்.பிறகு சிலர் வந்து நிறைய நகைகளை அணிவித்து பெரிய கிரீடத்தையும் வைத்து விட்டுப் போய் விட்டார்கள்.சரி அழகாய்த்தானே இருக்கிறேன் என நினைத்துக் கொண்டேன்.

கொஞ்சம் அழகான பூக்களாலான மாலை தோள்களில்....கொஞ்சம் பூக்கள் கூந்தலில்...கொஞ்சம் பூக்கள் பாதங்களில்..........பாதங்களில் கிடந்த ஒரு பூ என்னைக் கேட்டது..
"ஏன் கடவுளே இந்தப் பாரபட்சம்? சில பூக்களை உன் தோள்களிலும்,சில பூக்களைக் கூந்தலிலும்,சில பூக்களைப் பாதங்களிலுமாய் ஏனிப்படி????பதில் சொல்லியே ஆக வேண்டும்...."எனப் பிடிவாதம் பிடித்தது.

எனக்குப் பதிலொன்றும் தெரியவில்லை...கடவுளாயிற்றே...
எப்படிப் பதில் தெரியாது எனச் சொல்வது?

"அட! நீயாவது பரவாயில்லை ...கடவுளின் பாதங்களில் இருக்கிறாய்....சில பூக்கள் பிணத்தின் மேல் மாலையாக....இருக்கிற இடத்தில் நிம்மதியாக இரு நிறைவாய் இரு..." புத்திசாலித்தனமாகப் பதில் சொல்லிவிட்டதாக நினைத்துப் புன்னகைத்தேன்..

"அடக் கடவுளே ...அதை எப்படி ஏன் செய்கிறாய் என்றுதான் கேட்டேன்.....எதை வைத்து நிர்ணயம் செய்கிறாய் இந்தப் பூ கடவுளுக்கென்றும் இந்தப் பூ பிணத்துக்கென்றும்???? ஏன் அப்படிப் பாரபட்சம் காட்டுகிறாய்? பெற்ற குழந்தைகளிடம் பாரபட்சம் காட்டாதீர்கள் எனப் பெற்றோருக்கும்...மாணவர்களிடம் பாரபட்சம் காட்டாதீர்கள் என்று ஆசிரியரிடமும் கத்திக் கொண்டியோருக்கும் காலகட்டத்தில் நீ மட்டும் எப்படிப் பாரபட்சமாயிருக்கிறாய்?"


எனக்குப் பதிலொன்றும் தெரியவில்லை.இந்தப் பூ என்ன இப்படியெல்லாம் கேட்கிறது.நாளைக்கு வேணும்னா இந்தப் பூ கடவுளுக்கு....இந்தப் பூ பிணத்துக்குன்னு செலெக்ட் பண்ணாம இருந்துடலாம்......ஆனா இப்போ பதில் தெரிலியே!கடவுளுக்கே தெரியவில்லையென்று எப்படிச் சொல்வது? அதனால் எப்போதும் போல புன்னகைத்துக் கையை உயர்த்திக் கண்களை மூடிக் கொண்டேன்.


பரீட்சைக் காலம்....பசங்க எல்லாம் எளிதான பேப்பர் வேண்டும் என்றும், நான் படித்தவையே வரவேண்டும் என்றும், டெரிவேஷன்ஸ் வரவேண்டும், என்றும், வரக் கூடாது என்றும்,ஈகுவேஷன்ஸ் வரவேண்டும் என்றும், வரக்கூடாது என்றும்,பலவிதமான வேண்டுதல்......யாரையும் ஏமாற்றக் கூடாது என்றும் ,எல்லோரையும் மகிழ்விக்கவேண்டும் என்றும் கங்கணம் கட்டிக் கொண்டு கேள்வித்தாள் தயாரிக்க ஆரம்பித்தேன்............அச்சோ.
..எப்பூடி...?ஒருத்தன் படித்ததை மட்டும் கேட்பது? அட? ஒருத்தனுக்கு ஈகுவேஷன்ஸ் வராதுன்னா...இன்னொருத்தனுக்கு அது மட்டும்தானே வருது....ஒண்ணும் புரிலியே...இப்போ என்னா பண்றது?...சரி சரி எப்போதும் போல கையை உயர்த்திப் புன்னகைத்துக் கண்களை மூடிக் கொண்டேன்.
ஐயய்யோ இவங்களுக்கு யார் கேள்வித்தாள் ரெடி பண்ணுவாங்கன்னு கவலையாயிருந்தாலும் நான் என்ன பண்ண?

"கடவுளே என் புள்ளே முதமுதல்லே பட்டணம் போறான் கூடவே இருந்து பர்த்துக்கோப்பா....."என்று வேண்டினான் அவன்.நான் பெட்டி ரெடி பண்ணி கிளம்பிட்டிருக்கப்ப.....
"Ohhh...God..my child first time அமெரிக்கா போறான்...Be with him....."என்று இவனும் வேண்ட.....சரி சரி அமெரிக்கா போலாம்னு நினைக்கும் போதே.....இன்னொருத்தன்.....ம்ம்
ம் எங்கதான் போறது? ம்ம்ம்ம் ஒண்ணும் முடிலை....
சரி சரி எப்போதும் போல கையை உயர்த்திப் புன்னகைத்துக் கண்களை மூடிக் கொண்டேன்.

யாரும் பார்க்காதபடி ஓடியே வந்து விட்டேன். ரூமுக்குள் போய் அடைந்து கொண்டேன்......காதை மூடிக் கொண்டேன்...........ஹையா! இனி யார் வேண்டினாலும் கேட்காது.....என நினைத்துக் கொண்டே தூங்கலாம்னு நினைத்த போது...........ஒரே குழப்பநிலையில் பலவேண்டுதல்கள் தெளிவில்லாமல்...எல்லோரும் வேண்டுதல்களும் கேள்விகளுமாகக் கேட்டுக் கத்திக் கொண்டிருந்தார்கள்.....சிலர் ஜப்பானிய மொழியிலும்,சில சீன மொழியிலும் ....பல்வேறு மொழிகளிலுமாய் காட்டுக் கத்தல்.....யாருக்குப் பதில் சொல்ல...யாரைக் காப்பாற்ற என்று பயங்கரக் குழப்பத்தில் ........அய்யோடா கடவுளாய் இருப்பதில் இவ்வ்ளோ கஷ்டமா???? அப்படீன்னு அடக் கடவுளேன்னு தலையில் கைவைத்துக் கொண்டேன்.

நாளைக்குக் காலையில் பூக்கள் எங்கே போகும்? நாம்தான் நம்ம வேலையைச் செய்யலியே????நாளைக்குப் பரீட்சை எப்பிடி நடக்கும்????நாம்தான் கேள்வித்தாள் தயாரிக்கலியே?????அவன் கூடச் சென்னைக்கு யார் போறது....இவன் கூட அமெரிக்கா யார் போறதுன்னு ஒரே குழப்பம்....கடவுளுக்கு இவ்வ்ளோ வேலையா???? போங்கடா...கொஞ்ச நாளைக்கு எதுவுமே செய்யப் போறதில்லை என்னதான் செய்றீங்கன்னு பார்க்கிறேன்..........அப்பிடி
யே தூங்கிட்டேன் போல.....காலையில் கண்ணக் கசக்கிட்டே வெளியே வந்தா அட....
சாமிப் படத்துலே பூ!
நம்மதான் இந்த உலகத்தைத் தாங்கிட்டிருக்கோம்னும்...நாம இல்லைன்னா எதுவும் நடக்காதுன்னும் நினைச்சுட்டிருந்தோமே.....இந்
தப் பூவை யார் சாமிக்குன்னு செலெக்ட் பண்ணுனது???

அடப் போங்க கடவுளே!
கடவுளையே படைச்சு........அவரை எங்கேயோ கொண்டு போய் நிறுத்தியிருக்கோமே!...இத்தனூண்
டுப் பூ...இதைக் கடவுளுக்குன்னு செலெக்ட் பண்றதா பெரிய விஷயம்னு.....மனிதன் சிரித்துக் கொண்டான்.!

Monday, March 22, 2010

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்-4

அண்ணாவுக்குக் கல்யாணம்
முன் யோசனையுடன் முன் ரூம்
அண்ணா அண்ணிக்கும்
எழுதிக் கொடுக்கப் பட்டது...

தம்பிக்குக் கல்யாணம்
சமயோசிதமாய்ப் பின் ரூம்
தம்பிக்கும் மாலினிக்குமாய்
பத்திரப் படுத்தப் பட்டது....

ஒன்றும் சொல்லாமல்
அம்மாவும் அப்பாவும்
ஹாலுக்கு
இடம் பெயர்ந்து
கொண்டார்கள்.........

ஹாலிலிருந்து
பாட்டி வீடு ரெண்டு படும்படிக்
கத்திக் கொண்டே
பூனையை விரட்டி
மாடிப்படிக்கு அடியில்
குடி கொண்டாள்..............

பாட்டியும் அப்பாவும்
அடுத்தடுத்து படத்துக்குள்
நுழைந்து பொட்டும் பூவும்
வைத்துச் சாமியாகிப்
போனார்கள்

அதற்கப்புறமான அதிகாலையில்
யாரும் சொல்லாமலேயே
அம்மா அமைதியாக
மாடிப்படிக்குக் கீழே
முகம் மறைத்துக் கொண்டாள்

எல்லோருக்கும் பொதுவான
வீடு மட்டும் எப்போதும் போல
கலைந்து கொண்டேயிருந்தது........

Wednesday, March 17, 2010

மீன்களும் மீனாக்களும்!

ண்ணாடிக் குடுவை ஒன்றை இருப்பிடமாக்கி ஐந்து மீன்கள் அதில் குடியிருந்தது. ரொம்பவும் அலையாமல் கிடைத்தது இந்தக் குடுவை. பெரிய மீன்தொட்டிக்குள் ஆழமாகவும் விசாலமாகவும் நீந்தி வந்த மீன்களுக்குத் திடீரென குறுகிய குடுவைக்குள் வீடு மாற்றியதில் நிறைய சிரமங்கள் இருந்தன. எங்கு எப்போ திரும்பினாலும் கண்ணாடிச் சுவரில் முட்டிக் கொண்டன.

அந்தப் பெரிய தொட்டியில் நிறைய நட்பு மீன்களை விட்டு வந்ததில் வேறு வருத்தமாயிருந்தது. உணவுக்கு மட்டும் பஞ்சமில்லை. அங்கும் இங்கும் அலைந்து சக மீன்களோடு சண்டை போடாமலேயே தேவைக்கு அதிகமாகவே காலையும் மாலையும் கிடைத்தது. குடுவை வசதியாக இருக்கிறதா? பிடித்திருக்கிறதா? என்றெல்லாம் மீன்களிடம் யாரும் கேட்கவில்லை. பளிச் பளிச் பல்புகளையும்,ப்ளாஸ்டிக் செடிகளையும் ஃபௌன்டன்களையும் நட்டு அழகாக்கியாயிற்று.

மீனாவுக்குப் புது வீடு பிடிக்கவேயில்லை. பெரிய பெரிய தூண் வைத்து திண்ணையுள்ள வீட்டிலிருந்து இப்படி மாடியில் க்ரில் போட்ட வீடு சிறையாய்த் தெரிந்தது. எங்கு திரும்பினாலும் முட்டும் சுவரும் கதவுகளும் வினோதமாகத் தெரிந்தன. பாட்டி தாத்தாவையும் அம்பி, சவி, முத்து, லல்லி எல்லோரையும் விட்டு வந்ததில் ரொம்ப வருத்தத்தில் இருந்தாள் மீனா. அம்மா சந்தோஷத்தில் விதம் விதமாகச் சமைத்துக் கொடுத்தாள். போட்டி போட்டுச் சாப்பிடத்தான் ஆளில்லை.

வீடு பிடித்திருக்கிறதா, காற்று வருகிறதா, வசதியாக இருக்கிறதா என்றேல்லாம் யாரும் மீனாவிடம் கேட்கவில்லை. மீனாவின் அறை அழகழகான பொம்மைகளாலும் பூக்களாலும் அலங்கரித்தாயிற்று.

"மீனு... மீனாக்குட்டி அம்மா ஆஃபீஸ் போயிட்டு வரேன். கிரில்லுக்குப் பூட்டுப் போட்டாச்சு. சமத்தா இருக்கணும். சரியா? சாப்பாடு டேபிளில் வச்சுருக்கேன். எது வேணும்னாலும் ஃப்ரிட்ஜ்லேருந்து எடுத்துச் சாப்பிடு. அம்மா சீக்கிரம் வந்துருவேன். யாருக்கும் கதவு திறக்காதே... சரியா?"

பதிலை எதிர்பார்க்காமல் அம்மா போய் விட்டாள்.

மீனா மீன்குடுவைக்குப் பக்கத்தில் வந்து மீன்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். மீன்கள் ஒரு இடத்தில் இல்லாமல் நீந்திக் கொண்டேயிருந்தன. குடுவையை விரலால் தட்டினால் பயத்தில் மிரண்டவை போல் வேகம் வேகமாக நீந்தின. திரும்பத் திரும்பக் கண்ணாடிச் சுவரில் முட்டி முட்டிப் பார்த்து ஏமாந்தன. பயம் மீன்களுடன் எப்போதுமிருப்பது போலத் தோன்றும். மீனா என்ன செய்யவென்று அங்குமிங்கும் சுற்றி கொஞ்சம் சாப்பிட்டாள். இடையிடையே மீன்களையும் எட்டிப் பார்த்துக் கொண்டாள்.

மீனுக்குப் பசிக்குமோ என்றெண்ணிக் கொஞ்சம் மீனுக்குச் சாப்பாடு போட்டாள். டி.வி போட்டாள். பாட்டைச் சத்தமாக அலறவிட்டாள். எல்லாம் செய்தும் இன்னமும் நேரம் இருக்கவே என்ன செய்வதென்று பின்னால் பால்கனிக் கதவைத் திறந்து நீச்சலடிக்கும் குழந்தைகளை வேடிக்கை பார்த்தாள். கடல் வரைந்து அழகாய்க் கலர் அடித்தாள். அதற்குள் நிறைய மீன்கள் வரைந்து கலர் அடித்தாள்.

பின்பு மீன்குடுவைக்குப் பக்கத்தில் வந்தாள். மீன்கள் அப்போதும் கண்ணாடிச் சுவரில் முட்டி முட்டிப் பார்த்து ஏமாந்தன. ரொம்பப் பாவமாய் இருந்தது.

மீன் குடுவையை அப்படியே தூக்கிக் கொண்டு பால்கனிக்குப் போனாள். அங்கிருந்து குடுவையிலுள்ள மீன்களோடு தண்ணீரையும் நீச்சல்குளத்துக்குள் விழுமாறு வீசினாள்...

மீன்களின் மொழி மீனாவுக்குப் புரிந்திருந்தது.

மீனாக்களின் மொழி அம்மாக்களுக்குப் புரியுமா?

இது யூத்ஃபுல்விகடனில்.....

Tuesday, March 9, 2010

ஸ்பரிசம்

இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்கிக் கொண்டிருப்பது...- அருணா சுரேஷ்
இந்தக் கட்டுரையும் கவிதையும் மகளிர் தினம் ஸ்பெஷல் சக்தி-2010 இதழில்..........

குட்டிம்மாவின் பிறப்பில்
தேவதை இறக்கைகளுக்கான
தேடல் ஆரம்பம்...

ரோஜா நிறக் குட்டிக் கால்
கண்டதுமே சின்ட்ரெல்லாவின்
தொலைந்த காலணியைத் தேட
ஆரம்பித்தது மனது...

பயத்தில் குட்டிம்மாவின் கை
இறுக்கத்திலும் முதுகுப் பின்
மறைவிலும்
கடவுளானேன் சிலநேரம்...

எனதுடையணிந்து
என் முன் நிற்கும் போது
என் முற்றத்தில்
எனக்கான மழை

கண்ணாடிக் கைவளையோசையும்
சுவரில் நெற்றிப் பொட்டும்
மொட்டு சத்தமில்லாமல் மலர்வதைக்
கொஞ்சம் சத்தமாகவே சொல்லியது...

யாரையோ மணமகனாக்கி
உடன் ஏற்றி
ரயில் நகரும் போது
அவசரமாய்த் தொட்டுக்
கோர்த்துக் கொள்ளும் கைகளின்
ஸ்பரிசம்...

கைகளில் ஒட்டிக் கொண்டு வீடு
வந்து சேர்ந்து அழ வைத்தது...

வீடு முழுவதும் நீ செய்த
ப்ளாஸ்டிக் பூக்களும்
சுவர் கிறுக்கல்களும்
கொடியில் தொங்கும்
சூடிதார்களும்
கண்ணாடியில் ஸ்டிக்கர்
பொட்டுமாய்
கைநிறைய உன் பிரிவு
ஸ்பரிசமுமாய்...
கண் நிறைய ஒளித்து
வைத்த மழையுமாய்
அம்மா...