நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, December 14, 2011

சிக்கிக் கொண்டிருந்தாள் அம்மா ...

ரபுன்செல்லின் சிடுக்கில்லாத கூந்தலின்
இடுக்குகளிலும்

சின்ட்ரெல்லாவின் உடுப்புகளின்
மடிப்புகளிலும்

ஆலிஸ் இன் வொண்டர்லேண்டின்
குட்டி உலகத்தின்
குட்டிச் செப்புச் சாமான்களுக்குள்ளும்

குட்டித் தேவதை தம்போலினாவின்
இறகுகளுக்குள்ளும்

ஏழு குள்ளர்களின் சூப்
கிண்ணங்களுக்குள்ளுமாய்த்

தொலைந்து கொண்டிருந்த குட்டிம்மா
திடீரென வீட்டுப் பாடக் கணக்குகளில் மூழ்கிய போது

செய்ய ஒன்றுமில்லாமல்
தேவதைக் கதைகளுள்
கொஞ்சம் கொஞ்சமாய்ச்
சிக்கிக் கொண்டிருந்தாள் அம்மா ......



Monday, November 21, 2011

பிட்ஸா ஹட்டில் ஒரு இரவு!

                 எதையும் ரசிப்பதற்கும் அதைப் பாராட்டுவதற்கும் ஒரு தனிப்பட்ட மனநிலை தேவையாக இருக்கிறது. அது இல்லாத பட்சத்தில் அதை எதிர் கொள்பவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும் முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டு கண்டும் காணாமல் நகர முடிகிறது.
          
          இப்படித்தான் ஒரு முறை பிட்ஸா ஹட் போயிருந்த போது Hot 'n' Spicy Pepperoni, Fresh Tomato Margherita ,Tuscani Lasagne,Meatball Napolitana - என என்னென்னவொ வாயில் நுழையாத பெயரையெல்லாம் ஆர்டர் செய்து கொண்டிருந்தார்கள் பொண்ணுங்க.அவனும் விதவிதமான நிறங்களில் விதவிதமான குடுவைகளில் விதவிதமான வடிவங்களில் கொண்டு வந்து வைத்தான்.சிலவற்றை எப்படிச் சாப்பிடுவதென்றே தெரியவில்லை.சிலவற்றை தொட்டுச் சாப்பிடுவதா இல்லை குழைத்துச் சாப்பிடுவதா அல்லது ஸ்பூனால் அள்ளிச் சாப்பிடுவதா என்ற குழப்பம் கடைசி வரையில் இருந்தது.  எனக்கு இந்தக் குழப்பங்களெல்லாம் பிடிக்காததனால் எப்பவும் தோசை மாதிரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து விட்டு அமைதியாகி விடுவது வழக்கம்.

                  நாசுக்கான  ஆங்கிலத்துடன் நளினமான நடையுடன் பரிமாறுபவர்களாக இருந்தாலும் அழகாக மிடுக்கோடு நடந்தார்கள். எப்பவுமே அங்கே சாப்பிடப் போவதென்றால் 8 மணிக்குச் சாப்பாடு வேண்டுமென்றால் 6 மணிக்கெல்லாம் போய் உட்கார்ந்து விடவேண்டும்.ரெண்டு மணி நேரம் வாய் பார்த்துக் கொண்டிருந்தால் பசி போய் ஒரு விதமான யோகநிலைக்கு வந்திருப்போம் அப்போது பார்த்துச் சின்னச் சின்னக் கிண்ணியாகக் கொண்டு வந்து வைத்தால் அம்ருதம் போல் கொஞ்சமாகச் சாப்பிட்டு விட்டு (அவ்வளவுதான் இருக்கும்) வயிறு நிறைந்தது போல பாவ்லா செய்து கொண்டு கிளம்பி விடலாம். ஆனாலும் பில் என்னவோ ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு வந்திருக்கும்.
               
              கொண்டு வைத்த White Sauce தீர்ந்து போனதால் இன்னும் கொஞ்சம் கேட்டால் "You have to order sir"அப்படீன்னான்.ம்ம்ம் இனி ஆர்டர் பண்ணி இன்னும் ரெண்டு மணிநேரம் காத்துக் கிடந்து....போதுண்டாப்பான்னு விட்டாச்சு.ம்ம் நம்மூரிலே சாம்பார் வாளியைப் பக்கத்திலேயே வச்சு தோசையை ஊறவச்ச காலம் நினைவுக்கு வந்துச்சு.! ரொம்ப சளிப் பிடிச்சு இருந்ததாலே கொஞ்சம் வெந்நீர் கொண்டு வாப்பான்னா "Yes Sir" அப்படீன்னு சொன்னவன் கிளம்பற வரைக்கும் கொண்டே வரல்லை. சரி இதுதான் போகட்டும்னு பார்த்தால் நாங்க சாப்பிடாத ஏதோ ஒரு "Deluxe Carbonara" அப்படீங்கற ஏதோ ஒரு ஜந்துவையும் நாங்க சாப்பிட்டதா பில்லிலே சேர்த்திருந்தான். இதை எப்படிப்பா கேக்குறதுன்னு முழி முழின்னு முழிச்சு "கம்"முனு இருந்தாச்சு.
             " Did you enjoy the food Mam?" எனக் கேட்டதற்கும் முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டு கண்டும் காணாமல் நகர முடிந்தது   

           சாப்பிட்டு முடிக்கிறவரைக்கும் கோவில் மணி போல ஒரு மணி அடிக்கிற சத்தம் கேட்டுட்டேயிருந்துச்சு. சாப்பிட்டு முடிச்சுட்டு போறவங்க சாப்பாடும் செர்வீஸும் நல்லாருந்தா அதை அங்கே வெலை செய்றவங்களுக்குத் தெரிவிப்பதற்காகத்தான் அந்த மணி தொங்க விட்டிருக்கும். பொண்ணுங்க ரெண்டும் நான் ரெண்டு தடவை, நான் மூணு த்டவை அடிக்கப் போறோம்னு கத்துச்சுங்க. வ்யித்துப் பசி அடங்காத கோபத்திலேயும் இவனுக பண்ணுன செர்வீஸுக்கு மணி அடிக்கிறதுதான் கொறைச்சல்னு இழுத்துக்கிட்டு வந்தேன்.
             
          வர்ற வழியெல்லாம் புலம்பிகிட்டே வந்தேன்.உருப்படியா நல்ல ரெஸ்டாரென்டுக்குப் போயிருக்கலாம்னு. வீட்டுக்கு வந்து சாவியை எடுக்க......."அய்ய்யய்யோ பர்ஸ் மொபைல் எல்லாத்தையும் "பிட்ஸா ஹட்லே" விட்டுட்டு வந்துட்டேனே" என்ன செய்றதுன்னு ஒரே பதட்டம். ஏற்கெனவே மணி பதினொண்ணு.அய்யோ பூட்டியிருப்பானோ. இப்போ என்ன பண்றதுன்னு எல்லார் மேலேயும் ஒரே கத்தல்.
      
     இவங்கதான் முதல்லே பொறுமையாயிருங்க...அப்படீன்னுட்டு என் நம்பருக்கு டையல் செய்தார்.வந்த பதில் .

 "No worries Sir , we are waiting for you ...your things are safe"அதே வெயிட்டர்
அடிச்சு பிடிச்சு ஓடிப் போனா அதே வெயிட்டர் புன்னகையுடன்

           "Here are the things Mam, please check"
ஓடிப் போய் யாருமேயில்லாத அந்த நேரத்தில் அந்தப் பாராட்டு மணியை மீண்டும் மீண்டும் சந்தோஷத்துடன் எல்லோருமாய் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டேயிருதோம்

Tuesday, November 8, 2011

உயிர் மீது வைக்கப்பட்ட "செக்"


உயிர் மீது வைக்கப்பட்ட
"செக்" போலச்
சிரித்துக் கொண்டு உடல்
நுழைந்தது நோய்......

எனககே தெரியாமல்
என் உயிரைப் பிடித்து
இழுத்துக் கொண்டு
யாருக்கும் தெரியாமல்

ஏழு கடல் தாண்டி
ஏழுமலை தாண்டி
ஏழு வானம் தாண்டி
ஏழு நிறம் கொண்ட

கண்ணாடிப் பேழையில்
வைத்துப் பூட்டிச் சாவியைத்
தொலைக்கும் கனவை
அடிக்கடிக் கண்டது மனம்......

Wednesday, September 21, 2011

இன்று சும்மாயிருக்கலாமெனத் திட்டம்!

இன்றைக்குச் சும்மாயிருக்கலாம்
என்று ஒரு சிந்தனை
வானொலிக்கும், தொலைபேசிக்கும்
தொல்லைக் காட்சிக்கும்
சும்மாயிருக்கக் கட்டளை.....

யாருமில்லாத
வீட்டினுள் வெயில்
ஜன்னல் வழியாக நகர்ந்து கொண்டே
நேர நகர்தலை உணர்த்தியது....

கொஞ்ச நேரம்
அரிசி தூக்கி நகரும்
எறும்பையும்
சுவரில் பூச்சி பிடிக்கும்
பல்லியையும்
ஜன்னல் திட்டில் அரிசி கொத்தும்
குருவியையும்
பார்த்துக் கொண்டிருந்தாயிற்று...

பூட்டிய கதவும்
அறையின் சுவர்களும்
ஜன்னலின் இடுக்குகளும்
என் சுவாசத்தைக் கடத்தாமல்
எனக்கு மூச்சு முட்டியது

யாராவது யாரையாவது கைபேசியில்
எதெதெற்கோ புதுப் புது பாடலால்
அழைத்துக்கொண்டே யிருந்தார்கள்...

எப்போதும் கூடவேயிருக்கும்
எதுவோ ஒன்று உலகத்தைத்
துண்டித்து விடாமல் என்னுடன்
இணைத்துக் கொண்டேயிருக்கிறது....

எப்படி ஒன்றும் செய்யாமல்
சும்மாயிருக்கத் தொடங்குவதென
ஒன்றும் செய்யாமல் இருக்கும்
முயற்சியில் மீண்டும் மீண்டும்
தோற்றுக் கொண்டேயிருந்தேன்...

Thursday, September 1, 2011

தனிமை போன்ற அற்புதமும்,கொடுமையும்!

தனிமை போன்ற அற்புதம் உலகில் வேறு எதுவுமில்லை.அதே நேரம் அதைப் போன்ற கொடுமையும் வேறொன்றுமில்லை.கசகசவென்று கூட்டங்களிடையே வேலை நேரம் முழுவதையும் கழிப்பவர்களுக்கு எப்போதோ கிடைக்கும் தனிமை ஒரு வரம்.தனிமையிலேயே வாழ்நாள் முழுவதும் கழிக்கும் பக்கத்து வீட்டு ஸ்டீபன் தாத்தாவிற்குக் கூட்டம் ஒரு வரமாகவும் தனிமை ஒரு சாபமாகவும் தெரிவதில் வியப்பொன்றுமில்லை.
                          
                           ஸ்டீபன் தாத்தாவை சின்னவயதிலிருந்து பார்த்திருக்கிறேன்.ஒரு ஈசிச் சேரில் கைகளிரண்டையும் தலைக்கும் மேல் தூக்கிக் கொண்டு போற வர்றவங்களைப் பார்த்துக் கொண்டே ரொம்ப வருடங்களைக் கடத்திவிட்டார்.அந்தக் காலத்து M.A.
                      
                                                    எப்போதும் ஆங்கில நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டிருப்பார்.காலையில் பள்ளிக்குச் செல்ல குழந்தைகள் அந்தவழியாகக் கடக்கும் போது மரத்திலிருந்து உதிர்ந்த நெல்லிக்காய்களை உப்பில் ஊறப்போட்டுக் கிண்ணத்தில் வைத்து எல்லோருக்கும் கொடுப்பார்.இது அந்தக்க்காலத்தில் நடந்தது....அப்போலாம் வாங்க மறுக்கும் குழந்தைகளிடம் "தாத்தா பிரியமாத் தர்றாரில்லே வாங்கிக்கோ"என்று சொல்லும் அம்மாக்கள்தான் அதிகம். இப்போலாம் மாதிரி "யார் எது கொடுத்தாலும் வாங்கித் தின்னக் கூடாது"என்று சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் எதுவுமில்லை அப்போது.
                  
                                நான் அவரைக் கடக்கும் போதெல்லாம் தாத்தாவுக்கு ஏன் யாருமேயில்லை என நினைப்பதுண்டு.அப்புறம் பள்ளியிறுதி நாட்களின் போது வாழ்வியல் புரிந்த போதும் தாத்தா யாருடனாவது போய்ச் சேர்ந்து இருக்கலாமே என நினைப்பதுண்டு.
                         
                                     எப்பவாது சிலநேரம் ஸ்டீபன் தாத்தா பக்கத்தில் உட்கார்ந்து கதைபேசுவதைக் கேட்பதுண்டு.அப்பப்போ புதுசு புதுசாய் வந்த கார்களைப்பற்றிப் பேசுவார்.கம்ப்யூட்டர் கற்றுக் கொண்டார்.அந்தக்காலப் பொண்ணுங்களைப் பற்றியும் அவங்க ஆத்துக்குத் தண்ணீரெடுக்கப் போகும் அழகைப் பற்றியும் வர்ணிப்பார்.
               
                                  அப்புறம் மேல்படிப்பு, வேலை என்று ஊரெல்லாம் சுற்றும் போதும் அம்மாவிடம் ஸ்டீபன் தாத்தா பற்றி விசாரிப்பதுண்டு.அம்மாதான் சொல்வாள் பேச்சுத் துணைக்குக் கூட யாருமில்லாமல் தனியே அல்லாடிக் கொண்டிருப்பதாக.தாத்தாவை நம்ம வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்து விடுவோமாம்மா என்று சின்ன வயதில் அம்மாவிடம் கேட்டிருக்கிறேன். அதையே இப்போதும் நினைத்தேன்.இருந்தாலும் இந்த உலக நடைமுறைச் சிக்கல்களையும் நினைத்துக் கொண்டேன்.
                     
                                      அப்புறமாய் சிங்கப்பூரிலிருந்து ஒரு வார விடுப்பில் வந்த போது ஒருநாள் ஸ்டீபன் தாத்தாவைப் பார்க்கப் போன போது ரொம்ப மெலிந்து போயிருந்தார்.கையைப் பிடித்துக் கொண்டு சூடான வெது வெதுப்பான கைகளுக்குள் வைத்துக் கொண்டார்.ஒன்றுமே பேசாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.
      
                          "என் கூட சிங்கப்பூர் வந்துர்றீங்களா தாத்தா ?" என்றதற்கு
          "இப்போலாம் ஒத்தையிலே பயமாயிருக்குடா....யாராவது கூடவேயிருக்கணும்னு தோணுதுடா...யார்கூடவாது பேசிக் கொண்டேயிருக்கணும் போலிருக்குடா..நீ கூப்பிடறப்போ உடனே வரணும்னுதான் இருக்கு....ஹூம்...அதெல்லாம் முடியாதுடா."என்றார்.

அதுக்கப்புறம் ஒரே ஸ்டீபன் தாத்தா நினைப்புதான்.என்ன செய்யலாம்னு யோசிச்சுட்டு இருந்ததுலே திடீர்னு ஒரு பல்ப்!
                               
ம்ம்ம் இப்போலாம் ஸ்டீபன் தாத்தா ஒரே பிஸி.ஒரே சந்தோஷம்.... எப்பவும் யாருடனாவது அரட்டையில்தான்.

என்ன செஞ்சேனா??? ஜஸ்ட் ஒரு லாப்டாப் வாங்கிக் கொடுத்து ஒரு ஃபேஸ் புக் அக்கவுண்ட் ஓபன் செஞ்சு கொடுத்தேன் அவ்வ்ளோதான்.....தாத்தா லைஃப் ஸ்டைலே மாறிடுச்சுன்னா பார்த்துக்கோங்க!!!

Saturday, August 27, 2011

அந்த ஒருமணி நேர சொர்க்கம்!

மனம் மயக்கும் சாயங்காலமும், ரம்யமான நட்சத்திர இரவுக்காகவும் மனதைச் சிலிர்க்கவைக்கும் அதிகாலைக்காகவும் ஏங்கிக் கிடக்கும் .வேலை முடிந்த அலுப்பில் சாயங்காலம் படுக்கையிலும் அல்லது கணினி முன்னாலுமாய்க் கழிந்து விடும்.அதிகாலை அநேகமாக அடுப்படிக்குள் முழுகி விடும்.ம்ம்ம் நட்சத்திர இரவு சாப்பாட்டுக் கடையின் சலசலப்பிலுமாய் அடங்கிக் கொண்டிருக்கிறது.சே! என்னடா இது வாழ்க்கை என அலுத்துக் கொண்டே நாளும் பொழுதும் ஓடிக் கொண்டிருக்கிறது.
                  குட்டி ஒரு சின்ன புறாவின் இறகைப் புத்தக இடுக்கில் வைத்துத் திறந்து காட்டிப் பொத்திக் கொண்டாள். அடுத்த பக்கத்தில் மயிலிறகிற்கு அரிசி வைத்துக் கொண்டிருந்தாள். ரொம்ப நாளாய் ஒரு கேள்வியுண்டு....ஏன் மயிலிறகுக்கு மட்டும் அரிசி வைக்கிறாள் என்று? சின்னவள் கொஞ்சம் மினுமினுப்பாய் ஏதோ ஒன்றைக் காக்காப் பொன் என்றாள். இவையெல்லாம் என் வாழ்விலும் இடம் பெற்றிருந்தன. எப்போதிருந்து இவை என் புத்தக அடுக்கிலிருந்து விடை பெற்றன என்பது எனக்கே புரியாத புதிராக இருந்தது. தேடித் தேடிச் சேகரித்தத் தீப்பெட்டிப் படங்களைத் திடீரென ஒருநாள் எளிதாகத் தூக்கிக் கொடுத்துவிட முடிகிறது.
                            மழையில் நனைய அடம்பிடித்த வயதில் காய்ச்சல் வருமென்று தடுத்த அம்மாவும் அம்மம்மாவும் வில்லிகளாகத் தெரிந்தார்கள். நனையக் கிடைத்த சுதந்திரத்தின் போது ஈர உடையுடனா காலேஜ் போவது என்று நனையாமல் நிற்கப் பழகிய பக்குவம் என்னிடமே அதிசயம்தான்! அப்புறமாய் எந்த விசேஷ நினைவுகளுக்காய் அன்றி மழையில் நனைவது சுகம் என்பதே மறந்து போனது வேலையின் ஓட்டத்தில்.

              இப்போவெல்லாம் டப்...டப்பென்று பெரிதாக மழைத் துளி விழுந்தால், கம கமவென மண் வாசனையை ....ரசிக்கக் கூட முடியாமல் துணிமணிகள் நனைந்து விடுமேவென ஓடி ஓடி எடுத்து வரத்தான் ஓட வேண்டியதிருக்கிறது.அப்படியிருக்கும் போதுதான் இந்த ஒருமணி நேர சொர்க்கம் திட்டம் அமுலுக்கு வந்தது. இரவு ஏழிலிருந்து எட்டு மணி வரைக்கும் கரன்ட் கட்!

                    அந்த ஒரு மணிநேர சொர்க்கம் கலகலன்னு போக ஆரம்பிச்சிருக்கு.உங்க ஸ்கூலில் என்ன் நடந்தது...உங்க காலேஜில் என்ன்ன நடந்தது? அப்படி ஆரம்பிச்சு.....மொட்டை மாடி அரட்டை.....நிலாச் சோறு, பாட்டுக்குப் பாட்டு, அரசியல் அரங்கம், அன்னா ஹசாரே ஜெ.அம்மா, கனிமொழி, ராஜா எல்லோரும் பேச்சில் கலந்து கொள்கிறார்கள்.சில நேரம் ஒரு மணி நேரம் ரெண்டுமணி நேரமாக நீளும் போதும் அலுப்பில்லாமல் கலகலப்பில் வீடு அதிர்ந்து கொண்டிருந்தது. இப்போலாம் அந்த ஒரு மணி நேர சொர்க்கத்தில் என்ன பண்ணலாம்னு ப்ளான் செய்யற அளவுக்கு   எந்தவித வேலை நிர்ப்பந்தமும் டி.வி நிகழ்ச்சிகளின் ஆக்கிரமிப்புமின்றி இயல்பான குடும்பத்தினுள்தான் நேரம் எவ்வளவு அருமையாய்க் கரைகிறது....முதல் முறையாய் இரவு நேர நட்சத்திரங்கள் என்னைக் கவராமல் வீணாய்ப் போய்க் கொண்டிருக்கிறது.
                    
                       தீப்பெட்டிக்குள் இப்போதும் கூட்டுப் புழுவைப் பத்திரப்படுத்தினால் அது பட்டுப்பூச்சியாகத்தான் வெளிவருகிற்து. அந்த வித்தையைத்தான் நாம் மறந்து ரொம்ப நாட்கள் ஆகின்றது.இனி வரும் நாட்களில் கரன்ட் கட் இல்லைன்னாலும் கூட மெயின் ஸ்விட்சை ஒருமணி நேரம் ஆஃப் செய்து விடலாம்னு ஒரு ப்ளான் இருக்கு!     

Thursday, August 18, 2011

கூடிப்பேசும் கல்முற்றம் !

யாருமற்ற
வீட்டுக் கல்முற்றத்தில்
சுவரிடுக்கில் முளை விட்ட
செடி நுனியும்
குருவி கொத்தக் கொட்டிய
அரிசியும்
காய் நகர்த்திக் கலைந்த
தாயக்கட்டமும்
மௌனமாகப் பிரியங்களின்
அதிர்வை நினைவுறுத்துகின்றன

உலகம் வளர, வளர
வீடு விரிய,விரிய
கூடிப்பேசும் கல்முற்றம் 
வெயில் மழையுடன் 
தனிமைப் பட்டுக்கிடந்தது  ....

கொஞ்சம் எறும்புகளின் வரிசையும்
எலிகளின் கொண்டாட்டமும்
முடிவற்ற மௌனமும்
நினைவுபடுத்திப் பார்ப்பதற்குரிய
பிரியங்கள் என்றேனும் மீளும்
என்ற நம்பிக்கையுடன்.....
கல்முற்றத்தில்
அம்மம்மாக்களும் தாத்தாக்களும்....

Thursday, July 28, 2011

எழுத ஆசைப்படுறவங்கல்லாம் எழுதுங்கப்பா!!

1.நீங்கள் விரும்பும் 3 விஷயங்கள்.
நிறைய இருக்குப்பா!
இரவு நேர மொட்டைமாடியில் பாட்டு,
சாரலடிக்கும் மழை,
நீண்ட பயணம் !

 
2. விரும்பாத 3 விஷயங்கள்:
முடியவே முடியாத சீரியல்கள், காலை நேரத்து அலார்ம், மீட்டிங் நடுவில் வித விதமான பாடலுடன் ஒலிக்கும் மொபைல் ஃபோன்...

3. பயப்படும் 3 விஷயங்கள்:
பல்லி,உயரம்,ஹாஸ்பிடல்

4. உங்களுக்குப் புரியாத 3 விஷயங்கள்:
அரசியல், பின் நவீனத்துவம், சில நேரம் சில விஷயங்கள் நடக்கும் போது இது அப்படியே ஏற்கெனவே நடந்தது போல் தோன்றுவது!!

5.உங்கள் மேஜையில் இருக்கும் 3 பொருட்கள்:
தொலைபேசி,பேனா,கணினி!

6. உங்களைச் சிரிக்க வைக்கும் 3 விஷயங்கள்:
கிச்சுகிச்சு!அரசியல்வாதிகளின் பேச்சு,பசங்க அடிக்கிற லூட்டி!

7. தாங்கள் இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள்:
செய்தப்புறம் சொல்றேனே! அதனாலே இந்தக் கேள்விக்குப் பாஸ்!!

8.வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் 3 காரியங்கள்:
ஆசிரியர்களை ஊக்குவிக்க ஏதாவது எழுதணும்.
இரண்டு அனாதைக் குழந்தைகளையாவது தத்து எடுத்துப் படிக்க வைக்க வேண்டும்.
ஒரு கப்பல் பயணம்.


9. உங்களால் செய்து முடிக்க கூடிய 3 விஷயங்கள்:
அட! அதென்ன மூணு! நிறைய இருக்கு!

10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்:
பொறுமை,தியானம்,யோகா!!

11. பிடித்த 3 உணவு விஷயங்கள்:
நான் சமைக்காத எதுவும்!
யாராவது சமைச்ச எல்லாமும்!
அம்மா சமைக்கும் எல்லாமும்!


12. கேட்க விரும்பாத 3 விஷயங்கள்:
No,முடியாது,நாளைக்கு!

13. அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள்:
அய்யோ இது அப்பப்போ மாறிட்டேயிருக்குமே! மூட் ஸ்விங் மாதிரி!!

14. பிடித்த 3 படங்கள்:
மூணே மூணு படப் பேரெல்லாம் எப்பிடிச் சொல்றது? நிறைய பிடிக்குமே!

15. இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற 3 விஷயம்:
ஹிஹிஹி! காற்று,நீர்,உணவு ஹிஹிஹி!

16. இதை எழுத அழைக்கப்போகும் நபர் 3 பேரு:
யாரைக் கூப்பிட்டாலும் எழுதப் போறதில்லை! எதுக்கு வம்பு? எழுத ஆசைப்படுறவங்கல்லாம் எழுதுங்கப்பா!!

Wednesday, July 6, 2011

இந்தத் தலைமுறையினை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை :(

            அவள் பெயர் சாரிகா. பத்தாவது வகுப்பு. மைதா மாவு வெள்ளையில் எல்லாப் பெண்களும் இருக்கையில் கொஞ்சம் கறுப்பாக சுமாரான அழகாய் இருப்பாள். அவள் வகுப்பில் நான் எந்தப் பாடமும் நடத்தவில்லை.அப்பப்போ வாழ்வியல் கல்விக்காக (life skill) ஏதாவது ஒரு ஆசிரியை வராத போது செல்லும்போது வகுப்பில் அவளைப் பார்த்ததுண்டு.
                               ரொம்ப துடிப்பாக ஆர்வமாகப் பதில் சொல்வதிலும் கலந்து பேசுவதிலும் சிறப்பானவள்.செல்ஃப் இன்ட்ரோ கொடுக்கச் சொல்லும் போது ரொம்பத் தெளிவாக அவளது பலவீனம் ஸ்போக்கன் இங்கிலிஷ் எனவும் பலம் தவறு என்று தெரிவதை யாரானாலும் சுட்டிக்காட்டுவது எனவும் சொன்ன போது வித்தியசமாகவும் தெளிவான சிந்தனையுள்ளவளாவும் தெரிந்தாள்.வகுப்பு நேரம் முழுவதும் கலகலவென எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருப்பாள்
                            கொஞ்ச நாட்களாக ஒரு மௌனத்துக்குள் போய் விட்டாள். இந்த வயதில் அடிக்கடி இப்படி மூட் ஸ்விங்க் வருவது சகஜம் என நினைத்து வகுப்பினூடே கவனிக்காதது போல் விட்டு விட்டேன். இடையிடையில் வகுப்பின் முடிவில் உங்களுக்கு எல்லோர் முன்னிலையில் தெரிவிக்க முடியாத பிரச்சினைகள் இருப்பின் எழுதிக் கொடுக்கலாம் என்று சொல்வதுண்டு. அநேகமாக படிக்க முடியவில்லை, கான்சென்ட்ரேஷன் குறைகிறது போன்ற பிரச்சினைகள்தான் வருவதுண்டு.
                              அன்று அவள் கொடுத்த தாளில் இருந்த பிரச்சினை என்னைத் திகைக்க வைத்தது. " என்னை நீரஜ் கொன்று விடுவானோ என்று பயமாக இருக்கிறது. என்னைக் காப்பாற்றுங்கள்" என்றிருந்தது. ஒரு கணம் உடல் அதிர்ச்சியில் அதிர்ந்தது. அவளை ஒருமுறை பார்த்து விட்டு ஒன்றும் சொல்லத் தோன்றாமல் அங்கிருந்து சென்றுவிட்டேன். அப்படியென்ன பிரச்சினையாக இருக்கும் என்று ஒரே கவலை. என் அறைக்குள் போனவுடன் பியுனை அனுப்பி சாரிகாவை அழைத்து வரச் சொன்னேன்.
                           விஷயம் இதுதான். ஒருநாள் நீரஜ் வகுப்பிற்கு மொபைல் கொண்டு வ்ந்திருக்கிறான்.அதைத் தெரிந்து கொண்ட சாரிகா எப்பவும் போல "நீ செய்தது தப்பு உடனே இதை வகுப்பாசிரியரிடம் கொடுத்து விடு" என்று எடுத்துக் கூற நீரஜ் மறுக்க இந்தப் பெண் வகுப்பாசிரியரிடம் நீரஜ் மொபைல் கொண்டு வந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறாள். அங்கே ஆரம்பித்திருக்கிறது பிரச்சினை.

                               ஏற்கெனவே படிப்பில் நீரஜ் முன்னணியில் இருந்திருக்கிறான். சாரிகா இந்த வருடம் சேர்ந்த மாணவி. வந்த சில நாட்களிலேயே படிப்பில் எல்லா ஆசிரியர்களின் வாயிலும் சாரிகா சாரிகாதான். ஏற்கெனவே இந்தக் காரணத்தினால் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்த நீரஜ், மொபைல் கொண்டு வந்ததைக் காட்டிக் கொடுத்தவுடன் மனதில் வன்மம் அதிகமாக தினமும் ஒரு கடிதத்தைக் கம்ப்யுட்டரில் டைப்படித்து சாரிகாவின் பையினுள் வைத்திருக்கிறான்.

                 அதில் வரும் வாசகங்கள் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு மனதை ரணமாக்கும் வார்த்தைகள். சாரிகாவின் அப்பாம்மாவைத் தவறாகச் சித்தரிக்கும் வாசகங்கள். நாளைக்கு உன் பையிலிருந்து தவறான புத்தகங்கள் ஆசிரியரால் கண்டு பிடிக்கப் படும் என்றும் நீ அனுப்பியதாகத் தவறான் வாசகங்கள் கொண்ட எஸ்.எம்.எஸ் ஆசிரியரின் பார்வைக்குப் போகுமென்றும் கடிதம் வைத்தவன் அதிர்ச்சி தருவதாக "இன்று நீ உயிரோடிருக்கும் கடைசி நாள் "என்றும் ஒரு கடிதம் வைத்திருக்கிறான் .

                   அவ்வளவையும் யாரிடம் சொல்வதெனத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்திருக்கிறது இந்த அப்பாவிப் பெண் சாரிகா. அம்மா அப்பாவிடம் சொன்னால் என்ன ஆகுமோ என்று பயம். வகுப்பாசிரியரிடம் கூடக் கூற முடியாத பயம். தினம் வகுப்பிற்குப் போனாலும் தூர நின்று பாடம் மட்டுமே நடத்தும் வகுப்பாசிரியரின் தவறும் கூட இந்தப் பிரச்சினைக்குக் காரணமாயிருக்கலாம் .
              இவ்வ்ளோ சின்ன வயதில்  மனதிற்குள் இவ்வளவு வெறுப்பு எங்கிருந்து வந்தது? இதற்குக் காரணங்கள் என்று எவையெல்லாவற்றையும் யார் முன்னால் எடுத்து வைப்பது ? இப்படியெல்லாம் ஒரு பெண்ணை மனக் கஷ்டத்துக்குள்ளாக்கலாம் என்று எங்கிருந்து கற்றுக் கொண்டான் நீரஜ்? இப்படிப் பேப்பரில் எழுதிப் பிரச்சினைகளை வெளிப்படுத்திக் கொள்ள முடியாத எத்தனையோ சாரிகாக்கள் இருக்கலாம். அவர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு?
                                  நட்பென்றால் ஃபேஸ் புக் நட்புக்குக் கூட உயிரை விடத் தயாராயிருக்கும் அன்பை வைத்திருக்கும் இவர்கள் வெறுப்பென்றால் எந்த நிலைக்கும் போய் உயிரை எடுக்கவும் தயாராயிருக்கும் இந்தத் தலைமுறையினை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

Wednesday, June 29, 2011

ஜஸ்ட் ஒரே வாரம் :(

          எப்படி ஒரு வாரத்துக்குள்ளே எல்லோரையும் பார்த்து ஒரு வருடக் கதையைப் பேசி முடிச்சேன்னு எனக்கே ஆச்சரியமா இருக்கு!!! ஆமா இந்த தடவை தமிழ்நாடு விஸிட் ஜஸ்ட் ஒரே வாரம்தான். எப்பவும் போல இந்த தடவையும் சென்னை போன போது பாண்டிச்சேரி மதர் ஆஷ்ரம் போயிருந்தோம். இந்த முறையும் புக்கிங்க் செய்யும் போது செய்த குழறுபடியால் ஆரோவில் உள்ள மாத்ரி மந்திர் என்ற ஒரு வட்ட வடிவான சர்வ சமயப் பிரார்த்தனைக் கூடத்திற்குள் செல்ல முடியவில்லை. இங்கு செல்வதென்றால், ஓரிரு நாட்களுக்கு முன்பே முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். 
                                மாத்ரி மந்திர்
124 நாடுகளில் இருந்தும் வந்திருந்த அதன் பிரதிநிதிகள், தங்கள் தாய் நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு கைபிடி மண்ணை, மனித இன ஒற்றுமையின் அடையாளத்தை வெளிபடுத்தும் வண்ணம் ஒரே இடத்தில் குவித்து இந்த மந்திர் கட்டப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
                               வரவேற்பது போல நீர்ச் சுழல்! 
                               
   வழி நெடுக மூங்கில் காடு! அனைவரையும் ஈர்ப்பது சுற்றியுள்ள இயற்கை எழில். மூங்கில் மரங்கள் ஒரு பக்கம் விதம் விதமான மரங்கள் ஒரு பக்கமுமாக பின்னிப் பிணைந்து ஒரே மரமாக வளர்ந்து    
                         கிடக்கின்றது
அடித்துக் கிளப்பும் வெயிலிலும் குளிர் நிழல் தரும் மரக் கூட்டம்!

    மாத்ரி மந்திரின் சிறிய மாதிரியும் அதன் உள்கட்டமைப்புகளும் முகப்பில் உள்ள இன்ஃபர்மேஷன் சென்டரில் வைக்கப் பட்டிருக்கிறது.

            உள்ளே நுழைந்த நேரத்திலிருந்து இசைத்துக் கொண்டிருக்கும் உயர்ந்த மரத்தில் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும் விண்ட் சைம் ஒரு இனிமையான மன அமைதி கிடைக்கும் ஒரு வித்தியாசமான உணர்வு கொடுத்துக் கொண்டேயிருக்கிறது.

Thursday, June 2, 2011

புகுந்து கொள்கிறது பொய்யும்.....

எந்தப் பேனாவால் எழுதினாலும்
எந்த மொழியில் எழுதினாலும் அதனுள்
கொஞ்சம் புகுந்து கொள்கிறது
பொய்யும்.....

எந்த தேசம் சுற்றினாலும்
எந்த உயரம் பறந்தாலும்
எந்தக் கடலின் ஆழம் அறிந்தாலும்
ஒடுங்கிக் கொள்ளத் தேவைப்படுகிறது
வீடும்

எத்தனை நிறைவேறிய
கனவுகள் முடிந்தாலும் ஒவ்வொரு
கனவின் முடிவிலும்
உயிர்ப்பித்துக் கொள்கிறது
ஒரு புதுக் கனவும்!

Saturday, May 28, 2011

அது ஒரு காலம்....

ஊருக்கு வரும்போதெல்லாம்
அம்மம்மாவின் சுருக்குப் பை
கொண்டு வந்த கனவுகள்
கழுத்துவரை உண்டு...
அது ஒரு காலம்....

காது குடையும் கோழிச்  சிறகும
கொஞ்சம் சில்லறையும்
கசங்கிய ஒத்த ரூபா நோட்டுக்களும்
எப்போதும்  கொண்டு வரும்
பெரும் பிரியத்தையும்
சுமந்திருக்கும் அந்தச்
சுருக்குப் பையைத் திறந்து
வாசம் பிடிச்சது ஒரு காலம்...

ஒல்லிக்குச்சி பாட்டிகள் எல்லோரின்
முகங்களும் ஒரே மாதிரியானதாக
சுருக்கங்களுடனும், இடுப்பில்
சுருக்குப் பைகளுடன்
பை நிறைய பிரியங்களுடனும்
இருக்கிறது எல்லா ஊரின்
அம்மம்மாக்களின் அடையாளங்களாய்...
என மயங்கியது ஒரு காலம்..

பட்டுத் துணியின் சுருக்குப் பையினுள்
சில்லறைகளுக்காக கைவிட்ட
சுருங்கிய கை விரல்களை இறுக்கி
"இதை எல்லோர் முன்னாலேயும்
வெளியே ஏன் எடுக்கிறே?"
என்று எரிச்சல்பட்டு
முகம் வாடிய அம்மம்மாவைக்
"கிழவி உயிரை எடுக்குது" ன்னு
சொல்ல வைத்ததுவும்
ஒரு காலம்.......


Monday, May 2, 2011

நினைவு வந்து விடாமலிருக்க...

மீன் தொட்டியில் கொஞ்சம் 
ப்ளாஸ்டிக் இலைகளையும்
செயற்கை அருவியும்
கூழாங்கற்களையும்
போட்டு வைத்தாள்
மீனுக்கு ஆற்று நினைவு
வந்து விடாமலிருக்க...

குருவிக்கூண்டில்
குட்டிக் குட்டியாய்
ப்ளாஸ்டிக் மரம் நட்டு
கிளை, பூ, பழம் 
தொங்க விட்டாள்
குருவிக்குக் கூடு நினைவு
வந்து விடாமலிருக்க...

அம்மா செருப்பு 
மாட்டிக் கொண்டே 
"ஆயாம்மாகிட்டே சேட்டை
பண்ணாம, அழாம இருக்கணும்..
சாக்லேட் வச்சிருக்கேன்" என்றாள்
பாப்பாவுக்கு அம்மா நினைவு
வந்து விடாமலிருக்க...

Monday, April 4, 2011

எங்க வீட்டில் துளசி மேடம்!

தன்னை நேசிக்க ஆட்களைச் சேகரிக்கும் வித்தை சிலருக்குத்தான் வாய்க்கும். அதில் துளசி மேடம் அவர்களுக்கு முதலிடம். மார்ச் முதல் வாரத்தில் ஒரு பின்னூட்டம் ஜெய்ப்பூர் வரும் ப்ளானிருக்கிறது. உங்களைச் சந்திக்க விருப்பம் என்று. அதற்கப்புறம் மடலிலும் பேசி நாள் முடிவு செய்தவுடன் தெரிவித்து அப்புறம் ஏப்ரல் 2ம் தேதி வந்திறங்கியவுடன் நலம் விசாரித்து ப்ரோக்ராம் பற்றி அறிந்து அப்புறமாய் முக்கியமான பதிவர் சந்திப்பைப் பற்றி எப்போ எங்கே என முடிவும் செய்து கொண்டோம். ஏப்ரல் மூன்றாம் தேதி காலையிலிருந்தே ஒரு பரபரப்பில் எதிர்பார்ப்பில் இருந்தோம்.யார் வர்றாங்க யார் வர்றாங்கன்னு கேட்டு அரித்துக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு கூகிள் பண்ணி துளசி அவர்களின் ஃபோட்டோவைக் காட்டியாச்சு!
                    
                                     கொஞ்சம் வீட்டைக் கண்டுபிடிக்க சிரமப்பட்டார்கள்.உடனே இவங்களை அனுப்பி ம்ம்ம் ஒருவழியாக வந்து சேர்ந்தார்கள் துளசி மேடமும் கோபால் அவர்களும்.அப்புறமென்ன?முதல் முதலில் பார்க்கிறோம் என்னும் உணர்வேயில்லாத சந்திப்பு! ரொம்பப் பழகியவர்கள் போல் அவர்களும் நாங்களும் குழந்தைகளும் ஒட்டிக் கொண்டோம். ஒருமணி நேரம் போனதே தெரியவில்லை. ஒரே கலகல!கொஞ்சம் நேரத்துக்கு யாரோ உறவினர்கள் வந்துவிட்டுப் போன உணர்வு.இது என்ன உணர்வு?எப்படி இப்படி ஒரு ஒட்டுதல்?எப்பிடி இது சாத்தியம்?என்று நிறைய கேள்விகள். ஒரு வலைப்பூவில் எழுதுவது இப்படியெல்லாம் நட்புகளையும் உறவுகளையும் ஏற்படுத்தும் என்பது ஒரு இனிமையான உணர்வைத் தந்தது.ம்ம்ம்.... இனி நியுசீலாந்தில் எனக்கு ஒரு சொந்தம் இருக்குன்னு சொல்லிக் கொள்ளலாம்!

Thursday, March 31, 2011

ராஜஸ்தான் திவஸ் கொண்டாட்டங்கள்!

                        மார்ச் 28 முதல் 30 வரை ராஜஸ்தான் திவஸ் இங்கே ராஜஸ்தான் முழுக்கக் கொண்டாடப்படுகிறது. 28ம் தேதி குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி ஃபில்ம் ஷோ, கொஞ்சம் கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றது.அதில் கலந்து கொள்ள என் பெண்ணையும் அழைத்துச் சென்றிருந்தேன்.ஏதோ நம்ம பங்களிப்பு கொண்டாட்டத்தில்!













ஏதோ முக்கியமான விபரம் எனத் தெரிகிறது.ஆனால் புரியவில்லை.அங்கிருப்பவர்களிடம் கேட்டும் சரியான விடை கிடைக்கவில்லை!

குழந்தைகளை மகிழ்விக்க மாறுவேடத்தில் கலைஞர்கள்!


 மொத்தத்தில் மற்றுமொரு குழந்தைகள் தினம்!

Tuesday, March 22, 2011

எவ்வ்ளோ புரிஞ்சிருக்கீங்க மேம்?

முதல் நாள் அம்மா வலுக்கட்டாயமா அழ அழ என்னை விட்டுட்டுப் போன உடனே உங்க கையைத்தானே மேம் பிடிச்சுக்கிட்டேன். அதை எப்போதும் பிடிச்சுட்டேயிருக்கணும்னு ஆசையாதான் இருந்துச்சு. ஆனா நீங்க உடனே என் கையை விட்டுட்டு உங்க நோட்புக்கை எடுத்து வச்சுட்டு ஏதோ எழுதப் போனீங்களே டீச்சர் அன்னியிலிருந்து உங்கமேல ஒரே கோபமா வந்துச்சு டீச்சர். முதல் நாள் டாய்லெட் போன போது ஆயாம்மா கோபமா ட்ரெஸ் கழற்றி விட்டதனாலே எனக்கு ஆயாம்மா பிடிக்கவே பிடிக்காது.

என்னிக்காவது நாங்க சொல்ற மாதிரி எங்களை விளையாட விட்டுருக்கீங்களா? எப்பவும் நீங்க நினைக்கிற, சொல்லுற விளையாட்டைத்தானே விளையாடச் சொல்றீங்க... எனக்கு என்னிஷ்டம் போல விளையாடணும்னு ஆசைஆசையா இருக்கும். அப்புறம் எனக்கு ரவிகிட்டேயும்,மலர் பக்கத்திலேயும்தான் உக்கார்ந்துக்கணும்னு ஆசை... நீங்க க்ளாஸ்லே வந்தவுடனே ரொம்ப பேசறீங்கன்னு எங்களை ஆளுக்கொரு மூலைக்கா உக்கார வச்சுருவீங்க.. எனக்கு அழுகை அழுகையா வரும். அப்புறம் எனக்கு அவசரமா டாய்லெட் போணும்னாலும் உடனே அனுப்பமாட்டீங்க...அப்பவும் எனக்கு அழுகை அழுகையா வரும

ஸ்கூலுக்கு வந்தவுடன் அம்மா நினைப்பா வரும்....உடனே பிஸ்கெட் சப்பிடணும்னு இருக்கும். அதான் முடியாதே பெல் அடிச்சப்புறம்தான் லன்ச் பாக்ஸ் திறக்கணும்னு சொல்வீங்க. தண்ணி குடிக்கணும்னா எல்லாரும் லைன்லே போய்தான் குடிக்கணும்.கலரடிக்கணும்னு இருக்கும் போது எழுதச் சொல்வீங்க. எழுதணும்னு இருக்கும் போது விளையாடச் சொல்வீங்க.விளையாடணும்னு இருக்கும் போது ஓரல்ஸ் சொல்லச் சொல்வீங்க.

ஆர்ட் ஆக்டிவிடி நான் நல்லா பண்ணமாட்டேங்கிறேன்னு நீங்களே பண்ணி நோட்டில ஒட்டிர்றீங்க......எனக்கு அதை நானே செய்யணும்னு ஆசையா இருக்கும். நான் அழுதா உடனே சுவர் பக்கம் திரும்பி நிக்கச் சொல்லி பனிஷ் பண்ணுறீங்க. நீங்க பக்கத்து க்ளாஸ் மேம் கிட்டே நீங்க சிரிச்சு சிரிச்சு பேசுறது எனக்குப் பிடிக்கவே பிடிக்காது மேம்.

A for appleனுதான் சொல்லணுமா ?A for Air னு சொல்லக்கூடாதா? எனக்கு எப்பதான் மழை வரும்னு இருக்கும் கப்பல் செய்து விளையாடாலாம்னு இருக்கும்.நீங்க Rain Rain go away பாடச் சொல்வீங்க

உங்க மேஜை கிட்டே வந்து நின்னு உங்ககிட்டே பேசிட்டேயிருக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கும் மேம். நீங்கதான் உடனேயே "go to your place" அப்படீன்னு சொல்லிருவீங்களே. சொன்னவுடனே கேட்கணும் உங்களுக்கு .இல்லைன்னா நீங்க கோபமாக் கத்திருவீங்க. அது எனக்கு ரொம்ப பயம். நீங்க கோபமாயிருக்கும் போது நாங்கல்லாம் கப்சிப்னு இருந்துடுவோம்....இல்லாட்டி அடி விழுந்துருமே...

உங்களைப் பற்றி இந்த ஒரு வருஷத்துலே இவ்வ்ளோ புரிஞ்சு வச்சிருக்கேனே நீங்க என்னைப் பற்றி எவ்வ்ளோ புரிஞ்சிருக்கீங்க மேம்?

Monday, March 14, 2011

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்!-10

மூடித் திறந்த பூ இதழ்களிருந்து
விடுதலையாகியது
தேனீ

தீப்பெட்டிக்குள் ஒளிந்து கொண்ட
கூட்டுப் புழு உயிர்த்தெழுந்தது
வண்ணத்துப் பூச்சியாய்

நிழல் தேடி ஒடுங்கிக் கொண்ட
இடம் விட்டு மரத்தினடியில்
ஒடுங்கியது நாய்

மத்தியானத்துக்கு மட்டும்
சுகமாகத் தூங்க அடுப்பங்கரையில்
இடம் மாறியது பூனை..

சில மாதம் மட்டும்
இந்தியாவிலிருந்து சைபீரியாவுக்குப்
பறந்து கொண்டிருந்தன
சில பறவைகள்...

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்!

Sunday, March 6, 2011

அன்னிக்கு ஒருநாள் ஸ்டாராயிட்டோமில்லே!

                     இந்த ஒரு வாரமும் சும்மா கலகலன்னு போச்சு. வந்தவங்கல்லாம் திரும்பி வந்தாங்க, வராதவங்கல்லாம் விரும்பி வந்தாங்க. ஒரே நேரத்துலே ஆன்லைன்லே 20 பேர் முதல் தடவையா பார்த்துருக்கேன். எப்போ பார்த்தாலும் ஒரே ஜே ஜேன்னு இருந்தது...
சரி நாமளும் "ஒரு வாரத்துக்கு ஷ்டாராயிட்டோம்லே"ன்னு பெருமையா பதிவே போடலாம்.
இதே மாதிரியான பதிவாலேதான் என் வலைப்பூவுக்கு கொஞ்சம் கொஞ்சமா மக்கள் வர ஆரம்பிச்சாங்க! அதனோட மலரும் நினைவுகள்.
அன்னிக்கு ஒருநாள் ஜெயிலுக்குப் போனோமில்லே !
அன்னிக்கு ஒருநாள் எங்க வீட்டுக்கு முதலை வந்துச்சே!
அன்னிக்கு ஒருநாள் பூசாரியாகிட்டோமில்லே!
இந்த வரிசையிலே கதாநாயகி, திருடன், முட்டாள், வில்லி(வில்லன் பெண்பால்) இப்படி நிறைய எழுதிருக்கேன்!
என் கவிதையில் பிடித்தது
கை விரித்துச் சிரித்தது மரம்!
உணர்வு பூர்வமான இடுகையில்
என் வீட்டுக் கதையிது
நகைச்சுவையில்
அதுவா??இதுவா??
என் கதையில்
குலோப்ஜாமுனும், சாமியும், எறும்பும்
அன்பானாலும் சரி, காதலானாலும் சரி, நட்பானாலும் சரி, அறிவுரையானாலும் சரி, நல்லவைகள் அனைத்தும் விதைகள் போன்றவை. என்றாவது ஒருநாள் எங்காவது உயிர் கொண்டெழும். அதனால்!!....
விதை உறங்கும்
நிலங்களைத் தண்ணீர்
தெளித்துத் தட்டியெழுப்புங்கள்

உயிரைக் கட்டிக் காத்துக்
கொண்டிருக்கும் விதைகள்.
கைகள் நிறைய அள்ளுங்கள்
விதைகளை.....

கைக்கெட்டா தூரம்
வரை விசிறியடியுங்கள்
விதைகளை....

ஒரு பறவையின்
நோக்கத்தோடு
பறந்து பறந்து
விதை தூவுங்கள்...

எங்கேனும் அவை
தன் வேரை
ஊன்றிக் கொள்ளட்டும்.
மழை குடிக்கட்டும்.
காற்றைச் சுவாசிக்கட்டும்....
வெயிலை உடுத்தட்டும்.

என்றேனும் ஒருநாள்
யாருக்கேனும்
இலை உதிர்க்கட்டும்...
நிழல் கொடுக்கட்டும்.....
பழம் கொடுக்கட்டும்
பூக்கள் கொட்டட்டும்.

கொஞ்சமாய் உலகம்
துளிர்த்துக் கொள்ளட்டும்!!

வாய்ப்பளித்த தமிழ்மணத்திற்கு நன்றி!
மீண்டும் சந்திப்போம்! வர்ட்டா???!!

Saturday, March 5, 2011

அப்பா இறந்த பின்னர் செய்த கள்ளத்தனங்கள்...

அலமாரி திறந்து
கொள்ளையடிக்கும்
கள்ளத்தனத்துடன்
அம்மாவுக்குத் தெரியாமல்
நுகர்ந்ததுண்டு அப்பாவின்
வியர்வைச் சட்டை...

அம்மா தூங்கும் போது
அம்மாவுக்குத் தெரியாமல்
பொட்டு வைத்துப்
பார்த்ததுண்டு அம்மாவின்
நெற்றியில்...

யாருக்கும் தெரியாமல்
அப்பாவின் செருப்புக்குள் கால்
நுழைத்து ஒரு நடை நடந்து
பின் துடைத்து
அதே இடத்தில்
வைத்து விடுவதுண்டு

அப்பாவின் துண்டுடன் 
குளியலறை நுழைந்து
அடக்க முடியாமல் வாய்
பொத்தி அழுததுண்டு...

நடு இரவில் போர்வைக்குள்
முகம் புதைத்து
அப்பா என ரகசியமாய்
அழைத்துப் பார்ப்பதுண்டு...

அப்பா புகைப்படத்தில்
வைத்த பொட்டை அழித்து
அப்பாவைத் திருப்பிக்
கொண்டுவர நினைத்ததுண்டு...

மரணமே நிகழாத வீட்டில்
இருந்து ஒரே ஒரு பிடி
கடுகு வாங்கி வர
வீதி வீதியாய் அலைந்ததுண்டு....

பசிக்கும் கொலைப்
பட்டினியில் காலி
அரிசி டப்பா பார்த்து
"என்னமோ தெரியவில்லை
இப்போலாம் பசிப்பதேயில்லை"
எனப் பொய் சொல்வதுண்டு
அம்மாவிடம்...

தூங்குவது போல நடிக்கையில்
தலை வருடும் கைகளும்
அடிக்கடி அம்மாவின் கன்னம்
நனைக்கும் நீரும் சொல்லியது....

"எனக்கு எல்லாம் தெரியுமென்று"...

Friday, March 4, 2011

பேனாக் காலம்!

               எங்க அம்மா காலத்தில் மைக்கூடும் மரக்கட்டைப் பேனாவும்....மையைத் தொட்டுத் தொட்டு எழுதவேண்டும். ஆறாம் வகுப்புக்கு மேல்தான் மை பேனா. தினமும் அம்மாவின் அம்மாவிடம் இருந்து அம்ம்மாவுக்குத் திட்டு விழும். ஒரு நாளாவது சட்டையை மையாக்காமல் வர்றியா? அப்படீன்னு....காலையில் எழுந்ததும் குடத்தைத் தூக்கிட்டு ஆற்றுக்குப் போகணும் தண்ணி கொண்டுவர.....வரும் போதே ஆற்றில் குளித்து விட்டு வர வேண்டும்....வந்ததும் தீக்குச்சிக் கட்டை அடுக்கவேண்டும்...குறைந்தது பத்துக் கட்டையாவது அடுக்கவேண்டும்....அப்புறம்தான் பள்ளிக்கு....

             அதுவும் இப்போ மாதிரி வீட்டு முன்னாலெல்லாம் எந்த வாகனமும் வந்து ஏற்றிச் செல்லாது.லொங்கு லொங்கு என்று பள்ளிக்கு ஓடவேண்டும்.அப்படி ஓடும் போது மைக்கூட்டிலிருந்து மை கொட்டிக் கறையாக்காமல் எப்படிப் போக?பள்ளியில் ஏன் இப்பிடி மைக்கறையோடு வர்றேன்னு கேம்ஸ் ஆசிரியர் தோலை உரிப்பார்.வீட்டுக்குப் போனா அம்மாவின் வசவுகள்....இப்படித்தான் நகர்ந்தது பேனாக்காலம் அம்மாவுக்கு...

          அப்புறம் என் காலம். ஐந்தாம் வகுப்பிலேயே மை பேனா.ஆனால் மைக்கூடெலாம் இல்லை..மரக்கட்டைப்பேனாவும் இல்லை.நல்ல அழகான குண்டு பேனா.கேம்லின் பேனாக்கள்...புதுசு புதுசான நிறங்களிலும் தங்க நிற வளையம் மூடியின் மேல்.மை பாட்டில்,மை நிரப்ப ரப்பர் ஃபில்லர்....அந்த ஃபில்லரை உபயோகிக்க நடக்கும் போட்டியோ போட்டி!

                 அப்புறம் அழகழகான ஹீரோ பேனாக்கள்.தங்க நிற மூடியுடன்.அப்பொவெல்லாம் "அதுமட்டும் கிடைச்சுடணும் சாமி உலகத்துலே எதுவும் வேண்டாம்"னு வேண்டியிருக்கேன்னா பார்த்துக்கோங்க. எனக்கு ஒரு பேனா வாங்கித் தந்தால் அது எவ்வளவு ஒழுகினாலும் நூல் சுற்றி எடுத்துப் போகவேண்டும். அதைத் துடைப்பதற்காகத் தனியே துணி ஒன்று ஜாமெட்ரி பாஃக்ஸில் ஒளிந்திருக்கும்.நிப் உடைந்தால் நிப் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் புதுப் பேனா ஒரு வருடத்திற்கு ஒன்று கிடைத்தாலே அதிகம்.

                பொண்ணுங்க எல்லம் பேனாக்களை டப்பாவுக்குள் பூட்டி வைக்க ஒழுகும் பேனாக்கள் பையன்களின் சட்டைப்பையை நீலமாக்கி அப்போதும் பி.டி வாத்தியாரிடம் அடிவாங்க வைத்தது. வாத்தியாரெல்லாம் ஹீரோ பேனாக்களுக்கு மாறி விட்டிருந்தார்கள். பால் பாயின்ட் பேனா பழக்கத்திற்கு வந்திருந்தது. அதன் லீக் ஆகாத தன்மை,நோட்டில் மை கொட்டாத வித்தை பள்ளிக் கூடத்தில் அனைவரையும் ஒன்று சேரத் தன் பக்கம் இழுத்துக் கொண்டது.

     இப்போ என் பொண்ணுங்க மை பேனாவா?அய்யே...என்கிறார்கள்.பால் பாயின்ட் பேனாவா.....போங்கம்மா....ரோட் ப்ரேக்கர் என்கிறார்கள். இப்போலாம் வழ வழன்னு எழுதும் ஜெல் பேனாதான்.வாங்கிட்டு வரும்போதே பத்து இருபது ஒரு சேர வாங்கிக் கொள்கிறார்கள். இன்னமும் என்னிடம் ஒரு பத்து மைப்பேனா பத்திரமாக வைத்திருக்கிறேன் சில நினைவுகளின் உறைவிடமாக.....அவ்வப்போது கன்னத்தில் அது தரும் சில்லிப்புக்காக உரசிக் கொள்கிறேன். இது முதல்லே வாங்கின பேனா..இது மாமா வாங்கித் தந்தது, இது பரிசு கிடைத்தது அப்படீன்னு வரிசைப் படுத்த முடியும்.

           இப்போதும் யாராவது பேனா கேட்டால் மூடியைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டு கொடுப்பேன்....கண்டிப்பாகப் பேனா திரும்பி வந்துவிடும் என்ற நினைப்பில்தான்...புதுப் பேனாவும் அதால் முதல் முதல் நம்ம பெயரை எழுதி எழுதிப் பார்ப்பதே ஒரு ஆனந்தம்.இப்போ யாருக்காவது பேனா பரிசாகக் கொடுக்கச் சொன்னால்...ஐயே பேனாவெல்லாம் யாராவது வாங்கிக் கொடுப்பாங்களா? போங்கம்மா...என்னும் போதும்...................

           எழுதி முடிந்த பேனாக்களை நிமிடத்தில் குப்பைக் கூடைக்குள் "Use and throwமா" என்று தூக்கியெறியும் போதும் கொஞ்சம் மனது வலிக்கத்தான் செய்கிறது!
                  பேனாக்காலம் பற்றிப் பேசும் போது பேனா நட்பும் நினைவுக்கு வருகிறது. எங்கேயோ இருப்பவர்களிடம் கடிதம் மூலமாகத் தொடர்பு கொண்ட நாட்களும், விஷயங்களைப் பகிர்ந்து கொண்ட நாட்களும், ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு அந்த நட்பைப் போற்றித் தொடர்ந்த கடிதங்களும், ஒரு மாதத்துக்கு ஒன்றாய் வந்தாலும் அந்தக் கடிதம் கொண்டு வரும் உறவுப் பாலத்துக்காய்க் காத்துக் கிடந்ததுவும் ஒவ்வொன்றாய் மனதுக்குள் ஊஞ்சலாடுகிறது.

ம்ம்ம்...இப்போலாம் நாளுக்கு ஐம்பது நட்புகள் நட்புக் கணக்கில் ஏறிக் கொள்கிறது! இந்தக் கூட்டத்தில் உன்னைத் தொலைத்து விட்டேன் கேதெரீன் டௌஷ் (Catherine Douche) பேனா நட்பே எங்கிருக்கிறாய் நீ???

Thursday, March 3, 2011

உதய்ப்பூர் ஒரு அழகிய புகைப்படப் பயணம்.

ஒவ்வொன்றாய் விளக்கப் போவதில்லை.உதய்ப்பூர் அரண்மனை,முகப்பு,கதவு,அரண்மனையின் உள்புறம்,தோட்டம்,ரஜா ராணி உபயோகித்த பொருட்கள் என அனைத்தும் அழகியல் சார்ந்தவை. படித்தல்ல.....பார்த்து ரசிக்க வேண்டியவை. பார்க்கும் போது என்னே ஒரு ராஜபோக வாழ்வு என எண்ணத் தோன்றுகிறது!