நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, March 7, 2013

கொஞ்சம் என்னைப் போலவும்.....!


கண்ணாடியில் ஒட்டும் பொட்டுக்களும்
கையில் பேனாக் கிறுக்கல்களுடன்
தொலை பேசி உரையாடல்களுமாய்
என்னைப் போல்....

வண்டியை ஓட்டும் சிரத்தையிலும்
பத்திரப்படுத்தும் காகிதப் பழக்கத்திலும்
அப்பாவைப் போல்...

அடுத்தடுத்து சேனல் மாற்றுவதிலும
நாள் முழுவதும் தலை பின்னுவதிலும்
விடாது பாட்டுக் கேட்கும் குணத்திலும்
அக்காவைப் போல்....

நாட்கள் மரங்கள் உதிர்ந்த இலை
போல உதிர்ந்து கொண்டேயிருக்கின்றன...
குட்டிம்மாவைப் பெரியளாக்கிக் கொண்டே...
பொக்கிஷமாய் வைத்து
விளையாடிய செப்புச் சாமான்களும்
பார்பி பொம்மைகளும்
பரணில் குடியேற்றப்பட்டன....

ஷின்சான் ,டோரெமோன்,
டாம் அண்ட் ஜெர்ரி
அனாதையாக்கப் பட்டார்கள்...

பிறந்த நாளை எதிர்பார்த்து
நாட்களை எண்ணும் வைஷு
எங்கேயோ ஓடி ஒளிந்து கொண்டாள்...

ஓயாமல் மணல் அள்ளிக் கொட்டும்
கடல் அலை போல ஓடி ஓடி
எதையேனும் இழுத்து வந்து
போட்டுக் கொண்டேயிருக்கிறது மனம்.

பொண்ணுங்க இப்படித்தான்
திடீர்னு நமக்குச் சொந்தமில்லாமல்
போய்விடுகிறார்கள் ......

எங்கே பறித்து வைத்தாலும்
மணம் வீசும் மலராகவும்
எங்கேனும் தன் வேரை ஊன்றிக் கொள்ளவும்.
மழை குடித்துக் கொள்ளவும்.
காற்றைச் சுவாசிக்கவும்....
வெயிலை உடுத்திக் கொள்ளவும்....
வைஷுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!!

Sunday, February 3, 2013

ஹையா !! விஸ்வரூபம் பார்த்துட்டேனே!!!!

அப்பாடா எவ்வ்ளோ சர்ச்சை......எவ்வ்ளோ பிரச்னை.....எவ்வ்ளோ விமர்சனங்கள்.....எவ்வ்ளோ ஆர்ப்பாட்டம்....எவ்வ்ளோ கோபங்கள்....எவ்வ்ளோ பேச்சுக்கள்...எவ்வ்ளோ அறிக்கைகள்...எவ்வ்ளோ பேட்டிகள்....எப்படியும் பார்த்தே விடவேண்டும் என்ற எண்ணம் வந்ததென்னவோ நிஜம்.
                   ஒருவழியா ஜெய்ப்பூரில் ரிலீஸ்......முழுசா பார்க்க முடியுமான்னு ஒரு சந்தேகத்துடனேதான் கிளம்பினோம். எப்பவும் இருக்கும் கூட்டத்தை விட கூட்டம் கொஞ்சம் அதிகம் தான் தியேட்டரில்.
ஐஸா க்யா ஹை இஸ் ஃபில்ம் மே வோ பி தோ தேக்லே..( அப்படி என்னதான் இருக்கு இந்தப் படத்துலே அதையும் தான் பார்த்துரலாமே) அப்ப்டிங்கிற கமென்ட் நிறைய கேட்க முடிந்தது....
இது கண்டிப்பா பட விமர்சனம் கிடையாது.
என் கருத்து..
டெக்னிக்கலா       விஸ்வரூபம்        "விஸ்வரூம்"
கதை சொன்ன விதம் விஸ்வரூபம்   "விஸ்ரூபம்"
சர்ச்சைக்குரிதா பற்றி விஸ்வரூபம்  "வி@#$ஸ்@#$*@#$ரூபம்"

நிறைய அரபி வசனங்கள் சப் டைட்டில் இல்லாமல் அதனால் அர்த்தம் புரியாமல் கருத்து எப்பிடி சொல்வது?டோட்டல் கன்ஃபூயூஷன்!!
ன்னைப் பாதித்வித்தில் விஸ்ரூபம்  "விஸ்வரூபம்."
இவ்வ்ளோ ஆர்ப்பாட்டம் இல்லையென்றால் இந்தப் படம் "விஸ்வரூபம்"

ஹ்ம்ம்...ரொம்ப சாதாரணமாகக் கடந்து போயிருக்கவேண்டிய படம்!

Friday, November 23, 2012

மழையே நலமா?


ஜன்னல் கம்பிகள் குளித்து நாளாச்சு!
குருவி ஈரஇறகில் சிடுக்கெடுக்க மறந்தாயிற்று
உன்னைச் சுமந்த குடைகள் மூலையில் முடங்கிக் கிடக்கிறது...
கை விரித்துக் குளிக்கும் மரம் கடுப்பாகிக் கொண்டிருக்கிறது..

உன்னை ஏந்த நீட்டிய கரங்கள் காலியாக.....
உன்னுடன் குடிக்கும் தேனீர் நேரங்கள் ரத்து செய்யப்பட்டன...
நீ விழுந்து பரப்பும் மண்வாசனை மறந்தது மண்....
உன் சொட்டு பட்டுத் தெறிக்காத முற்றம்  

கன்னத்தில் ஒன்றும் கைவிரலில் ஒன்றுமாக
ஒற்றைத்துளியாவது கொட்டிப்போ மழையே...
நான் நலமே என்று ஒரு வரி சொல்லிப்போ மழையே....
அது போதும் எனக்குக் கொஞ்சம் கவிதையெழுத....



Sunday, October 14, 2012

கடவுளின் ஞாபகம் வருகிறது....

கையில் காசு இல்லாமல்
கடந்து செல்லும் பெரும் செலவு
மருத்துவர் அறையில் காத்திருக்கும் நொடி 
இயல்பாகக் கடவுளை ஞாபகப் படுத்துகிறது.....

கூடிப் பிரியும் நட்பு நிரந்தரமாக் விலகிப் 
போகும் நிராகரிப்பின் போதும்
தனிமை கழுத்தை நெறிக்கும் போதும்
எப்போதும் கடவுள் ஞாபகம் வருகிறது....

சுனாமி, பூகம்பம், நில அதிர்வு
தீவிரவாதம்,குண்டு வெடிப்பு, விபத்து
இவையெல்லாம் வெறுமே உச்சரிக்கும் போது கூட
கடவுள் ஞாபகம் வருகிறது....

தன்னைக் குறித்த அயர்ச்சியும்
வாழ்வைக் குறித்த அச்சமும்
கொஞ்சமாய் எட்டிப் பார்க்கும் போது
கடவுளின் ஞாபகம் வருகிறது....

இயல்பாக வாழும்
இனிமையான காலங்களிலும்
வெள்ளிக்கிழமைகளில் கூட
எண்ணெய்க் கிண்ணத்துடன் சுற்றும் போதும்
கோவிலின் சூடம் ஒத்தும் போதும் கூட
என்னை நினைப்பதில்லையென
வருந்திக் கொண்டிருந்தார் கடவுள்.....