நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, June 26, 2012

முன்பு போலில்லை எதுவும்.......

 தொலை பேசியிலும், ஈ- மெயிலிலும் வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்!!!

முன்பு போலில்லை எதுவும்.......

சோத்துத் தட்டு நாலு மூன்றாகியது....
காபிக் கோப்பைகள் பழைய ஞாபகத்தில்
நான்கில் நிரப்பப் பட்டு மூன்றாகிறது...
தோசையும் சப்பாத்தியும் சுடும் பொழுது
எண்ணிக்கையில் உன்னையும்
இன்னமும் சேர்த்துக் கொண்டிருக்கிறது......

உன் பொருட்களை நகர்த்தி வைக்கமுடியாமல்
ஒட்டிக் கொண்டிருக்கின்றன உன் நினைவுகள்
வீடு முழுக்க நிறைந்திருக்கும் உன் வாசனைச்
சிறையிலுருந்து விடுவித்துக் கொள்ளத் தெரியாமல்
விரும்பி அடைபட்டுக் கிடக்கிறோம்....

அழைக்கும் மணியோசைக்கும்
மினுக்கும் உன் முகத்திற்குமாய்
சில மைல்களுக்கப்பாலிருந்தபடி
தொலைபேசியைப் பார்த்துக் காத்திருப்பது
வழக்கமில்லாத வழக்கமாகி விட்டது....

தாரை வார்த்துக் கொடுத்ததும் தண்ணீராய்
உன்னைக் கொடுக்கத்தானா இவையத்தனையும்
என கண்ணில் கட்டிக் கொண்ட நீருடன் 
பிரியங்கள் இத்தனை நாளில்லாத அவசரத்துடன் 
உன்னை இறுக்கமாகப் பற்றிக் கொண்டது அன்று.....

எதற்காக இது அத்தனையும் என்னும் கேள்வியும்
நாமாகவே இழுத்துப்போட்டுக்கொள்கிறவைதானே 
இவை என்ற எண்ணமும்
பெண்ணைப் பெற்ற அனைவரிடமும் எப்போதாவது  
தோன்றியிருக்கலாம்.....என்ற எண்ண விதைகளுடன் 
உன் அம்மா........