கண்ணாடிக் குடுவை ஒன்றை இருப்பிடமாக்கி ஐந்து மீன்கள் அதில் குடியிருந்தது. ரொம்பவும் அலையாமல் கிடைத்தது இந்தக் குடுவை. பெரிய மீன்தொட்டிக்குள் ஆழமாகவும் விசாலமாகவும் நீந்தி வந்த மீன்களுக்குத் திடீரென குறுகிய குடுவைக்குள் வீடு மாற்றியதில் நிறைய சிரமங்கள் இருந்தன. எங்கு எப்போ திரும்பினாலும் கண்ணாடிச் சுவரில் முட்டிக் கொண்டன.
அந்தப் பெரிய தொட்டியில் நிறைய நட்பு மீன்களை விட்டு வந்ததில் வேறு வருத்தமாயிருந்தது. உணவுக்கு மட்டும் பஞ்சமில்லை. அங்கும் இங்கும் அலைந்து சக மீன்களோடு சண்டை போடாமலேயே தேவைக்கு அதிகமாகவே காலையும் மாலையும் கிடைத்தது. குடுவை வசதியாக இருக்கிறதா? பிடித்திருக்கிறதா? என்றெல்லாம் மீன்களிடம் யாரும் கேட்கவில்லை. பளிச் பளிச் பல்புகளையும்,ப்ளாஸ்டிக் செடிகளையும் ஃபௌன்டன்களையும் நட்டு அழகாக்கியாயிற்று.
மீனாவுக்குப் புது வீடு பிடிக்கவேயில்லை. பெரிய பெரிய தூண் வைத்து திண்ணையுள்ள வீட்டிலிருந்து இப்படி மாடியில் க்ரில் போட்ட வீடு சிறையாய்த் தெரிந்தது. எங்கு திரும்பினாலும் முட்டும் சுவரும் கதவுகளும் வினோதமாகத் தெரிந்தன. பாட்டி தாத்தாவையும் அம்பி, சவி, முத்து, லல்லி எல்லோரையும் விட்டு வந்ததில் ரொம்ப வருத்தத்தில் இருந்தாள் மீனா. அம்மா சந்தோஷத்தில் விதம் விதமாகச் சமைத்துக் கொடுத்தாள். போட்டி போட்டுச் சாப்பிடத்தான் ஆளில்லை.
வீடு பிடித்திருக்கிறதா, காற்று வருகிறதா, வசதியாக இருக்கிறதா என்றேல்லாம் யாரும் மீனாவிடம் கேட்கவில்லை. மீனாவின் அறை அழகழகான பொம்மைகளாலும் பூக்களாலும் அலங்கரித்தாயிற்று.
"மீனு... மீனாக்குட்டி அம்மா ஆஃபீஸ் போயிட்டு வரேன். கிரில்லுக்குப் பூட்டுப் போட்டாச்சு. சமத்தா இருக்கணும். சரியா? சாப்பாடு டேபிளில் வச்சுருக்கேன். எது வேணும்னாலும் ஃப்ரிட்ஜ்லேருந்து எடுத்துச் சாப்பிடு. அம்மா சீக்கிரம் வந்துருவேன். யாருக்கும் கதவு திறக்காதே... சரியா?"
பதிலை எதிர்பார்க்காமல் அம்மா போய் விட்டாள்.
மீனா மீன்குடுவைக்குப் பக்கத்தில் வந்து மீன்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். மீன்கள் ஒரு இடத்தில் இல்லாமல் நீந்திக் கொண்டேயிருந்தன. குடுவையை விரலால் தட்டினால் பயத்தில் மிரண்டவை போல் வேகம் வேகமாக நீந்தின. திரும்பத் திரும்பக் கண்ணாடிச் சுவரில் முட்டி முட்டிப் பார்த்து ஏமாந்தன. பயம் மீன்களுடன் எப்போதுமிருப்பது போலத் தோன்றும். மீனா என்ன செய்யவென்று அங்குமிங்கும் சுற்றி கொஞ்சம் சாப்பிட்டாள். இடையிடையே மீன்களையும் எட்டிப் பார்த்துக் கொண்டாள்.
மீனுக்குப் பசிக்குமோ என்றெண்ணிக் கொஞ்சம் மீனுக்குச் சாப்பாடு போட்டாள். டி.வி போட்டாள். பாட்டைச் சத்தமாக அலறவிட்டாள். எல்லாம் செய்தும் இன்னமும் நேரம் இருக்கவே என்ன செய்வதென்று பின்னால் பால்கனிக் கதவைத் திறந்து நீச்சலடிக்கும் குழந்தைகளை வேடிக்கை பார்த்தாள். கடல் வரைந்து அழகாய்க் கலர் அடித்தாள். அதற்குள் நிறைய மீன்கள் வரைந்து கலர் அடித்தாள்.
பின்பு மீன்குடுவைக்குப் பக்கத்தில் வந்தாள். மீன்கள் அப்போதும் கண்ணாடிச் சுவரில் முட்டி முட்டிப் பார்த்து ஏமாந்தன. ரொம்பப் பாவமாய் இருந்தது.
மீன் குடுவையை அப்படியே தூக்கிக் கொண்டு பால்கனிக்குப் போனாள். அங்கிருந்து குடுவையிலுள்ள மீன்களோடு தண்ணீரையும் நீச்சல்குளத்துக்குள் விழுமாறு வீசினாள்...
மீன்களின் மொழி மீனாவுக்குப் புரிந்திருந்தது.
மீனாக்களின் மொழி அம்மாக்களுக்குப் புரியுமா?
இது யூத்ஃபுல்விகடனில்.....