எனக்கு மட்டும் ஏனிப்படீன்னு மண்ணில் புரண்டு புரண்டு அழணும் போல இருக்கும் பரீட்சைக் காலங்களை நினைத்தாலே.சிலேட்டுலே எழுதணும்னா ஸ்லேட்டுக் குசி உடைஞ்சு உடைஞ்சு போகும்.பென்சிலாலே எழுதணும்னா பென்சில் முனை உடைஞ்சு உடைஞ்சு போகும்.பேனாவாலே எழுதணும்னா நிப் உடைஞ்சு உடைஞ்சு போகும்.கையெல்லாம் வேர்த்து வேர்த்து ஊத்தும். வார்னிங்க் பெல் அடிச்சப்புறமும் புத்தகத்தை விட்டுப் பிரிய முடியாமல் திருப்பித் திருப்பிப் படிக்கும் ரகம் நான். இத்தனைக்கும் கொஞ்சம் நல்லாவே படிப்பேன்.
ஆங்கிலப் பரீட்சையின் போது like வார்த்தையில் வாக்கியம் அமைக்க வேண்டும்.....பக்கத்திலிருந்த ப்ரிட்டானிக்கா பிஸ்கட் டப்பாவில் எழுதியிருந்த biscuits பார்த்து "I like biscuits" என்று எழுதியதுதான் நான் அடித்த முதல் காப்பி.நோட்டில் எழுதிப் போட்ட வாக்கியம் "I like cakes"....அதை எழுதாதாலோ என்னவோ மிஸ் அதை அடித்துத் திருத்தியதால் 100க்கு 99 மார்க்கில் நின்று போனேன்.அதிலிருந்து சொந்தமாக எழுதுவதை நிறுத்திவிட்டேன்.
அப்புறமாய் வந்த பரீட்சைகளில் நேரத்தையும் எனர்ஜியையும் தூக்கத்தையும் தொலைத்து மார்க் பின்னால் ஓடி ஓடிக் கொஞ்சம் அடைந்தும் நிறைய அடையாமலும்......இன்னமும் கண்ணில் ஏமாற்றத்துடன் நிமிர்ந்து பார்க்கும் இடம் மெடிகல் சீட்.பெர்சனல் இன்டர்வியு வரை அழைப்பு வந்த பின்னும் போய் பங்கு கொள்ள முடியாத பணக்கஷ்டம்....மனக் கஷ்டமும்தான் இப்போ வரைக்கும்.ம்ம்ம்ம்ம்ம் சரி விடுங்க....ஒரு நல்ல டாக்டரை இந்த மருத்துவ உலகம் இழந்து விட்டது!!!! !!!!!
பரீட்சையின் போது யாருக்கும் காட்டவும் கூடாது...யாரையும் பார்த்தும் எழுதக் கூடாதுன்னு ஒரு அதி பயங்கரக் கொள்கைவாதியாகவே இருந்திருக்கிறேன்.யுனிவெர்சிட்டிகளின் நிலை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த ஒரு பரீட்சை எம்.ஃபில்.இங்கே ஜெய்ப்பூரில்தான் எழுதினேன் .தமிழகத்தைச் சேர்ந்த ஒரு யுனிவெர்சிட்டிதான்.இங்கேயுள்ளவர்கள்தான் சென்டர் இன் சார்ஜ்.
பரிட்சை நேரம் மதியம் 2 மணி.திடீரென ஒரு ஃபோன் கால் பரீட்சை 12 மணிக்கு ஆரம்பித்து விடும்னும் சீக்கிரம் வாங்கன்னும்.நான் இருந்த இடத்திலிருந்து போய்ச் சேருவதற்கு மணி ஒன்றரையாகி விட்டது.பரீட்சை ஆரம்பித்து விட்டது.பரீட்சை ஹால் அமைதியாக இருந்தது.எல்லோரும் புத்தகத்தைக் கையில் வைத்துப் பார்த்து எழுதிக் கொண்டிருந்தார்கள்.Mass copying!.அமைதியாக என் இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டேன்.நடப்பதைப் பார்த்து வேர்த்து ஊத்தியது.கேள்வித்தாளைப் பார்த்தால் ஒண்ணுமே தெரியாதது போலிருந்தது.இந்த இடத்தில் பரீட்சை எழுதி என்னத்தைக் கிழிக்க என்னும் எண்ணத்துடன் எழுந்து கொண்டேன்.நமக்கு முந்தி நம்ம கண்ணீர்தான் நம்மளைக் காட்டிக் கொடுத்து விடுமே ...பக்கத்திலிருந்த மாணவன் கேட்டான்."என்னாச்சு மேம்?"
"பரீட்சை எழுதி என்ன ஆகப் போகுது?அதான் போறேன்".
"மேம்..நீங்க போறதினாலெ யாருக்கு நஷ்டம்...நல்லா யோசிச்சுப் பாருங்க.உங்களுக்குப் பிடிக்கலைன்னா நீங்க பார்த்து எழுதாதீங்க.உங்க படிப்பு எதுக்கு வீணாகணும்.?" என்று சொல்லி விட்டு அவன் பாட்டுக்கு எழுத ஆரம்பித்து விட்டான்.
சரின்னு அமைதியா எழுத ஆரம்பித்தேன்.எனக்குத் தெரிந்ததை எழுதி முடித்து வெளியில் வந்ததும் அதே பையனும் இன்னொருவனும் மேம் இப்படி ஒரு வாய்ப்பு அமைந்தும் காப்பியடிக்காமல் எழுதினீங்களே மேம்.உங்களுக்கு ஒரு சல்யூட்.....என்றார்கள்.
கொஞ்சமாய் மீண்டும் கண்ணில் நீர் எட்டிப் பார்த்தது.
அது எனக்காகவா?
அல்லது
வருங்கால சமுதாயத்துக்காகவா????
என்று இன்னமும் புரியாமல்......
தொடர அழைத்த முல்லைக்கு நன்றி !
தொடர அழைப்பது:
படித்தவுடன் அட!எனக்கும் எழுதணும் போலிருக்குன்னு நினைக்கும் எல்லோரையும்!