நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, October 30, 2008

மிக ஜாலியான ஒரு தொடர்பதிவு...

இந்த தொடர்பதிவை எனக்கும் கூட மிகவும் பிடிச்சிருக்கு.. ஏனென்றால் மிகச் சுலபமான ஒரு தொடர்பதிவு....இந்த தொடர்பதிவுக்கு என்னை அழைத்தது சரவணகுமாரும் கார்த்திக்கும்..

என்னோட Desktop Screenshot -ஐ பதிவில் போட்டால் போதும்.. இதுதான் டார்கெட்....ரெண்டு பேரும் கூப்பிட்டு ஆறு நாள் இருக்கும்....கொஞ்சம் தீபாவளி கலாட்டாலே பிஸியாயிருந்தோமில்லே??? அதனாலே கொஞ்சம் லேட்....



இதுதான் என்னோட ஆறு நாளைக்கு முந்திய Desktop.. நான் அடிக்கடி மாற்றாவிட்டாலும் என் குட்டீஸ்கள் அடிக்கடி மாற்றிவிடுவார்கள்......அதற்கப்புறம் 10 அல்லது பதினைந்து தடவை மாற்றி இன்னிக்கு இதுதான் என் Desktop...ஜெய்ப்பூர் பிர்லா மந்திர்...



இந்த தொடர்பதிவுக்கு நான் அழைக்கும் நண்பர்கள்.....
எந்தத் தொடர் பதிவுக்கு அழைத்தாலும் கண்டுக்காமல் இருக்கும்:
1.அந்தோணி முத்து.
2.வினையூக்கி
3.அனுஜன்யா
என்னப்பா பண்றது? எனக்கு இவங்களைத்தான் தெரியும்....இவங்களோ ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப
பிஸி.

இன்னும் தெரிஞ்ச ஸ்ரீ ஏற்கெனவே desktop மூஞ்சி பற்றி எழுதிட்டாங்க...சரவணகுமார்,கார்த்திக்,ரெண்டு பேரும் சேர்ந்துதான் என்னை மாட்டி விட்டுருக்காங்க...அப்புறம் நான் என்ன பண்றது?

Monday, October 20, 2008

வலைச்சரம் ஆசிரியர் ஆகிட்டோமில்லே!!!


உங்களுக்கெல்லாம் என் வலைப்பூவிலிருந்து ஒருவாரம் விடுமுறை.....
ஆனாலும் விடமாட்டேனே.....!!
இந்தவாரம் முழுவதும் இங்கே போய் நான் எழுதுவதைப் படிங்க...
ok va??
வலைச்சரம்ஆசிரியர் ஆகிட்டோமில்லே...!!

Tuesday, October 14, 2008

மீண்டும் பாலகுமாரனின் ரசிகையாகிட்டோமில்லே.......!!!!!


எனக்கு நல்லா நினைவு இருக்கு பாலகுமாரனின் மெர்க்குரிப் பூக்களும்,இரும்புக் குதிரையும் ஒரே இரவுக்குள் படித்து முடித்தது...பாலகுமாரனின் கதைகளை இப்படித்தான் அவசர அவசரமாக முழுமூச்சாய் ஒருமுறையும்,பின்னர் ஆற அமர நிதானமாக பலமுறையும் படிப்பது என் வழக்கம்.

அப்படித்தான் அவரின் "பச்சை வயல் மனதை"யும் படித்தேன்...அவசர அவசரமாய்...படித்து முடித்தவுடன் சுறு சுறுவென்று கதை நாயகன் மேலுள்ள கோபத்தை இப்படி பாலகுமாரனிடம் காண்பித்தேன்..மிக அவசரமான ஒரு விமரிசனக் கடிதம்.....

அன்புள்ள ஆசிரியர் பாலகுமாரனுக்கு,
பாலகுமாரனின் பழைய ரசிகை
பச்சை வயல் மனதினைப் படித்து விட்டு
விமரிசராகப் படிதாண்டி
வந்திருக்கிறேன்.....

இலவச இணைப்பு இதழைப் படித்து
இதயம் வலிக்கும் இளம் பெண்களின்
குமுறல்களின் சார்பில் வலியைக்
குறைத்துக் கொள்ள எண்ணி எழுதுகிறேன்...

தவறுகளுக்குச் சூழ்நிலை காரணம் எனத்
தானே ஒத்துக் கொண்ட பத்மநாதன்
சூழ்நிலை காரண்மாகப் பொய் சொல்லி
சுத்தமாக் இருக்கும் கல்பனாவை
ஒதுக்கிவிட்ட முடிவில் இருந்து
ஒன்று மட்டும் புரிகிறது....

எழுத்தாளர் தானும் ஓர் ஆண்வர்க்கம்
எனவே அவர்களின் பக்கமிருந்துதான்
எதையும் தீர்மானிப்பதென்னும் அவரின்
எண்ணம் என்னுள்ளே எரிய வைக்கிறது...

பசுமையான என் மனதினைப்
பச்சை வயல் மனது அதிகமாகவே
பாதித்து விட்டது.....
பரிகாரமாக வேறொரு கதையைத் தேடுகிறேன்...
அருணா

இப்படி எழுதி அனுப்பிவிட்டேன்...என்ன ஆச்சரியம்??!!
ஒரே வாரத்தில் பதில்...

அந்த 24 வருஷப் பழைய கடிதம் இன்னும் என் பொக்கிஷப் பெட்டியில் பத்திரமாய்....மூடிய புத்தக மயிலிறகாய்......




அவ்வ்ளோதான் என் கோபமெல்லாம் பறந்து போய்....மீண்டும் பாலகுமாரனின் ரசிகையாகிட்டோமில்லே.......!!!!!

Friday, October 3, 2008

அப்பப்போ அலாவுதீன் ஆவோமில்லே!!!!!!!!!



அப்போ எனக்கு ஒரு எட்டு அல்லது ஒன்பது வயது இருக்கும்.அப்போதான் நான் அலாவுதினும் அற்புத விளக்கும் கதை படிச்சேன்.

அப்போ அக்காகிட்டே போய் பாவம் போல, "அக்கா நமக்கும் இப்பிடி ஒரு விளக்கு இருந்தால் நல்லாருக்குமேக்கா"..... அப்பிடின்னு கேட்டேன்....அதுக்கு அக்கா, "யார் கண்டா?? நம்ம வீட்டிலே இருக்கிற விளக்கிலே கூட இப்படி ஒரு சக்தி இருந்தாலும் இருக்கும்....நம்மதான் விளக்கையெல்லாம் தடவிப் பார்க்கிறதேயில்லை"...... அப்படீன்னு சொன்னாங்க.

அன்னிக்குப் பிடிச்சது இந்தக் கிறுக்கு.....மெல்ல பூஜை அறையில் இருந்த விளக்கையெல்லாம் தடவித் தடவி...
"வா பூதமே வா..." அப்படீன்னு மானசீகமா வேண்டிக்குவேன்.

அப்போ நாங்க ரொம்பக் கஷ்டத்திலே இருந்தோம்....கொண்டு போகச் சாப்பாடு இல்லாததினாலே ஸ்கூலுக்கு லீவ் போட்டதெல்லாம் உண்டு....
எப்பிடியாவது கஷ்டத்துக்கு விடிவு காலம் வராதா? என்பதுதான் ஒரே எண்ணமாக இருந்தது...

ஸ்கூல் சினேகிதிகள் யார் வீட்டுக்குப் போனாலும் அவங்க பூஜையறைக்குப் போகாமல் இருந்ததில்லை.....எந்த உறவுக்காரங்க வீட்டுக்குப் போனாலும் அவங்க வீட்டு விளக்கைத் தடவிப் பார்க்காமல் வந்ததில்லை...

பரிசுப் பொருள் வாங்க எந்தக் கடைக்குப் போனாலும் விளக்குகளை ஒரு ரவுண்ட் அடித்து தடவிப் பார்த்து விட்டுத்தான் மறுவேலை....

இந்தப் பூதக் கதையை என் தோழிக்கும் சொல்லியிருக்கேன்...
அவ சொன்னா.. "எங்க அண்ணன் கல்யாணத்துக்கு ஒரு கலைநயம் உடைய விளக்கு ஒண்ணு வந்திருக்கு....பூதம் தேட வர்றியா"-ன்னு கூப்பிட்டா....
என்னவோ இன்டரஸ்ட் இல்லாத மாதிரிக் காட்டிக்கிட்டே போனேன்.....

அவள் சமையலறையில் இருக்கும் போது மெல்ல அந்த விளக்குப் பக்கத்துலே போய் தடவிப் பார்த்தேன்.....
திடீர்னு ஒரு பயங்கரமான குரல்..... "நான் உங்கள் அடிமை ஆகா!!!!" என்றது!

அவ்வ்ளோதான் ஓவென்று அலறி மயக்கமடைந்ததுதான் தெரியும்.....

அப்புறம்தான் தெரிந்தது இது என் தோழியும் அவள் அண்ணனும் சேர்ந்து நடத்திய நாடகம்னு.....

இதென்னங்க ? திருமணமாகிப் புகுந்த வீட்டுலே விளக்கேற்றும் போது கூட இந்தப் பூதத்தைத் துணைக்குக் கூப்பிட்டுருக்கேன்னா பார்த்துக்கோங்க…இன்னும் கூட விளக்கைப் பார்க்கும் போது அவ்வப்போது அலாவுதீனா ஆவறது உண்டுங்கோ!!!!