நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, March 30, 2010

ரயில் பயணங்கள் எனக்குப் பிடிப்பதில்லை...

எப்போதும் ரயில் பயணம் எனக்கு மிகவும் பிடித்தமானது.அதிலும் ஜன்னலோரமாய் ஓரிடமும் பாட்டுக் கேட்க ஒரு கருவியும் கையில் பிடித்தமான எழுத்தாளரின் புத்தகமும்..இருந்தால் நான் தனி உலகத்துள் நுழைந்து விடுவேன்.அம்மம்மா வீட்டின் எந்த ஜன்னலிலிருந்து பார்த்தாலும் தெரியும் தட தடத்து ஓடும் ரயிலின் நீள் உடல் அப்போது, எப்போதுதான் அதில் பயணம் வசப்ப்படும் என ஒரு எதிர்பார்ப்போடு.....யாராயிருந்தால் என்ன சந்தோஷமாகப் போய் வரட்டும் என்று வேகமாக ஆண் பெண் பேதமின்றிக் கையாட்டி வழியனுப்பும் வயது அது.

ஜன்னல் ஓரம் அமர்ந்து ஜன்னலை மூடத் தேவையில்லாத அளவு சாரல் அடித்தால் ம்ம்ம்...சொர்க்கமே ரயிலில்.அதுவும் ரொம்பத் தொண தொணக்காத சக பயணிகளுமாய் இருந்து விட்டால்....அன்றும் அப்படித்தான் ....என் அருகில் ஒரு வயதான தம்பதியர்.. மற்றும்.... அவள் தன் இரு குழந்தைகளுடன் எதிர் இருக்கையில் வந்து அமர்ந்தாள்.யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை.ஒரு ஓவியம் போல் அழகாக இருந்தாள் .இரு குழந்தைகளும் பெர்த்தில் ஏறி ஆட்டம் போட்டன.இவள் எதையும் கண்டு கொள்ளவில்லை.தொண தொணப்புப் பிடிக்காத எனக்கே ஏதாவது பேச மாட்டாளா என்றிருந்தது.அவள் ஜன்னலில் கன்னம் வைத்தவாறு வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் மரம், செடி, மலைகளின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தாள்.அவளும் என்னைப் போல ரயில் பயணத்தில் மௌனம் விரும்புபவள் போல.

இப்படி நான் நினைத்துக் கொண்டிருந்ததில் மண் விழுந்தது.கொஞ்ச நேரம் கழித்து வயதான தம்பதியரைப் பார்த்துப் புன்னகைத்தாள். அப்புறமாய்ப் பேச ஆரம்பித்தவள்..................பேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏசிக் கொண்டேயிருந்தாள்.பேசமாட்டாளா என நினைத்த எனக்கே இவள் வாய் மூட மாட்டாளா என்றிருந்தது.என்னவோ இன்றுதான் பேசக் கிடைத்தக் கடைசி நாள் போலப் பேசிக் கொண்டேயிருந்தாள்.

எனக்கென்னவோ அவள் சந்தோஷமாயிருப்பதைப் போலக் காட்டிக் கொண்டேயிருந்தாள் என்று தோன்றிற்று.இரவு வெகு நேரம் லைட்டை எரியவிட்டு அடுத்தவர் தூக்கம் பற்றிக் கவலையில்லாமல் கையில் ஒரு புத்தகத்துடன் இரவு வெளியில் ஏதும் தெரியாத கருப்பு இருளைச் சன்னல் வழியாகக் கோபமாக வெறித்துக் கொண்டிருந்தாள்.அந்த வயதானவர்களும் தூங்க முடியாமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தார்கள்

ரொம்பவும் தயங்கித் தயங்கி லைட்டை ஆஃப் பண்ணிடுங்களேன் எனப் பணிவாகத்தான் சொன்னேன். "இல்லை எனக்கு வேண்டும்" என்று கடுமையாகச் சொன்னாள்.எதுக்காக இவ்வளவு பணிவு???பதினோரு மணிக்கு மேலாகி விட்ட நிலையில் உரிமையாகவே லைட்டை ஆஃப் செய்யச் சொல்லலாமே என நினைத்துக் கொண்டு......"என்னங்க....இவ்வ்
ளோ நேரத்துக்கு லைட்டைப் போடணும்னு சொல்றீங்க....பாருங்க அவங்க எவ்வ்ளோ கஷ்டப் படறாங்க...லைட்டை ஆஃப் செய்யுங்க,...." அப்படீன்னு கொஞ்சம் கடுமையாகவே சொன்னேன்.
மறுபடியும் "இல்லை எனக்கு வேண்டும்" எனக் குரலை உயர்த்திச் சொல்லவும் எனக்கு ஒருமாதிரியாகப் போய் விட்டது. நான் இப்படி வீம்பு பிடிப்பவளிடம் என்ன சொல்வது என்று அமைதியாகத் திரும்பிப் படுத்துக் கொண்டேன்.இருந்தாலும் என் ஈகோ என்னும் பேய் தலை விரித்தாடியது.அதெப்படி அப்படி விட்டு விடுவது?...நானென்ன தவறாகக் கேட்டு விட்டேன்?.....என்று மனம் அடங்காமல் ஆடியது...கோபத்தில் நானே எதுவும் கேட்காமலும் சொல்லாமலும் லைட்டை ஆஃப் செய்து விட்டேன். இப்போதுதான் மனம் அடங்கியது.அவள் இன்னும் அசையாமல் ஜன்னலைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள்.

காலையில் சுமுகமாகக் கேட்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டே எழுந்தேன்.எல்லோரும் இறங்குவதற்கான ஏற்பாடுகளில் இருந்தார்கள். குழந்தைகள் சீக்கிரம் தூக்கம் கலைந்த எரிச்சலில் நச்சரித்துக் கொண்டிருந்தார்கள்.அவள் எந்த ஒரு உணர்ச்சியுமில்லாமல் இருந்தாள்.

நான் வழக்கம் போல் ஜன்னலில் பாட்டு,ஓடும் மரம் என ஐக்கியமாகியிருந்தேன். நிமிட நேரத்தில் ஏதோ ஒடியது போன்ற சிறு சலசலப்புக்குப் பிறகு ஜன்னலின் வழியாக அவள் விழுந்து புரண்டு உருள்வதையும் மீறி ரயில் வெகு வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை......தவறி விழுந்தாளா?????????தானாகவே விழுந்தாளா??????????????எல்லோரும் அலறி.....சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி விசாரணை......அது இது எல்லாம் முடிந்து......ஆம் எல்லாம் முடிந்துதான் போயிருந்தது.குழந்தைகள் ஒன்றும் புரியாமல் அங்குமிங்கும் பார்த்து அழக் கூடத் தெரியாமல் இருந்தனர்.
இன்றுவரை என் ரயில் பயணங்களில் ஜன்னலோரத்தைப் பார்த்தால் நடுங்குகிறேன்.ஜன்னலில் ஓடும் மரம் மலைகளுடன் அவள் ஆரஞ்சு நிறப் புடவையுடன் மீண்டும் மீண்டும் உருள்வது போன்ற பிரம்மை என் கூடவே ஒட்டிக் கொண்டுவிட்டது.........முடிந்தவரை ரயில் பயணங்களைத் தவிர்க்கிறேன்.இரவில் அவளுக்கென்ன கவலையோ..........?ஏன் அப்படிக் கடுமையாக நடந்து கொண்டேன்...?என்று கேட்டுக் கொண்டேயிருக்கிறேன்.எது அவளை இப்படி ஒரு மரணத்துக்குத் தூண்டியது? என்னும் கேள்விக்கு குழந்தைகளிடம் நடத்திய விசாரணையின் போது கணவனின் கொடுமை எனப் பின்பு தெரிந்து கொண்டாலும் தேவையில்லாமல் மனதில் ............மனித மனங்களைப் புரிந்து கொண்டு நடந்து கொள்ளத் தெரியவில்லையே என்னும் குற்ற உணர்ச்சியிருந்து கொண்டேதானிருக்கிறது.........இப்போதெல்லாம் ரயில் பயணங்கள் எனக்குப் பிடிப்பதில்லை

31 comments:

Chitra said...

எது அவளை இப்படி ஒரு மரணத்துக்குத் தூண்டியது? என்னும் கேள்விக்கு குழந்தைகளிடம் நடத்திய விசாரணையின் போது கணவனின் கொடுமை எனப் பின்பு தெரிந்து கொண்டாலும் தேவையில்லாமல் மனதில் ............மனித மனங்களைப் புரிந்து கொண்டு நடந்து கொள்ளத் தெரியவில்லையே என்னும் குற்ற உணர்ச்சியிருந்து கொண்டேதானிருக்கிறது.........

........... மனதை உலுக்கும் அனுபவம். .... அப்பப்பா......!!!

Unknown said...

எனக்கு ஒரு உண்மை அனுபவம் இதே போல இருக்கிறது. அதில் இருந்து நான் சென்னை எலக்ட்ரிக் ரயிலில் ஃபுட்போர்டு அடிப்பதில்லை

சாம் தாத்தா said...

அவள் சாகப் போகிறாள் என முன்பே தெரிந்திருந்தால், அவளிடம் இன்னும் கொஞ்சம் நட்பாக பேசியிருந்திருக்கலாம்.

அவள் துன்பங்களை ஒருவேளை நம்மிடம் பகிர்ந்திருக்கலாம். நாம் பேசி அவள் தற்கொலை முடிவை மாற்றியிருந்திருக்கலாம்.

ஈகோவை விழுங்கிக் கொண்டு, லைட்டை ஆஃப் செய்யாமல் இருந்திருக்கலாம்... எனும் குற்ற உணர்வின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது இந்தப் பதிவு.

பல சமயம் இப்படித்தான் நிகழ்ந்து விடுகிறது.

Romeoboy said...

மிகவும் கனமான பதிவு.. கொடுமையில் இருந்து தப்பிபதற்கு உயிரை விடுவது என்பது கோழைத்தனம் .. பாவம் அந்த பிள்ளைகள் தான் :(

செ.சரவணக்குமார் said...

அதிர்ச்சியாகவும் பாரமாகவும் இருக்கிறது. இது புனைவா உண்மைச்சம்பவமா டீச்சர்?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம் மிக சோகமான புனைவு ..நன்றாக வந்திருக்கிறது அருணா.

பாச மலர் / Paasa Malar said...

நிஜமோ கற்பனையோ..நல்லா வந்திருக்கு அருணா...

சந்தனமுல்லை said...

:-((

pudugaithendral said...

முத்துலெட்சுமியை வழிமொழிகிறேன்

சிநேகிதன் அக்பர் said...

சோகமான விசயம். புனைவாகவே இருக்க விருப்பம்.

ஹுஸைனம்மா said...

இது உண்மையிலேயே புனைவுதானே? அப்படியே இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.

காமராஜ் said...

ஏதாவது சொன்னால் அளவுக்கதிகமாகப் பாராட்டுவதாகத் தெரியலாம்.
மனம் திறந்து பாராட்ட என்ன தடை. ஓடிக்கொண்டிருந்த ரயில் சடன் ப்றேக் போட்ட மாதிரி குலுக்கி விட்டது, முடிவு.ஆரஞ்சுப் புடவையை இன்னும் கொஞ்சம் அதிர்ச்சியோடுதான் பார்க்க நெரிடும்.

Porkodi (பொற்கொடி) said...

உங்க எழுத்து அருமையாத்தான் இருக்கு, எனக்கு தான் படிக்க புடிக்கல! :( (மனசுக்கு கஷ்டமா போச்சு!)

பத்மா said...

போங்க அருணா

அம்பிகா said...

மனம் கனத்து போய் லேபிலை பார்த்தேன். நல்லவேளை புனைவு தான்.
உணர்ச்சிகளை நல்லாவெளிப்படுத்தியிருக்கீங்க அருணா.

அன்புடன் அருணா said...

செ.சரவணக்குமார் said...
/அதிர்ச்சியாகவும் பாரமாகவும் இருக்கிறது. இது புனைவா உண்மைச்சம்பவமா டீச்சர்?/
ரயில் பயணம் எனக்கு எப்படிப் பிடிக்குமென்பது நிஜம்....இந்த மரணம் என் தோழிக்கு நிகழ்ந்தது...கூடப் பயணித்ததுவும் என் தோழியே...ஆறு வருடங்களுக்கு முன் நடந்தது....ரயிலில் நடந்தவையாகக் கூறியது புனைவு

priyamudan bala said...

tharkalai pattri padikum nerum sogamaga iruntha pothum . kodumaikalin theervu tharkalaiil illai. walwin nerukadiai santhika pagirthal avsiyam

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Please visit my blog today.
http://maunarakankal.blogspot.com/2010/03/blog-post_30.html

Priya said...

மனது பாரமாக இருக்கிறது;(

அன்புடன் அருணா said...

Chitra said...
/.. மனதை உலுக்கும் அனுபவம்.அப்பப்பா......!!!/
கொஞ்சம் நிஜம் கலந்த புனைவு இது சித்ரா!

முகிலன் said...
/ அதில் இருந்து நான் சென்னை எலக்ட்ரிக் ரயிலில் ஃபுட்போர்டு அடிப்பதில்லை/
அனுபவங்கள்தானே பாடம் முகிலன்!

அன்புடன் அருணா said...

சாம் தாத்தா said.../
ஈகோவை விழுங்கிக் கொண்டு, லைட்டை ஆஃப் செய்யாமல் இருந்திருக்கலாம்... எனும் குற்ற உணர்வின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது இந்தப் பதிவு./
என்ன சாம் தாத்தா???ர்ரொம்ப நாளைக்குப் பிறகு வருகை?????லைட்டை ஆஃப் செய்யாமல் இருந்திருந்தால் உயிரோடு இருந்திருப்பாள் என்பதில்லை....மனக் கவலையில் இருந்தவளின் மேலும் மனக்கஷ்டம் கொடுத்து விட்டோமோ என்பதான வருத்தம்தான்....

Romeo~~ said...
/பாவம் அந்த பிள்ளைகள் தான் :(/
எனக்கும் அதே தான்...குழந்தைகளைப் பற்றி நினையாத...என்ன ஒரு அம்மா.?

அன்புடன் அருணா said...

நன்றி முத்துலெட்சுமி/muthuletchumi
நன்றி பாச மலர்
நன்றி சந்தனமுல்லை
நன்றி புதுகைத் தென்றல்

அன்புடன் அருணா said...

அக்பர் said...
/ சோகமான விசயம். புனைவாகவே இருக்க விருப்பம்./
ஹுஸைனம்மா said...
/இது உண்மையிலேயே புனைவுதானே? அப்படியே இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்./
கொஞ்சம் உண்மையும் கலந்த புனைவு.

sultangulam@blogspot.com said...

'புனைவு' - ஆசுவாசம்.
பெண்களுக்கே உரிய இயற்கையான இரக்க குணத்தை முன்னிறுத்தி அந்த குழந்தைகளுக்காகவே அவள் வாழ்கிற மாதிரி சொல்லி இருக்கலாம்.

'புனைவு மாதிரி ஆனால் புனைவில்லை' - சே!. என்ன அம்மா இவள்?

அன்புடன் அருணா said...

காமராஜ் said...
/ஏதாவது சொன்னால் அளவுக்கதிகமாகப் பாராட்டுவதாகத் தெரியலாம்.
மனம் திறந்து பாராட்ட என்ன தடை. /
ஆஹா....நன்றி!

Porkodi (பொற்கொடி) said...
/:( (மனசுக்கு கஷ்டமா போச்சு!)/
ரொம்ப நாளா உறுத்திட்டிருந்ததை எழுதியதில் எனக்குக் கொஞ்சம் நிம்மதி.

இரசிகை said...

:(

அன்புடன் அருணா said...

அம்பிகா said...
/ மனம் கனத்து போய் லேபிலை பார்த்தேன். நல்லவேளை புனைவு தான்./
கொஞ்சம் நிஜம் கலந்த புனைவுதான் அம்பிகா.

அன்புடன் அருணா said...

நன்றி பிரியா...பத்மா!

சுந்தரா said...

அதிரவைத்த பதிவு...

அம்மாவை இழந்த கணத்தில் அந்தப் பிள்ளைகளின் மனநிலை எப்படியிருந்திருக்கும் என்று நினைக்கையில் நடுக்கம்தான் தோன்றியது.

அன்புடன் அருணா said...

சுல்தான் said...
/'புனைவு' - ஆசுவாசம்./
கொஞ்சம் நிஜமும்....
/பெண்களுக்கே உரிய இயற்கையான இரக்க குணத்தை முன்னிறுத்தி அந்த குழந்தைகளுக்காகவே அவள் வாழ்கிற மாதிரி சொல்லி இருக்கலாம்./

சொல்லியிருக்கலாம்தான்...எல்லாம் நாம் நினைக்கிற மாதிரியா ந்டக்கிறது?????

சுந்தர்ஜி said...

மனதை உலுக்கிய பதிவு.

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா