நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, December 8, 2015

மழையே....நலமில்லை.....நாங்கள்...


கையில் தீப்பந்தம் எடுத்து
நேற்று தொலைந்த ஆறு தேடித் தேடி......
இனி எப்படி மழை வரும் என்பதில் கவலை கொண்டு
திரிந்த காலம் உண்டு......

துண்டு துண்டாகத் தனித் தனித் தீவாகத்
தேங்கிக் கிடந்த ஆற்றுத் தண்ணீருக்குள்
முகம் பார்த்து, வானம் பார்த்து மழைக்காகத்
தவம் கிடந்ததுண்டு......

கன்னம் விழும் ஒற்றைத் துளி மழைக்கு
துள்ளிக் கொண்டு ஆர்ப்பரித்து
கைவிரித்துக் கொண்டாடிக் கொண்டாடி
மழைச் சாரலில் நனைந்ததுண்டு.....

உன்னுடன் குடிக்கும் தேனீர் நேரங்களுக்காக
ஜன்னல் கம்பிகளில் கன்னம் பதித்து
நீ பரப்பும் மண் வாசனைக்காகக் 
காத்துக் கிடந்த காலமும் உண்டு.......

உனக்கான நேசம் கொஞ்சம் கொஞ்சமாக
ஒளிந்து கொண்டது.....
உனக்காக கை விரித்துக் கொண்டாடும் 
குதூகலம் காணாமல் போனது...
மழையும், மழை சார்ந்த நினவுகளும்
மழையும், மழை சார்ந்த கவிதைகளும்
காணாமல் போய் .......உயிரற்றுப் போனது மனம்......
போதும் மழையே ......நிறுத்திக் கொள்...

அடித்துக் கொண்டு போன வெள்ளத்தில் 
உன்மேலிருந்த பிரியமும் காதலும்
போட்டி போட்டுக் கொண்டு அடித்துச் சென்றது....
போதும்.....போதும்....கண்முன்னே நிறகாதே.....
நலமில்லை....நாங்கள்.....