நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, July 12, 2010

தொலைதலும் கிடைத்தலும்....

எப்போதிருந்து தொலைந்து போக ஆரம்பித்தேன் என நினைத்துப் பார்த்தால் அது முதல் முதலா மூன்றாம் வகுப்பு படிக்கும் போது சென்னைக்கு ஏதோ ஒரு விசேஷமா அல்லது சுற்றிப் பார்க்கவோ போயிருந்த போது எல்லோரும் இறங்கியபின் தூங்கிக் கொண்டிருந்த நான் டாக்ஸியோடு போய்த் தொலைந்திருக்க வேண்டியது. ....ம்ம்ம் தப்பிச்சுட்டேன்.

தொலைதலும் கிடைத்தலும் தொடர் விளையாட்டுப் போல...ஒன்றையொன்று துரத்திக் கொண்டேயிருக்கும்.சீப்பைத் தேடினால் எப்போவோ தேடிய பேனா கிடைக்கும்.பேனாவைத் தேடினால் தொலைந்த மோதிரம் கிடைக்கும்.தேடியதே கிடைத்து விட்டால் கொண்டாட்டம்தான்.தொலையாமல் பத்திரப் படுத்தும் வித்தை தெரியும்தான்...ம்ம் எடுத்த இடத்திலேயே வைக்கவேண்டும்தான்...ஆனால் எப்போதும் முடிவதில்லையே......


அப்புறமாய் உறவினர் கூடும் கூட்டங்களிலிருந்து தொலைந்து போயிருக்கிறேன் "இன்னும் பார்க்க ஆரம்பிக்கலியா" என்னும் அநியாயமான கேள்விகளுக்குப் பயந்து போய்..... உங்க சம்பளம் எவ்வளவு எனக் கேட்கும் கூட்டத்திலிருந்தும் அடிக்கடி..சமரசம் செய்ய முடியாத மனிதர்களிடமிருந்தும்,வலிகளைப் பிரதியெடுக்க விருப்பமில்லாத
நிகழ்விலிருந்தும் பயணிக்கும் போது தொலையும் மைல்கல்லைப் போல ஓடி ஓடித் தொலைந்து கொண்டேதானிருக்கிறேன்.

மொட்டை மாடியில் இருட்டுக்குள் தொலைந்து போவதில் இருக்கும் சவுகரியம் ரொம்பவும் பிடித்தது.தொலைபேசியைக் கீழேயே வைத்து விட்டுத் தொலைந்து விடலாம்.மடிக் கணினியையும் மறந்து வைத்து விட்டுத் தொலைந்து விடலாம்.அழும் போது மழைக்குள் தொலைதலும் இருட்டுக்குள் தொலைதலும் ரொம்ப சவுகரியம்.

எழுதுவதிலிருந்தும் கூட அவ்வப்போது தொலைந்து கொண்டுதானிருக்கிறேன்.தொலைவதனால் ஏற்படும் இழப்பின் அடர்த்தியை உணர்ந்தேயிருக்கிறேன்.இந்த அவசர உலகத்தில் ஓடும் ஓட்டத்தினை நிறுத்தி மூச்சு வாங்கக் கூட நேரமில்லாமல் இருக்கும் போது அவ்வப்போது இந்த தொலைந்து போதல் தேவையாய்த்தானிருக்கிறது.இணையம் வா என்னில் தொலைந்து போ என்னும் போதும் தொலைபேசி இசையால் தொலைந்து போ என அழைக்கும் போதும் ஓடிப் போய் ஒளிந்து கொள்ளத் தொலைதல் தேவையாயிருக்கிறது.

ஒவ்வொரு தடவையும் தொலைந்த என்னை மீட்டெடுப்பது இசையும் இதே மூச்சு விடமுடியாதவேலையும்தான்....தொலைந்து போகிறேன் விரும்பியேதான்....... ஒவ்வொரு தடவையும் மீண்டும் கிடைத்து விடுவேன் என்னும் உத்தரவாதம் இருக்கும் வரை அடிக்கடி தொலைந்து போகலாம்.....

22 comments:

+Ve Anthony Muthu said...

//சமரசம் செய்ய முடியாத மனிதர்களிடமிருந்தும்,வலிகளைப் பிரதியெடுக்க விருப்பமில்லாத நிகழ்விலிருந்தும்//

மெத்த சரி.

நானும் பழகி வருகிறேன்.

சனியன் தொலையட்டும்னு விட வேண்டியதுதான்.

வேறென்ன?

ஹ்ம்ம்ம்...

மாதவராஜ் said...

இப்படி தொலையாமல் இருந்தால் கிடைக்காமலும் போய்விடுவோம். தொலைவதில் எவ்வளவு சுகம்! ரொம்ப ரசித்தேன் மேடம்!

sury siva said...

ஒரு 25 வருடங்களுக்குமுன் நடந்தது.
எங்கள் விசாகப்பட்டினம் அலுவலகத்திற்கு ஆடிட் செய்வதற்காகச் சென்றிருந்தேன்.
மண்டல உயர் அதிகாரியை பார்த்துவிட்டுத் தான் வேலை துவங்கவேண்டும். அவரது பி. ஏ. என் வருகையும்
கவனிக்காது, ஏதோ தேடிக்கொண்டிருந்தார். ஒரு 15 நிமிடம் கழித்துத் தான் என்னை கவனித்தார். வெரி ஸார் ஸார்,
நீங்க வந்ததையே கவனிக்க வில்லை என்று சொன்னார். அது கிடக்கட்டும், என்ன தொலைந்து போயிற்று, எதைத்
தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டேன்.

" சார் ! என்னுடைய பாஸ் தொலைந்து போன முக்கியமான ஃபைல்ஸ் லிஸ்ட் ஒன்றை நேற்று என்னிடம்
தந்து, நான் இன்று வருவதற்குள் அவற்றை எல்லாம் தேடி வைத்திருங்கள்.' என்று சொல்லிவிட்டுச் சென்றார்.என்னுடைய துரதிருஷ்டம் !! அந்த லிஸ்ட் எங்கேயோ தொலைந்து விட்டது. அவர் வருவதற்குள் அதைக் கண்டு பிடிக்காவிட்டால், என்னைத்
தொலைத்துவிடுவார்' என்றார்.

சுப்பு ரத்தினம்.

பின் குறிப்பு: என்னுடைய ஸ்பெக்ஸ் எங்கே என்று கண்டே பிடிக்கமுடியவில்லை. கடந்த முறை உங்கள் பதிவுக்கு
வந்தபோது வைத்துவிட்டு வந்துவிட்டேனோ என்று சந்தேகம் வருகிறது. கொஞ்சம் தேடிப்பார்க்க முடியுமா ?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அழகு ..

நாம தொலைஞ்சு போய் தொலைஞ்சு போய் வெள்ளாடுவோமா.. :)

அம்பிகா said...

\\மொட்டை மாடியில் இருட்டுக்குள் தொலைந்து போவதில் இருக்கும் சவுகரியம் ரொம்பவும் பிடித்தது\\.
\\அழும் போது மழைக்குள் தொலைதலும் இருட்டுக்குள் தொலைதலும் ரொம்ப சவுகரியம்.\\
அருமையான பகிர்வு.

காமராஜ் said...

அருணா....

கொஞ்ச நாள் எழுதாம இருந்தா
இப்டியெல்லாம் அடர்த்தியான எழுத்தாதான் வரும்போல.
இனிக்கிற தொலைதல்,வேனும்னே தொலைதல்,
இயல்பாகத் தொலைதலென ஒரு பட்டியலோடு
களத்தை அதகளப்படுத்துகிறீர்கள் அருணா.

அன்பும் வணக்கமும்.

ஈரோடு கதிர் said...

இசை, வேலை போல் ஏதேஒன்று திரும்பத் திரும்ப நம்மை கண்டுபிடித்துக்கொண்டேதான் இருக்கின்றன

Karthik said...

இதை கவிதையா எழுதியிருக்கலாமோ? ரொம்ப நல்லாருக்கு. நானும் சில சமயம் தொலைஞ்சு போக நினைச்சிருக்கேன். முடியல. :)

Good one ma'am..

கோபிநாத் said...

அருமையான பதிவு ;-))

\\அப்புறமாய் உறவினர் கூடும் கூட்டங்களிலிருந்து தொலைந்து போயிருக்கிறேன் "இன்னும் பார்க்க ஆரம்பிக்கலியா" என்னும் அநியாயமான கேள்விகளுக்குப் பயந்து போய்..... உங்க சம்பளம் எவ்வளவு எனக் கேட்கும் கூட்டத்திலிருந்தும் அடிக்கடி..சமரசம் செய்ய முடியாத மனிதர்களிடமிருந்தும்,வலிகளைப் பிரதியெடுக்க விருப்பமில்லாத நிகழ்விலிருந்தும் பயணிக்கும் போது தொலையும் மைல்கல்லைப் போல ஓடி ஓடித் தொலைந்து கொண்டேதானிருக்கிறேன். \\\

;-)))))ரைட்டு ;))

ஹேமா said...

இவ்வளவும் நானும் அனுபவிக்கிறேன் அருணா.
சில சமயங்களில் கஸ்டப்பட்டே எம்மைத் தேடி வெளிக்கொண்டுவர முடிகிறது.

அன்புடன் அருணா said...

நன்றி +Ve Anthony Muthu
மாதவராஜ் said...
/இப்படி தொலையாமல் இருந்தால் கிடைக்காமலும் போய்விடுவோம். தொலைவதில் எவ்வளவு சுகம்! /
உண்மைதான் சார்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

sury said...
/பின் குறிப்பு: என்னுடைய ஸ்பெக்ஸ் எங்கே என்று கண்டே பிடிக்கமுடியவில்லை. கடந்த முறை உங்கள் பதிவுக்கு
வந்தபோது வைத்துவிட்டு வந்துவிட்டேனோ என்று சந்தேகம் வருகிறது. கொஞ்சம் தேடிப்பார்க்க முடியுமா ? /
இதென்ன பெரிய விஷ்யம் தேடிப் பார்த்தால் போச்சு!

அன்புடன் அருணா said...

முத்துலெட்சுமி/muthuletchumi said..
/ நாம தொலைஞ்சு போய் தொலைஞ்சு போய் வெள்ளாடுவோமா.. :)/
வெள்ளாடலாமே!!!!
நன்றி அம்பிகா !

அன்புடன் அருணா said...

காமராஜ் said...
/ கொஞ்ச நாள் எழுதாம இருந்தா
இப்டியெல்லாம் அடர்த்தியான எழுத்தாதான் வரும்போல./
ஓ..இனி கொஞ்ச நாள் கழித்து எழுதவேண்டியதுதான்!
நன்றி ஈரோடு கதிர் !

ராமலக்ஷ்மி said...

சொல்லிய விதம் அழகு அருணா.

அன்புடன் அருணா said...

Karthik said...
/இதை கவிதையா எழுதியிருக்கலாமோ? /
அட!எழுதிருக்கலாமே!
/ நானும் சில சமயம் தொலைஞ்சு போக நினைச்சிருக்கேன். முடியல. :)/
அட! தொலைஞ்சு போறது ரொம்ப ஈசிப்பா!!!

Mahi_Granny said...

எல்லோருக்கும் பூங்கொத்து கொடுப்பவர்க்கு பெரியதாய் ஒரு பூங்கொத்து இந்த சகோதரியிடமிருந்து. வாழ்த்துக்கள்

அன்புடன் அருணா said...

நன்றி கோபிநாத் !
நன்றி ஹேமா !

priya.r said...

நல்ல பதிவு
அடடா ! பாராட்டு வதற்கு உரிய வார்த்தைகள் தொலைந்து விட்டதே !
ஆங் ! கிடைத்து விட்டது !!
அழகான கருத்தும் அனுபவ உரையும் கைகோர்த்து எவ்வளோ
அருமையாக எழுதுகிறார் இவர் என்று பாராட்ட தோன்றுகிறது .வாழ்த்துக்கள் !

VELU.G said...

//ஒவ்வொரு தடவையும் தொலைந்த என்னை மீட்டெடுப்பது இசையும் இதே மூச்சு விடமுடியாதவேலையும்தான்....தொலைந்து போகிறேன் விரும்பியேதான்
//
அப்புறம் இந்த பதிவுலகத்திலும் உங்களை மீட்டெடுத்து விடுகிறீர்களே....

அருமை

அன்புடன் அருணா said...

நன்றி ராமலக்ஷ்மி !
Mahi_Granny said...
/எல்லோருக்கும் பூங்கொத்து கொடுப்பவர்க்கு பெரியதாய் ஒரு பூங்கொத்து இந்த சகோதரியிடமிருந்து. வாழ்த்துக்கள் /
ரொம்ப நன்றிங்க!முதல் வருகைக்கும் கருத்துக்கும்!

அன்புடன் அருணா said...

நன்றி பிரியா!!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா